திங்கள், 17 செப்டம்பர், 2012

விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள்



விநாயகர் சதுர்த்தி

விநாயக சதுர்த்தி இந்துக்களின்  முக்கியமான பண்டிகையாகும். ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. பொதுவாக விநாயகரின் பிறந்த நாளாக இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது  ஆவணி  மாத அமாவாசைக்கு அடுத்த சதுர்த்தியில் இப்படி பூஜையை ஆரம்பித்து, பௌர்ணமிக்கு அடுத்த சதுர்த்தி வரையில் தினமும் பூஜை செய்வார்கள். அதற்குப் பிறகு மண் பிள்ளையாரை, மேள தாளத்தோடு ஊர்வலமாக எடுத்துப் போய் நதியிலே / ஏரியில்/ கடலில் இறக்கி கரைத்து  விடுவார்கள்.

பிள்ளையாரை களிமண்ணால் செய்தது ஆற்றில் கரைப்பது தான் விசேஷம்.


(விநாயகருக்கு முதன் முதலாக இந்தக் கொழுக்கட்டையை நிவேதனம் செய்தது, வசிஷ்ட முனிவருடைய மனைவியான அருந்ததி.)

பிள்ளையாருக்கு பூக்களால் அலங்காரம் செய்து விட்டு, பிறகு விநாயகர் பாடல்கள் எதை வேண்டுமானாலும் பாடலாம். அவ்வையார் தந்த விநாயகர் அகவல், காரிய சித்தி மாலை படிப்பது விசேஷமான பலன்களைத் தரும். பிள்ளையாருக்கு கொழுக்கட்டை மட்டுமில்லாமல், அவரவர் வசதிக்கேற்ப எள்ளுருண்டை, பாயசம், வடை என்றும் நைவேத்யம் செய்யலாம்.

பால், தேன், வெல்லம், முந்திரி, அவல் என்று ஒவ்வொன்றிலும் சிறிதளவு எடுத்து ஒன்றாகக் கலந்து அதையும் நைவேத்யம் செய்யலாம். நிவேதனப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் 11 அல்லது 21 என்ற கணக்கில் சிலர் வைப்பார்கள். ஆனால், எண்ணிக்கை முக்கியமில்லை; ஈடுபாடுதான் முக்கியம். பிறகு கற்பூரம் காட்டி விரதத்தை முடிக்கலாம்.

இந்த விரதத்தை காலையிலிருந்தே உணவு எதுவும் எடுத்துக் கொள்ளாமல் அனுஷ்டிப்பது மிகவும் விசேஷம். பூஜை நேரம் வரை பட்டினியாக இருப்பது சிறப்பு. சம்பிரதாயம் பார்க்கக் கூடியவர்கள் இந்த விநாயகர் சதுர்த்திக்குப் பிறகும் தொடர்ந்து விரதத்தை அனுசரிப்பார்கள். அப்படித் தொடர்ந்து, பௌர்ணமிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினத்தோடு விரதத்தை நிறைவு செய்வார்கள்.

இத்தனை நாள் விரதத்துக்குப் பிறகுதான் பிள்ளையாரை கிணற்றிலோ அல்லது ஏதாவது நீர்நிலையிலோ கொண்டுபோய் போடுவது வழக்கம்.

பதினைந்து நாள் அனுசரித்தாலும் சரி, விநாயகர் சதுர்த்தி அன்றைக்கு ஒரே ஒருநாள் மட்டும் அனுசரித்தாலும் சரி, மேற்கொள்ளும் விரதத்தை உளப்பூர்வமாகக் கடைப்பிடிக்க வேண்டியதுதான் முக்கியம்.

வருடத்திற்கு ஒருமுறை இப்படி விநாயகர் சதுர்த்தி அனுசரிப்பதுபோல மாதந்தோறும் பௌர்ணமிக்கு அடுத்த சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தியாக அனுஷ்டிக்கப்படுகிறது.

இந்த நாளிலும் விரதம் இருப்பது சிலருடைய வழக்கம். அன்றைக்கு முழுவதும் பட்டினி இருந்து, விநாயகர் சிலை அல்லது படத்துக்கு முன்னால் தீபமேற்றி, விநாயகர் பாடல்கள், ஸ்தோத்திரங்களை பாடி, மாலையில் கொழுக்கட்டை நைவேத்யம் செய்து, பிறகு சந்திர தரிசனம் செய்துவிட்டு எளிமையான உணவை எடுத்துக்கொண்டு விரதத்தை முடிப்பதும் சிலர் வழக்கம்.

இந்த விரதங்களால் உள்ளம் மேன்மைஅடையும்; உடல் ஆரோக்கியம் வளரும்; எல்லா வளங்களும் நிறையும். விரதம் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, அவர்கள் குடும்பத்தினருக்கும், அவர்களை சார்ந்த அனைவருக்கும் விநாயகர் நல்லன எல்லாம் அருள்வார்.

இனி  நைவேத்யங்கள்  பற்றி :( குறைந்தது பன்னிரண்டு முதல் இருபத்தொரு எண்ணிக்கையில்)
அப்பம்
பூரண கொழக்கட்டை
உளுத்தம் கொழக்கட்டை
எள்ளு கொழக்கட்டை
பிடி கொழுக்கட்டை
பால் கொழுக்கட்டை
உருண்டை கொழுக்கட்டை

இதோ உங்களுக்காக:
என்னடா.....இவள் இவ்வளவு வகை எழுதி இருக்காளேன்னு பார்கிறேளா?  மேல்மாவு ஒன்று தான். பூரணங்கள் தான் மாறுபடும். எளிமையாக செய்து விடலாம்.
முடிந்ததை, செய்ய முடிவதைச் செய்யுங்கள்..செய்ததை...பக்தியோடு
பிள்ளையாருக்கு நைவேத்யம் செய்யுங்கள்..அருள் பெருகட்டும்.

அப்பம் - 

இது ரொம்ப நல்ல நைவேத்யம் . இதை கரைத்தும், அரைத்தும் செயலாம் .  நெய்யில் செய்தால் சுவை கூடும்.

தேவையானவை: 
கோதுமை மாவு 1 கப் 
அரிசி மாவு 3/4 கப் 
வெல்லம் 1 கப் 
தேங்காய் துருவல் அல்லது பல்லு பல்லாக நறுக்கினது 3 டேபிள் ஸ்பூன் 
சோடா உப்பு 1 சிட்டிகை 
ஏலப்பொடி 1/2 ஸ்பூன் 
பொரிப்பதற்கு  நெய் 
பூவன் வாழை பழம் 2 

செய்முறை: 

மேலே சொன்ன எல்லா மாவுகளையும் ஒரு பேசினில் போடவும். 
வாழை பழத்தை துருவவும். 
அதில் போடவும். 
ஏலப்பொடி போடவும் 
சோடா உப்பு போடவும் 
வெல்லத்தை துருவி போடவும். 
தேங்காய் துருவல் அல்லது பல்லு பல்லாக நறுக்கினத்தை போடவும் 
எல்லா வற்றையும் நன்கு அழுத்தி பிசையவும். 
கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு கலக்கவும். 
பால் வேண்டுமானாலும் விடலாம். 
தோசை மாவு படத்தில் இருக்கணும். 
அடுப்பில் அப்ப காரலை வைத்து எல்லா குழிகளிலும் நெய் விடவும். 
உருகி சுட்டதும், அப்ப மாவை கரண்டியால் எடுத்து குழிகளில் விடவும். 
மறுபுறம் திருப்பி போட்டு வெந்ததும், அப்ப குச்சியால் எடுக்கவும்.  பந்து போல் அழகாய் மெத் என்று இருக்கும். 
குறிப்பு: அப்ப மாவு எவ்வளவு ஊறுகிறதோ அவ்வளவு மெத் என்று வரும். எனவே காலை இல் முதல் வேலையாக கரைத்து வைக்கணும். எல்லா பக்ஷணமும் பண்ணின பிறகு கடைசியாய் அப்பம் குத்தணும். 

இதோ.....கொழுக்கட்டை:

இதெல்லாம் வாங்கி ரெடியா வெச்சுக்கோங்க:
1. அரிசி மாவு
2. வெல்லம் 1/4 கிலோ
3. முற்றிய தேங்காய் 1
4. ஏலக்காய் 10

இப்படித்தான் செய்ய வேண்டும் கொழக்கட்டை..:
1. பச்சை அரிசியைக் களைந்து வடிகட்டி ஒரு சுத்தமான துணியில் நிழலில் உலர்த்த வேண்டும். உலர்ந்த அரிசியை நைசான மாவாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
2. ஒரு ஆழாக்கு மாவிற்கு 2 1/2 ஆழாக்கு தண்ணீரை அளந்து உருளை மாதிரி அடி கனமான பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும்.
3. மாவு வெண்மையாக இருக்கும் பொருட்டு ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயைத் தண்ணீரில் விடவும். தண்ணீர் கொதித்தவுடன் அடுப்பை விட்டு கீழே இறக்கி வையுங்கள்.
4. அரைத்து வைத்த மாவில் ஒரு ஆழாக்கு மாவைச் சிறிது சிறிதாக உருளித் தண்ணீரில் தூவுங்கள், அதை கட்டி தட்டாமல் கரண்டியால் கிளறி விட்டுக் கொண்டேயிருக்க வேண்டும்.
5. தண்ணீரும் மாவும் நன்றாகக் கலந்த பின் மீண்டும் அடுப்பில் வைத்து இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் விடாமல் கிளற வேண்டும். மாவு டேஸ்டாக இருக்க ஒரு சிட்டிகை உப்பைத் தண்ணீரில் போடலாம். மாவு கையில் ஒட்டாத பதம் வந்ததும், மாவை இறக்கி வைத்து ஒரு தட்டு போட்டு மூடிவைத்துவிட வேண்டும். இப்போது கொழுக்கட்டைக்கு மாவு தயார்.

பூரணம் செய்ய:
1. ஒரு முற்றிய தேங்காயைப் பூப்போல் துருவி 1/4 கிலோ வெல்லமும் சேர்த்து அடுப்பை நிதானமாக எரியவிட்டு கிளறவேண்டும்.
2. வெல்லமும் தேங்காயும் கலந்து ஒட்டாமல் வரும் பதத்தில், 10 ஏலக்காய்களைப் பொடி செய்து சேர்த்துக் கிளறி இறக்கி வைத்து விடவேண்டும். இப்போது பூரணம் தயார்.
3.அரை மணி நேரம் கழித்து மாவை சிறிய எலுமிச்சம் பழ சைஸில் (கையில் நல்லெண்ணெய் தடவிக் கொண்டு) உருட்டி கிண்ணம் போல் செய்து கொள்ளுங்கள்.
4. பூரணத்தை அதில் ஒரு ஸ்பூன் வைத்து, பூரணம் வெளியில் தெரியாதவாறு மூடி வைத்து விடவேண்டும்.
5.இம்மாதிரி 10 கொழுக்கட்டைகள் செய்தபின் குக்கரில் இட்லி தட்டில் எண்ணெய் தடவி அதில் வைத்து வெயிட் போடாமல் 3 நிமிடம் வேக வைக்க வேண்டும். ஆறியபின் கொழுக்கட்டைகளை எடுக்க வேண்டும்.
கொழுகட்டை அச்சில் செய்ய:
பிளாஸ்டிக் மற்றும் இன்டாலியம் வகைகளில் கொழுக்கட்டை-கடைகளில் கிடைக்கும் அச்சை உபயோகிக்கலாம். இதை நன்றாக அலம்பி, நல்லெண்ணெய் தடவி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு மாவை எடுத்து, தட்டை போல தட்டி, அச்சில ஓட்டினார்போலவைக்கவும்.
இதில் சிறிது பூரணம் (சின்ன நெல்லிக்காய் அளவு) வைத்து மூடவும். அச்சின் ஓரத்தில்அதிகப்படியாக இருக்கும் மாவை வழித்து எடுத்து விடவும்.
இதை இட்லி குக்கரில் வேக விடவும்.

1.தேங்காய்ப் பூரண கொழுக்கட்டை

இப்ப பூரண கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்போம்

தேவையானவை:

தேங்காய் துருவல் 1 கப்
வெல்லம் 1/2 கப் (தேவையானால் 3/4 கூட போடலாம் )
ஏலப்பொடி 1/2 ஸ்பூன்
அரிசிமாவு 1 டேபிள் ஸ்பூன்
நெய் 1/2 ஸ்பூன்
தேவையானால், பூரணத்தில் முந்திரி துண்டுகள் சேர்க்கலாம்

செய்முறை:
வாணலியில் கொஞ்சமாக (1/4 கப் ஐ விட குறைவாக ) தண்ணீர் விட்டு, வெல்லத்தைப் போட்டு கரைய விடவும்.
வெல்லம் கரைந்ததும் , வடிகட்டவும்.
மீண்டும் அடுப்பில் வைத்து ஏலப்பொடி, நெய் போட்டு ஒரு கொதி வந்ததும்,
தேங்காய் துருவலை போடவும்.
நன்கு கிளறவும்.
நன்கு மொத்தமாய் சேர்ந்து வந்ததும் இறக்கவும்.
ஆறினதும் சின்ன சின்ன உருண்டைகளாக பிடிக்கவும்.
ஒரு வேளை உருண்டை பிடிக்க வரவில்லை யானால் அரிசி மாவை போட்டு கலக்கவும்.
பிறகு உருண்டை பிடிக்கவும்.
சொப்பு செய்து அதன் உள் இதை வைத்து கொழுக்கட்டை செய்யவும்.
ஆவியில்   வேகவிட்டு எடுக்கவும்.
சுவையான 'தேங்காய்  பூரண கொழுக்கட்டைகள்' நைவேத்தியத்துக்கு தயார் 
====================================================================================

2.  கடலை பருப்பு பூரணம் ( இனிப்பு பூரணம் )
தேவையானவை: கடலை பருப்பு 1/2 கப் 
வெல்லம் 1/2 கப் 
ஏலப்பொடி
1/2 ஸ்பூன்
நெய் 2 -3 ஸ்பூன்
தேங்காய் துருவல் 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை: 
கடலை பருப்பை களைந்து, மட்டாய் தண்ணீர் விட்டு குக்கரில்  வேகவைக்கவும்.
ஆறினதும், மிக்ஸியில் வெந்த கடலை பருப்பு, தேங்காய் துருவல், ஏலப்பொடி, வெல்லம் போட்டு அரைத்து எடுக்கவும்.
வாணலியில் நெய்விட்டு, அரைத்ததை போட்டு நன்கு கிளறவும்.
'மொத்தமாக' உருண்டு வந்ததும், இறக்கவும்.
ஆறினதும், சின்ன சின்னஉருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
இது தான் 'கடலை பருப்பு பூரணம்'
சொப்பு செய்து,  அதனுள்ளே இந்தப் பூரணத்தை  வைத்து மூடவும்.
ஆவியில்  வேக வைக்கவும்.
கடலை பருப்பு பூரணக் கொழுக்கட்டை ரெடி  
---------------------------------------------------------------------------------------------------------------------------------------

3.மணி கொழுக்கட்டை
இது மேல் மாவு மீந்து போனால் செய்யக்கூடியது. 
கொழுக்கட்டை மாவை சின்ன சின்ன சீடைகளாய் உருட்டி ஆவி இல் வேக வைத்து எடுக்கவும்.
வாணலி இல் கடுகு, கறிவேப்பிலை உளுத்தம் பருப்பு தாளிக்கவும்.
வெந்த உருண்டைகளை போட்டு கிளறவேண்டும்.
அடுப்பை சின்னதாக்கவும் .
தோசை மிளகாய் பொடி தூவி கிளறி இறக்கவும்
'மணி கொழுக்கட்டைகள்' தயார் 
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
4.உளுந்து (கார) கொழுக்கட்டை

தேவையானவை:


உளுந்து 1 கப்
பச்சை மிளகாய் 4 -5
சிவப்பு மிளகாய் 4 -5
பெருங்காயப்பொடி 1/4 ஸ்பூன்
இஞ்சித் துண்டு சிறியது
உப்பு
கறிவேப்பிலை சிறிது
எண்ணை 1 டேபிள் ஸ்பூன்
கடுகு 1 ஸ்பூன்

செய்முறை:

உளுந்தை நான்கு களைந்து, ஒரு 1/2 மணி ஊரவைக்கவும்.
உரின உளுந்து, பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய்,இஞ்சித்துண்டு, பெருங்காயம், உப்பு போட்டு கர கரப்பாக அரைத்து எடுக்கக்வும்.
குக்கரில்  இட்லி போல் ஆவி இல் வேகவைத்து எடுக்கவும்.
மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். (அப்ப தான் கட்டிகள் இல்லாமல் பூந்துருவலாய் வரும் )
வாணலி இல் எண்ணை விட்டு, கடுகு கறிவேப்பிலை தாளித்து, உதிர்த்து வைத்துள்ள பூரணத்தை போடவும்.
நன்கு கிளறி (உப்புமா போல் உதிர் உதிராய் இருக்கணும் )இறக்கவும்.
ஆறினதும், நீள் உருண்டைகள் பிடித்து வைக்கக்வும்.
சொப்பு  செய்து, இந்த நீள் உருண்டைக ளை அதில் வைத்து, ஜஸ்ட் இரண்டாக மடித்து ஓரங்களை ஒட்டவும்.
தித்திப்பு மற்றும் கார கொழுக்கட்டைகளை பிரித்து காட்டவே இந்த வித்தியாசம்  
ஆவியில்   வேக வைத்து எடுக்கவும்.
கார உளுந்து கொழுக்கட்டைகள் தயார்
========================================

4.கார உளுந்து கொழுக்கட்டை 2

தேவையானவை:

உளுந்து 1 கப்
பச்சை மிளகாய் 4 -5
சிவப்பு மிளகாய் 4 -5
பெருங்காயப்பொடி 1/4 ஸ்பூன்
உப்பு
கறிவேப்பிலை 1 ஆர்க்கு
எண்ணை 1 டேபிள் ஸ்பூன்
கடுகு 1 ஸ்பூன்
இஞ்சி பொடியாக நறுக்கியது.

செய்முறை:

உளுந்தை நான்கு களைந்து, ஒரு 1/2 மணி ஊரவைக்கவும்.
உரின உளுந்து, பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய், இஞ்சித் துண்டு பெருங்காயம், உப்பு போட்டு கர கரப்பாக அரைத்து எடுக்கக்வும்.
குக்கரில்  இட்லி போல் ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். (அப்ப தான் கட்டிகள் இல்லாமல் பூந்துருவலாய் வரும் புன்னகை)
வாணலியில் எண்ணை விட்டு, கடுகு கறிவேப்பிலை தாளித்து, உதிர்த்து வைத்துள்ள பூரணத்தை போடவும்.
நன்கு கிளறி (உப்புமா போல் உதிர் உதிராய் இருக்கணும் )இறக்கவும்.
கொழுக்கட்டை மாவை சின்ன சின்ன சீடைகளாய் உருட்டி ஆவி இல் வேக வைத்து எடுக்கவும்.
வாணலியில்  பூரணத்துடன் போடவும்.
நன்கு கிளறி இறக்கவும்.
கார உளுந்து கொழுக்கட்டைகள் தயார்
------------------------------------------------------------------

5,எள்ளுப் பூரண  கொழுக்கட்டை

தேவையானவை:
எள் 1/2 கப் ( நன்கு சுத்தம் செய்யவும்)
வெல்லம் 1/2 கப்
ஏலப்பொடி 1/2 ஸ்பூன்

செய்முறை:
எள்ளை சுத்தம் செய்து  வாணலியில்  வறுக்கவும்.
நன்கு வெடித்ததும் இறக்கவும்.
மிக்ஸியில் வறுத்த எள், வெல்லம், ஏலக்காய் போட்டு பொடிக்கவும்.
இது தான் எள் பூரணம்.

இதை கொழுக்கட்டை சொப்பு செய்து, அதனுள் வைத்து ஆவி இல் வேக வைக்கக்வும்.'எள் கொழுக்கட்டை 'தயார்.
===================================================================






1 கருத்து:

  1. அன்பின் ஜெயஸ்ரீ,

    அருமையான பதிவு. படிக்கும்போதே சாப்பிடனும் போல இருக்குங்க.. நாளை ஒரு சில ரெசிப்பி முயற்சி செய்கிறேன். என் செய்முறை வேறு.. பகிர்விற்கு நன்றி ஜெயஸ்ரீ.

    அன்புடன்
    பவளா

    பதிலளிநீக்கு