புதன், 23 ஏப்ரல், 2014

சித்தன் நீ..!

Tag Archives: Ramana Maharshi


உறங்கும் உயிரை 
அசைத்து விட்டாயே..
சிப்பியின் வாயைத் 
திறந்து விட்டாயே..
இதய ஓட்டிற்குள் 
ஒளிந்து கொண்டாயே
உன்னையே உலகமாய் 
எனக்குள் தந்தாயே.....!

வாசற்கதவில் கீதமாய் 
வெள்ளி மணி...
இருட்டுச் சுரங்கத்தில் 
வைரமணி...
உள்ளங்கைகளில் நீளும் 
ஆயுள் ரேகை..
ஆயுசு பூரா....இசைக்குமோ..
ஆனந்த ராகம்...!


பாறை மனதுள் படரும் 
பசுங்கொடியே...
பள்ளிகொண்ட மனதுள் 
ஒலிக்கும் பான்ஜசன்யமே...
சிரிக்க வைத்து  ரசிக்கும் 
சிந்தாமணியே...
உனக்குள் வசிக்கும் அட்சய  
கற்பகத் தருவே...!

ஓங்கி உலகளந்த உத்தம...
பாத மணிச்சிலம்பே.....
ஓயாமல் என்னுள் பேசும் 
மௌன குருவே..ரமணனே...
ஓடும் ஆறும் உன் பெயர் பாடுமே..
ஓரங்க நாடகத்தின் ஒய்யார அரசே..
அண்ணாமலையாரின் 
அற்புத வாரிசே...!


பாடாத தேனீ எனக்குள்ளும்
பாட்டுத் தரும் கலையரசே....
சிற்பி கை நழுவி என் இதயம்
விழுந்த மாய உளியே...மந்திரமே
உன்னோடு நான் வாழ்வதும்..
எனது ஜென்மத்தின் சத்தியமே...

கடல் கண்டெடுத்த 
வலம்புரி சங்கே..
கடல்சிப்பி கண்டெடுத்த 
சிற்ப உளியே..
பவளப்பாறையின் 
மரகத வீணையே..
மந்திர மலைக்குள் 
மகத்தான புன்னகையே...!
மௌனமாய் எழுலகை 
கட்டியாளும் கண்ணனே...!

ஓய்ந்து கிடந்த நெஞ்சத்தில் 
ஓய்வில்லாது பன்னீர் தெளித்து
பட்டாடை கட்டிப் பார்த்த 
பரம புனிதன் நீ...
எழுந்துவிட்ட இதயத்தில் 
இன்ப ஊற்றைத் தேடி
நித்தம் நீராடும் கண்ணனும் நீ...!
கவி தந்து கவி பாடிக் 
கொண்டாடும் சித்தன் நீ..!

மதுரையம்பதிகே 
மகத்துவம் தந்த 
மாணிக்கமே..மரகதமே... 
அங்கு தவழ்ந்த எனை..
சிதம்பரத்தில் சிக்க வைத்து 
பொன்னம்பலத்தானின்..
வெள்ளியம்பல தரிசனம் தந்து
நாடகம் பார்க்கும் ரமணா..
நிந்தன் சேவடி சரணாகதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக