புதன், 20 ஜூன், 2012

நானும் ..அவளும்...!





நினைவுகளோடு கூடவே  
தோழியாய் நடந்தவள்  
முகம் காட்டி மறைபவள்...!

கருப்பு ரிப்பனிலிருந்து

கலர்கிளிப் வைக்குவரை 
என்னை அவளுக்கு  அத்துப்படி..!

தாய் வீட்டு சீதனமாய்
புக்ககம் நுழைந்தவள்
ரகசியமாய்ப் பேசியவள்..
அதிகமாய் படம் பிடித்தவள்...!

என் சுகத்தையும்
சோகத்தையும்
மனதையும் படித்தவள்...
மனத்தைக் கெடுத்தவள்..!

என் கண்ணீர் துடைப்பாள்..
என் புடவைத் தலைப்பால்...
அவள் கறையை துடைப்பேன்...!
கவலையைத் துடைப்பாள்..!

எத்தனை முகத்தைத் 
தாங்கினாலும் எனக்காக 
சிநேகமாய் சிரிப்பவள்..!
நிறைய பொய் சொன்னவள்..!

இளமுகத்தையும்
கிழமுகத்தையும்
சளைக்காமல் பார்க்கும்
கருணைக் கண்கள்
கொண்டவள்..!

தொழுதோர்க்கு
தரிசனம் கொடுத்து 
கரிசனம் காட்டும்
அவளோர் தேவமகள்..!

முறிந்த சட்டத்தில் 
ரசம் உதிர்ந்த பிம்பமாய்..
ஏழ்மையிலும்  சிரிக்கிறாள்...!
என்னையும் பாரேன் என்று,..!

எனக்கொரு  கண்ணாடி....
கலைந்த மேகமாய் நீ...
பாவம்...உனக்கும் வயசாச்சு...
மாற்றவேண்டும் கண்ணாடி...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக