வெள்ளி, 8 ஜூன், 2012

சிப்பி விழுங்குமோ... தன் முத்து..!

 
எத்தனை கனவு கண்டாய்...
பெட்டகத்தை காத்து நின்றாய்.
நிமிடங்களை வருடங்களாய் 
சுமந்தே நீ  கடந்து வந்தாய்..!

உயிராய் விழுந்ததும் ..
ஏன் மலைத்து நின்றாய்..?
வரம் தந்த சாமி சாபமும் தந்ததோ ?
அற்பாயுசு சிசு  உனக்கென்று....!

பெண் என்ன பிறப்பில்லையா..?
பிறந்தது உனக்கில்லையா...?
நீயும் ஒரு பெண்ணில்லையா..?
தாயுள்ளம்.. தீங்கிழைக்குமா?

மடியில் விழுந்த மல்லிகை மொட்டை
விரியும்   முன்னே புதைத்து விட்டாய்...
கொலையும் செய்வாள் தாய் என..
உன்னை நீயே தேர்ந்தெடுத்தாய்...

தாயுன் தனத்தில் மட்டும் 
தனியே சுரந்ததா கள்ளிப்பால்....?
ஒரு சொட்டில் பிரித்துவிட்டாய்..
நிம்மதியாய்  மயங்கி விட்டாய்...

அன்றுனக்கு தந்திடாத பாலின் 
துளியை நெஞ்சுக்குள் வன்மமாய் 
சேர்த்த தேனடி....கல் நெஞ்சுக்காரி...
நீ படும் பாடு.உன் சேய் படக்கூடா
தெனவா....?

பிறந்ததுமே.. விழுங்கி விட்டாய்...!
சிப்பி விழுங்குமோ..தன் முத்து..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக