கோயில்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கோயில்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 5 மார்ச், 2014

விதி இருப்பின் விதி கூட்டி அருளும் திருப்பட்டூர் ஸ்ரீ பிரம்மா

www.trinethram-divine.com

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 25 கிலோமீட்டர் தொலைவில் சிறுகனூருக்கு 5 கி.மீ தொலைவில் திருப்பட்டூர் எனும் மிகச் சிறிய கிராமம் அமைந்துள்ளது. இவ்வூரில் தான் மிகவும் பழமையும் சக்தியும் மிக்க ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் உள்ளது.இந்த ஆலயத்திற்கு ஒரு முறை செல்வதே 'விதி இருப்பின்' மட்டும் தான் நிகழுமாம். ஒரு முறை சென்றவர் மீண்டும் மீண்டும் செல்லும் வரம் கிட்டும் என்பதும் நிதர்சன உண்மை.

இந்த ஆலயத்தை சில வருடங்களுக்கு முன்னே முதன் முதலாக நாங்கள் சென்று வந்த போது எங்களுக்கு ஏற்பட்ட அனுபவமும் அதன் பின்பு பல முறைகள் செல்ல வேண்டிய சந்தர்ப்பம் தானாக அமைந்ததும், ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு நிகழ்வு மனதை விட்டு நீங்காமல் இருப்பதும் தான் குருவின் திருநாளாகிய இன்று எனக்குத் திருப்பட்டூர் ஸ்ரீ பிரம்மா கோவிலைப் பற்றி அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளும் பாக்கியம் அமைந்தது.

பல வருடங்களுக்கு முன்னால் நாங்கள் சென்றிருந்த போது 'திருப்பட்டூர்; ஏனோ யாருக்கும் அவ்வளவு தெரிந்திருக்க வில்லையோ என்று தான் தோன்றியது. கூட்டமே இல்லாத கோயில். நாங்கள் மட்டுமே கோவிலுக்குள் இருப்பது போன்ற ஒரு உணர்வு. கோவில் வாசலிலிருந்து தலையை உயர்த்திப் பார்த்தால் ஐந்து நிலைகள் கொண்ட இராஜகோபுரம் கம்பீரமாக காட்சியளிப்பதை கண்நிறையக் கண்டு கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று மனதில் நினைத்துக் கொண்டோம். சுற்றிலும் மிக உயரமான மதில் சுவர்கள். வேத மண்டபம், நாத மண்டபம், சப்தஸ்வரத் தூண்கள் என்று அனைத்தையும் கடந்து 'சிவ சிவ ' என்று சொல்லி உள்ளே சென்று பிரம்மனுக்கு அருள் புரிந்து அவரின் தலையெழுத்தை மாற்றி அருள் புரிந்து வரம் அருளிய ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரரைக் கண்டு தரிசித்தோம்.

நாத மண்டபத்தின் தென்திசையில் தான் கிழக்கு நோக்கி அமர்ந்து அருள் பாலிக்கும் ஸ்ரீ பிரம்மாவின் சன்னதி. பிரம்மாண்டமான பிரம்மா..இதோ மேலே படத்தில் இருப்பவர். அற்புதமாக திருமஞ்சள் காப்புடன், தாமரைப் பூ மாலைகளுடனும் திவ்வியமாக தரிசனம்.
அவருக்கு நேர் அருகில் மிக அருகில் நிற்க அனுமதிப்பார்கள். அவரது காலடியில் நமது பிறந்த ஜாதகத்தை எடுத்துச் சென்றால் அதை பாதங்களின் சமர்பித்து அர்ச்சனை செய்து தருவார்கள். கண்களை மூடாது அவரைப் பார்த்தபடியே நின்றிருத்தல் தான் நலம். நம்மையும் மீறி நம் மனம் கசிந்து விழிகள் நனையும். 'திருப்பட்டூரில்' இருக்கும் ஸ்ரீ பிரம்மாவால் மட்டுமே அங்கு வருபவர்களின் தலையெழுத்தை மங்களகரமாக மாற்றி அமைக்கும் சக்தியைக் கொண்டவராம். ஈசன் பிரம்மாவுடைய அகங்காரத்தை அழித்து அவரின் நிலையை உணர வைத்து அவரது தேஜஸையும், படைப்பாற்றலையும் மீண்டும் வழங்கி கூடுதலாக 'இங்கு வந்து உன்னை வழிபாடு செய்பவர்களுக்கு மீண்டும் ஒரு முறை அவருடைய தலையெழுத்தை மங்களகரமாக மாற்றுவாயாக' என்று வரமளித்து 'விதியிருப்பின் விதி கூட்டி அருள்க' என்றும் வரம் வழங்கினாராம்.

அது போல யாருக்கெல்லாம் தலை விதி மங்களகரமாக மாற வேண்டும் என்ற விதி இருக்கிறதோ அவர்களே ஸ்ரீ பிரம்மாவை வந்து பார்த்து தங்கள் எழுத்தை மாற்றிக் கொள்ளும் நிலை உருவாகி இந்தக் கோயிலுக்குச் செல்லும் பாக்கியம் உருவாகும் என்பது நிஜம்.

சகல தோஷங்களும் நீங்கி வாழ்வில் அனைத்து நலன்களும் பெற குருவுக்கு அதிதேவதையாக விளங்கும் பிரம்மனின் அருட்பார்வை
ஒவ்வொருவருக்கும் அவசியமாகிறது. நாம் தற்போது இருக்கும் நிலையிலிருந்து இன்னும் சிறப்பாகவும், ஆரோக்கியத்துடனும், வாழ இத்தலத்து ஸ்ரீ பிரம்மாவின் அருட்கடாக்ஷம் அனைவருக்கும் அமைய வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.

இது ஒரு சர்வ தோஷ பரிகாரஸ்தலமாகும். சிலர் 36 தீபமிட்டு 9 முறை வலம் வந்து வேண்டுதல் செலுத்துவார்கள். இங்கு முக்கிய அபிஷேகப் பொருள் கற்கண்டு. வெண்ணிற கற்கண்டால் பிரம்மாவை அலங்கரித்திருப்பார்கள்.அருகில் சரஸ்வதிக்கு தனிக்கோயில் உள்ளது.

ஸ்ரீ பிரம்மன் சன்னதிக்கு தென்புறம் பதஞ்சலி முனிவரின் சன்னதி உள்ளது. இவர் யோக நிலையில் இருக்கும் திருவுருவப் படம் ஒன்று நமது பார்வைக்கு வைக்கப் பட்டுள்ளது. அதன் எதிரில் அமர்ந்து தியானம் செய்து விட்டு வந்தால் மனம் பெரும் அமைதி அடைவதை உணர முடியும். இதை இந்த சன்னதியில் அனுபவ பூர்வமாகவே உணரலாம்.

யோக வழியை மனித இனத்துக்குத் தந்தவர் 'ஹிரண்யகர்பர்'. அதை சூத்திரங்களாக்கி வைத்தவர் மஹரிஷி பதஞ்சலி. அறிவுச் செய்திகளை மறை பொருட்களை உள்ளடக்கி சூத்திரங்களாக வைத்தவர்கள்: வேத உண்மைகளை பிரும்ம சூத்திரங்களாக வியாஸரும், பக்தி சூத்திரங்களை நாரதரும், யோக சூத்திரங்களை பதஞ்சலி முனிவரும் மானிடம் உய்ய செய்துவைத்தனர் என்பது புராணம்.இவரது சன்னதியையும் சேர்ந்து தரிசிப்பது சிறப்பு. சப்த மாதாக்களும் பதஞ்சலி முனிவர் சன்னதியின் அருகிலேயே உள்ளது. சப்த மாதாக்களில் 'வராஹி' யைத் தொழுவது விசேஷ நலம் பெறலாம். மிகவும் தொன்மைகிக்க கோயிலில் குடி கொண்டிருக்கும் சப்த மாதாக்கள் மிகவும் சாநித்தியம் படைத்தவர்கள் என்பது அனுபவ பூர்வமாக உணர்ந்தவள். சப்த மாதாக்களின் சன்னதியில் ஒரு நெய் விளக்கு ஏற்றி வைத்து விட்டு வந்தால் போதும்.

அனேக கோயிலில் இருப்பது போலவே இங்கும் அனைத்துப் பிற தெய்வங்களுக்கும் தனித் தனி சன்னதியும் அம்பிகைக்குத் தனி சன்னதியும் இருக்கிறது.

நாங்கள் முதலில் சென்றிருந்த போது நடந்த ஒரு நிகழ்வு. இன்னும் மனசுக்குள் சிலிர்க்கும் நினைவு. கோவிலின் வடபுறத்தில் தனி சன்னதியாக பிரம்மனின் சம்பத்தாகிய தேஜஸை அம்பிகை திரும்ப வழங்கியதால் பிரம்மசம்பத் கௌரி என்று பெயர். அம்மனைத் தொழுது விட்டு வெளியில் வரும்போது அருகில் ஒரு சின்ன இரும்புக் கதவு மூடி இருந்தது. அதன் உள்ளே புதராக மண்டிக் கிடந்தது செடி கொடிகள். ஒரு சின்னப் பலகையில் பிரம்மா தீர்த்தம் என்று எழுதி இருந்ததைப் பார்த்ததும், நான் அதனுள் சென்று பார்த்து விட்டுத் திரும்பும் ஆசையில் உள்ளே நுழைய அந்த இரும்புக் கதவை லேசாகத் தள்ளினேன். ஒரு கிரீச் சென்ற சத்தத்துடன் அது திறந்து கொள்ள நான் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தேன். இது முற்றிலும் உண்மையான ஒரு நிகழ்ச்சி. அந்த சம்பவத்தை இன்று நினைத்தால் கூட மனசுக்குள் சிலிர்ப்பு ஏற்படும் அற்புதம். எனக்குக் காசி போகவேண்டும் என்ற எண்ணம் என்றும் உண்டு. ஆனால் எப்படிப் போவது வீட்டை விட்டு விட்டு யார் சரி போயிட்டு வா என்று அனுப்புவார்கள். இது போல சில மணி நேரப் பிரயாணம் செய்து செல்ல வேண்டிய கோயிலுக்கே பிரம்ம பிரயத்தனம் செய்ய வேண்டுமே.

நான் உள்ளே நுழைவதைப் பார்த்ததும், என் அம்மாவும் என் மகனும் அங்கே போகாதே...வேண்டாம்...பாம்பு இருக்கும் என்றெல்லாம் அபாயக் குரலெழுப்பி என்னைத் தடுத்தனர். நான் அதுக்கெல்லாம் பயப்படாமல் முன்னேறி அங்கு இருந்த பெரிய கிணறு ஒன்றை எட்டிப் பார்த்தேன். மிகவும் பழமையான ஒரே புதர்கள் நிரம்பிக் கிடக்க, கவனிப்பார் இன்றி இருக்கும் பாழடைந்த கிணறு தான் நினைவுக்கு வந்தது. சிறிது பயம் தொற்றிக் கொண்டது உண்மை தான். இருந்தும் மெல்ல மேற்கொண்டு அடி மேல் அடி வைத்து நடந்தேன். அதற்குள் என் பையன் அரவிந்தும் மெல்ல உள்ளே வந்தவன் வேண்டாம்மா...போகாதே என்று சொல்லிக் கொண்டே அவனும் பின்தொடர்ந்தான்.
மகிழ மரம் பூத்துச் சொரிந்திருந்தது. மகிழ மரத்தை ஸ்தல விருட்சமாகக் கொண்ட கோயில் மிக அபூர்வம் என்பது மட்டும் தெரியும்.

மெல்ல முன்னேறி இன்னும் என்ன இருக்கிறது பார்ப்போம் என்று நடந்தேன். சிறிது தூரத்தில் ஒரு தனி சன்னதி...ஸ்ரீ கைலாசநாதர் என்று எழுதி இருந்ததைப் படித்து சில படிகள் இருந்ததால் அதனைக் கடந்தும் உள்ளே சென்று விட்டேன். சிவலிங்கம் மிகப் பெரியது.மிகவும் பழமையான லிங்கம் என்பது அந்தச் சின்ன அறையிலிருந்து வந்த ஒரு வாசனையிலிருந்து உணர்ந்து கொண்டேன். இலிங்கத்தைச் சுற்றி வர சிறிது இடம் இருந்தது. ஆனால் சுற்றி வரும் முன்னர் லிங்கத்தைத் தொட்டேன் . அவ்வளவு தான்...ஒரு மின்சாரமா...அது காந்தமா....இல்லை ஒளியா ஒன்றும் புரியாத நிலை..கையை சட்டென எடுக்க முடியாமல் ஒரு இழுக்கும் உணர்வு. கூடவே ஒரு பயம்..ஆனந்தம் இரண்டும் கலந்த நிலை என் மனதை ஆட்கொள்ள அந்த இழுக்கும் சக்தியிலிருந்து விடுபட்டு படிகள் இறங்கி வேகமான நடையில் வரவும், வேண்டாம் வா என்று என் மகனின் கையைப் பிடித்து இழுக்க...இரு நானும் பார்த்துட்டு வரேன் என்று என்னை விலக்கி விட்டு அவனும் சென்று அந்த லிங்கத்தைப் பார்த்து பிரமித்து கையால் தொட்டானாம்....அதே உணர்வில் இழுக்கப் பட்டு ஓடி வந்து என்னிடம் சொன்னான்..அவனது குரலில் பதற்றம்.சரி, வா போய்டலாம் என்று சொல்லி வெளியே வர, இனம் புரியாத உணர்வு எங்கள் மனத்திலும் முகத்தில் கண்ட என் அக்கா என் மகன் சொன்னதைக் கேட்டு தானும் உள்ளே சென்று வந்து ஆமாம்..ஏதோ ஒரு ஈர்ப்பு சக்தி ....! ஆனால் இதையெல்லாம் வெளியே சொல்லக் கூடாது என்று அவனிடம் சொல்லிக் கொண்டே வந்து விட்டாள். வந்தவள் என்னிடம் கேட்கவும், நானும்...ஆம் முதல் முறையாக இப்படி உணர்கிறேன் என்றேன். ஒரு மெய் சிலிர்ப்பு ஏற்பட்டது மூவருக்குள்ளும் ஏற்பட்டது நிஜம். அங்கு நான் வேண்டிக் கொண்டது காசி விஸ்வநாதரின் தரிசனம் இந்த ஜென்மத்தில் கிட்ட வேண்டும் என்று வேண்டிக்கொண்டேன். அதற்கு அடுத்த மாதமே காசிக்குச் செல்லும் வாய்ப்பும் தரிசனமும் கிட்டியது.

இதைப் பற்றி எனது அனுபவங்களை ஒரு ஆன்மீக பத்திரிகைக்கு இதைப் எழுத வேண்டும் என்று தோன்றியதால் எழுத ஆரம்பித்தேன். ஆனால் எழுத முடியாதபடி பல தடைகள் வரவும் அந்த என்னத்தைக் கை விட்டேன்.ஆனால் உண்மை உறங்கவில்லை.ஆனால் சில மாத இதழ்களில் அவ்வபோது இந்தக் கோயிலைப் பற்றிய செய்திகள் அடிக்கடி வர ஆரம்பித்தது. "திருப்பட்டூர் அதிசயம்"திருப்பட்டூர் அற்புதம்' என்றெல்லாம் வரும் அனைத்து விஷயங்களையும் நானும் மிக ஆவலுடனும் பக்தியுடனும் படித்துத் தெரிந்து கொள்வேன்.

மேலும் சில வருடங்கள் கழித்துச் சென்ற போது , அன்று பார்த்த கோவில் போல இல்லாமல் நிறைய பக்தர்களின் வரவும், நிறைய கடைகள், ஏகப்பட்ட கார்களின் போக்குவரத்துக்கள் என்று கோவிலே களை கட்டியிருந்தது. பிரம்மாவைப் பார்க்க சில அடிகள் தடுப்பு வேறு அமைத்திருந்தார்கள். பதஞ்சலி முனிவர் அருகே கண்ணாடியால் அறை என்று கோயில் மாறியிருந்தது. வெளியில் அன்று பார்த்த செடி கொடிகள் நன்கு சீரமைக்கப் பட்டு, கிணறு தூர்வாரப்பட்டு அந்த இடமே அழகிய நந்தவனமாகக் காட்சியளித்தது. ஒவ்வொரு சன்னதிக்கும் அழகான விளக்குடன் பெயர்ப் பலகை.....மண் தரை கூட மாறி நடை பாதையில் அழகான டைல்ஸ் பாதை அமைக்கப் பட்டிருந்தது. இதெல்லாவற்றையும் விட அந்தப் பெரிய கைலாச நாதர் சன்னதி அருகே ஒருவர் அமர்ந்தபடி உள்ளே போக விடாமல் கீழேயே நின்று தொழுதுவிட்டுச் செல்லுங்கள்..என்றார். நான் சிரித்தபடி சிவனைப் பார்த்தேன்.அன்று நான் கொடுத்து வைத்தவள் என்று நினைத்துக் கொண்டு காசி சென்று வந்ததற்கு நன்றி சொல்லிவிட்டு மனமேயில்லாமல் வெளியேறினேன். அன்று கிரீச்சென்ற இரும்புக் கதவு பெரிதாக அழகாக புது பெயிண்டால் பளபளப்புடன் திறந்து கிடந்தது. அதன் பின்பு அடுத்தடுத்து ஸ்ரீ பிரம்மனைப் பார்க்க அங்கு சென்று வந்தாலும் அந்த முதலில் நான் உணர்ந்த சிலிர்ப்பு மட்டுமே மனதோடு நின்று விட்டது.

திருப்பட்டுர் ஒரு அற்புதத்தலம் .அவசியம் நேரம் கிடைத்தால் ஒரு முறை சென்று வாருங்கள். தெய்வீகத்தை உணருங்கள். இது எனது வேண்டுகோள்.


நன்றி.


ஜெயஸ்ரீ ஷங்கர்.

திரு இலஞ்சி குமாரர் கோயில், குற்றாலம்

[Image1]

கண்களைச் சுற்றியும் கண்கள் குளிரக் குளிர பசுமை வயல், ஆங்காங்கே உயர்ந்து தலையாட்டும் தென்னை மரங்கள், சுற்றிலும் குற்றால மலைகள், அருகிலேயே ஐந்தருவி, ஏற்றமும் இறக்கமுமாக இருந்த மழைப் பகுதியில் சிறிது சமதளம். அங்கே அழகானதொரு மிகவும் பழமை வாய்ந்த பழமை என்றால் ஏறத்தாழ 2000 வருடங்கள் பழமையானதாம்....அப்பப்பா....அது தான் இலஞ்சி முருகன் கோயில். காணும் போது கண்கள் செய்த பாக்கியத்தை விட அதன் பிரகாரத்துள் நுழையும் போது பாதங்கள் செய்த பாக்கியத்தை விட அங்கிருந்த தூண்களைக் கையால் தொட்டு உணர்ந்து மனம் சிலிர்த்த போது "முருகா....இது உன் செயலன்றி வேறில்லை" என்று ஆன்மா பாடியது.

குற்றாலத்தின் முருகன் இருக்க அகத்தியர் வாராதிருப்பாரோ...? அப்படி அகத்திய முனிவர் நித்தம் பூஜை செய்த முருகன் இலஞ்சி குமாரர்.
அருணகிரிநாதரால் பாடப்பெற்ற வரலாற்றுச் சிறப்பும் வாய்ந்தது இந்தத் திருக்கோயில். முருகன் அடிமைகள் இருப்பார்கள் என்னைப் போன்ற சிலர். அவர்களுக்கு உள்ளச் சிலிர்ப்பை உண்டாக்கும் அற்புதக் கோயிலிது. கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாம் திருக்குமரன் அவரது இந்தக் கோயில் தனி சக்தி வாய்ந்தது எனலாம். நமக்கு வேண்டியதைக் கேட்கவே வேண்டாம். அவர் தரிசனம் மட்டும் போதும்.
நமக்கு வேண்டாததைத் தவிர்த்து விடுவார் ,இது ஐதீகம் மட்டுமல்ல. உண்மையும் தான்.

அம்மை அப்பனின் திருமணத் திருக்கோலம் காண யாவரும் இமயம் சென்ற போது பாரம் தாங்காமல் வட திசை தாழ்ந்த கதையும் அதனால் சிவபிரான் குறுமுனி அகத்தியரை தென்னாடு செல்லப் பணித்த செய்தியும் நம் யாவருக்கும் தெரியும். ஆதலால் நான் கொல்லம் பட்டறையில் ஊசி விற்கும் நிலை வேண்டாம் என்று கருதி மேற்கொண்டு இந்தக் கோயில் சம்பந்தமாய் சொல்கிறேன்.

அகத்திய முனிவர் திரிகூடத்தைச் சார்ந்து திருக்குற்றாலக் குழகனை வழிபட விரும்பினார். அப்போது திருக்குற்றாலம் விஷ்ணு கோயிலாய் விளங்கியது. இவர் வடதிசை வாயில் வழி கோயிலுக்குள் வரவும் அங்கிருந்த காவலர் சிவனடியார் உள்ளே போகக் கூடாது என்று தடுத்தனராம். உடனே அங்கிருந்த இலஞ்சி முருகக் கடவுளின் சன்னதிக்கு வந்து குற்றாலக் கோயிலுக்குள் சென்று வர வேண்டும் என்று வரம் கேட்டாராம். முருகனும் அகத்தியரிடம் வைஷ்ணவ கோலத்தோடு கோயிலுக்குள் சென்று திருமாலை சிவனாக்கி வழிபடுமாறு பணித்தாராம். சிவார்ச்சனை செய்ய 28 ஆகமங்களையும் அகத்தியருக்குச் சொல்லி மறைந்தாராம். இந்த ஆகம விதிகளின் படி பூஜை செய்யுங்கால் நினைத்தவை அனைத்தும் நிறைவேறும் என்றும் வரம் தந்தானாம் கந்தன்.

அகத்தியரும் சிற்றாற்றின் கரையில் வெண்மணலை இழிந்கமாகப் குவித்துச் சிவபூசை செய்தார்.அவ்வாறு பூஜித்த மணல் லிங்கத்தைத்
தமது யோக சக்தியை நிறுத்தி வைத்துச் சிவாலயமாக்கிச் சென்றனர். இம்மூர்த்திக்கு 'இருவாலுக நாயகர்' என்ற பெயர் .ஏற்பட்டது. இன்றும் இந்த லிங்கத்துக்கு அபிஷேகம் கிடையாது. அதன் பின்பு முனிவர் குற்றாலம் சென்று வைணவ வேடம் பூண்டு பரம பாகவதராய்ச் சிவனுக்கும், விஷ்ணுவுக்கும் பணிவாரைப் போலக் கோயிலுக்குட் நுழைந்து வேட்டுவத் தியானத்தால் அரியை அரனாக்கி வழிபட்டார்.
முருகன் சொன்னதால் நடந்த நிகழ்வு இது. இதை அனைத்தையும் சிவபெருமானுடைய அனுக்கத் தொண்டராகிய சுந்தரமூர்த்தி சுவாமிகள் தமது திருநின்யூர் தேவாரப் பதிகத்தில் எடுத்தெழுதியுள்ளார். வெற்றிவேல் முருகன் விரும்பி அமர்ந்த தலம் இலஞ்சி.

இந்த இலஞ்சி முருகன் கோயிலில் மட்டும் தான் வித்தியாசமான முறையில் பக்தர்கள் காணிக்கை செலுத்துகிறார்கள். இங்குள்ள முருப் பெருமானை பிரார்த்திக்கும் பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறியதும் மாதுளை முத்துகளால் செய்யப்பட்ட வேல் மற்றும் சேவற்கொடியைக் காணிக்கையாகச் செலுத்துகின்றனர்.

இங்கு பிரம்மனும்,இந்திரனும்,அருணகிரிநாதரும் அர்ச்சித்து வழிபட்டு வாழ்ந்த இடம். கோயிலைச் சுற்றி எழில் நிரம்பிக் கிடக்கும் மனம் மனத்தைக் கடக்கும் வண்ணம் இயற்கையால் சூழ்ந்த திருக்கோயில்.தற்போது வரையில் திருப்பணிகள் நடந்த வண்ணம் இருக்கின்றது. திருமணம் செய்து வைக்க இந்தத் தலம் சிறப்புடையதாகும்.

கோயில் வரலாற்றைப் பற்றி சரித்திரக் குறிப்புகள் விசேடமாகக் கிடைக்கவில்லை. ஆனால் ,திருக்குற்றாலத் தல புராணம், திருச்செந்தூர் புராணம், சுப்பிரமணிய பராக்கிரமம், இலஞ்சி முருகன் உலா இன்னுஞ் சில தனிப்பாடல்கள் மூலமாக அநேக செய்திகள் வெளிவருகின்றன.ஞாபகத்துக் கெட்டாத காலத்து முன்பிருந்த கோயில் என்ற பெருமை உண்டு. இலஞ்சியில் வீற்றிருக்கும் குமாரர், கட்டிளமைக் கோலத்தில் அருள்புரிகிறார். இவருக்கு தோசை, அப்பம், வடை நிவேதனமாகப் படைக்கப்படுகிறது. பிரமதேவரும், இந்திரனின் குமாரரை வணங்கி அருள்பெற்றுச்சென்ற பெருமை பெற்ற தலம். இவரை அருணகிரியார் தனது திருப்புகழில் "வரதராஜப்பெருமாள்' என்ற சிறப்புப்பெயர் கொண்டு அழைத்து சிறப்பித்துள்ளார்.

பிரம்மபுத்திரரான காசிப முனிவர், திருமாலின் அம்சம் பொருந்திய கபிலமுனிவர் சீகண்ட பரமசிவத்தினின்று தோன்றிய துர்வாசமுனிவர் ஆகியோர் திரிகூடாசலமலையின் வடகீழ்திசையில் ஒன்று கூடி உலகின் பல்வேறு தத்துவப்பொருளையும், அதன் நுணுக்கங்களையும் பற்றி கூடிப்பேசி ஆராய்ந்தனர். அப்போது, அவர்களுக்குள் இவ்வுலகம் உள் பொருளா? அல்லது இல்பொருளா? என்ற வினா எழுந்தது. கபிலர், உலகம் இல்பொருளே எனக்கூறி தனது கருத்தை வலியுறுத்தினார். ஆனால் காசிபரும், துர்வாசரும் உலகம் முத்தொழில் செய்யும் கடவுளர் இல்லாது இல்பொருள் தோன்றாது. ஆகவே, உலகம் உள்பொருளே என்றனர். அவர்களின் கருத்தை கபிலர் ஏற்றுக்கொண்டார். பின் அவர்கள் உள்பொருளான உலகின் உண்மைப்பொருள் யார் ? என ஆராய்ந்தனர். அப்போது, கபிலர் உண்மையான உள்பொருள் திருமால் என்றார். அதனை மறுத்த காசிபர் உள்பொருள் பிரம்மனே என்றும், உருத்திரனே என்று துர்வாசரும் வாதிட அவர்களுக்குள் குழப்பம் ஏற்பட்டது. அப்போது, உண்மை விளங்கிட முடிவு கூறும்படி துர்வாசர் முருகக்கடவுளை வேண்டினார்.

அவரது வேண்டுகோளை ஏற்ற முருகப்பெருமான், இளமைப்பருவம் கொண்டு அவர்கள் முன் தோன்றினார் அவர் "யாமே விதியாக நின்று படைப்போம், அரியாக நின்று காப்போம், மற்றையோராக நின்று அழிப்போம் என மூவினையும் செய்யும் மும்மூர்த்தியாக அவர்களிடம் தன்னை அவதரித்துக் காட்டி தானே முக்காலமும் செய்பவன் என அவர்களுக்கு உணர்த்தினார். அதன்பின், அவரை வணங்கிய மும்முனிவர்கள் இவ்விடத்தில் எழுந்தருளி தமக்கு அருள் புரிந்தது போல, இவ்விடத்திலேயே இருந்து வழிபடுவோருக்கு ஞானம் கொடுத்து, விரும்பும் வரம் தருதல் வேண்டும் என்று வேண்டினர். அவர்களின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்த குமாரர், இவ்விடத்தில் வீற்றிருந்து அருள்புரிகிறார்.திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, தொழில் சிறக்க, குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருக இங்கு முருக பக்தர்களால் வேண்டிக்கொள்ளப்படுகிறது.பழங்காலக் கோயிலைக் காண ஆவல் கொண்டவர்கள் இந்தக் கோயிலுக்குச் சென்று வரலாம். அருள் பெறலாம்.

நாங்கள் சென்றிருந்த போது கோயிலுக்குச் செல்லும் வழியில் இருந்த ஒரு பெரிய பாம்பின் புற்றுக்குள்ளிருந்து ஒரு கருநாகம் ஒரு அடி உயரத்திற்கு தலையைத் தூக்கி எழுந்து நின்றதைப் பார்த்து திடுக்கிட்டோம். அது மறக்க முடியாத நிகழ்வாயிருந்தது.

பொதிகையின் தென்பகுதியில் அடர்ந்த வனப்பகுதியில் கல்லால் மூடப்பட்ட குகை ஒன்று உள்ளதாம்.. அகத்தியர் ஏடுகள் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக இன்னமும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். பொதிகைக்கு 1 கிலோ மீட்டர் மேற்கே பாறையில் முகக்க குறையாத நீர் ஊற்றும் உள்ளதாம் . அது அகத்தியர் தாகசாந்திக்காக அமைந்த ஊற்றாம். கோடையிலும் அந்த ஊற்று வற்றுவதில்லை. சங்குமுத்திரை பகுதியில் மூலிகைகளை அரைக்கும் பழங்கால ஆட்டு உரல்கள் பல இன்னும் காணப்படுகின்றன. இது போன்ற பல பொக்கிஷங்களை தன்னகத்தே கொண்டு இயற்கையின் எழிலோவியமாகவே விளங்குகிறது பொதிகை மலை.

 
 
மேலே உள்ள இந்தப் படத்தைப் பாருங்கள்....அந்த மூலிகை அரைக்கும் ஆட்டுக்கல் நம்மைப் பார்ப்பது போலக் ...கண்ணிருப்பது வியப்பு.
இதுவும் பொதிகை மலை மீது அகத்திய மலை அருகே இருக்கிறதாம்.

இச்சிறு முருகனின் வரலாற்றைப் படிப்போர் தமது வாழ்நாளில் ஒரு முறையாவது இலஞ்சி முருகனைக் கண்ணாரக் கண்டு திருவருள் பெற்று எண்ணிய பயன்களைப் பெற வேண்டுமாய் வேண்டிக் கொள்கிறேன்.


நன்றி.


அன்புடன்
ஜெயஸ்ரீ ஷங்கர்.

சனி, 1 மார்ச், 2014

சொரிமுத்தையனார் கோயில், கல்யாணி தீர்த்தம்

சொரிமுத்து அய்யனார்

அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. உடனே புறப்பட்டு வாயேன்....எனக்கு ரொம்ப பயம்மா இருக்கு. இது அன்றைய கைபேசியின் அவசர அழைப்பு. இந்த அழைப்பிற்கு முன்பு நான் இருந்த நிம்மதியான மன நிலைமை வேறு. இந்த அழைப்பைக் கேட்டதும் எனது மன நிலைமை வேறு. ஒரே கவலையும், பயமும் என்னையும் தொற்றிக் கொண்டது தான் நிஜம். உடனே செல்ல வேண்டும் என்ற என் மனம் அன்றைய தினமே டிக்கெட் வாங்கி பாண்டிச்சேரி கிளம்பத் தயாரானேன். நினைத்தபடியே பஸ்ஸும் கிளம்பியாச்சு. மனம் மட்டும் பின்னோக்கி நகர்ந்தது. அம்மா...இப்போது 74 வயது நிறைந்து, வாழ்வின் பல நெளிவு சுளிவுகளை அனுபவ பூர்வமாகக் கண்டு கர்மயோகியாகத் தான் பெற்ற ஐந்து குழந்தைகளுக்காக தன்னை உருக்கிக் கொண்ட மெழுகுவர்த்தி. அந்த அறிவும், அனுபவமும்,சொன்ன பாடங்கள் எங்களுக்கும் சின்ன வயதிலிருந்து கையில் உருட்டிப் போட்ட தயிர் சாதமும், வடு மாங்காய் நீருமாக ஊறிப் ஊறிப் போயிருந்தது. அந்த அம்மாவுக்கு வயதானாலும் , நானும் ஒரு அம்மா என்ற ஸ்தானம் அடைந்த பின்பும் கூட என் அம்மாவை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காத மனோபாவம்...என்னுடனேயே எல்லோரையும் போலவே வளர்ந்து நின்றது. அம்மாவுக்கு ஒன்றும் ஆகிவிடக் கூடாது.....என்று ஒவ்வொரு கடவுளாக வேண்டிக்கொண்டே கன்னத்தில் வழியும் கண்ணீருடன்...தான் பிரயாணம் செய்தேன்.
அம்மாவை நான் இழந்து விடக் கூடாதே என்ற பயம் என்னுள் ஷணாக் ஷணம் பயணமானது. இறுதியில் இறைவன் இருக்கிறான்....அம்மாவுக்கு உயிர் பிச்சை இடுவான் என்று சமாதானமானேன். அதே போல் அம்மா ஒரு பெரிய உயிர் கண்டத்தில் இருந்து பிழைத்தது போல நல்ல நிலையில் எழுந்து உட்கார்ந்து பேசிய அம்மாவை நான் பார்த்த போது மனம் நிம்மதியைக் கடந்து ஆண்டவனுக்கு நன்றி சொல்லியது.

அம்மாவுக்கு என்னைக் கண்ட மகிழ்ச்சி. இருந்தாலும் சொல்லிக் கொண்டார்கள் இரண்டு முழங்காலும் ஒரே வலி....இரண்டு காலும் நடக்க முடியவில்லை....கால் நடக்க முடியாதது மனமே நொண்டியானது போல இருக்கிறது....மன பலம் குன்றிவிட்டது என்றெல்லாம் சொல்லி வருத்தப் பட்டார். அம்மா....கால் தானே பார்த்துக்கலாம்...காலுக்கு அறுவை சிகிச்சை பண்ணிக்கலாம் என்றெல்லாம் என் அக்காவும் சொல்ல அம்மா சமாதானம் அடைந்தார். என் மூத்த அக்கா திருநெல்வேலியில் இருப்பவர், என்னை ஒரு மருந்து பண்டாரவளையிலிருந்து வாங்கித் தருகிறேன் அம்மாவுக்கு, நீ வந்து வாங்கிக் கொண்டு செல் என்றாள் . அதற்காக உடனே அன்று இரவே திருநெல்வேலிக்குப் பயணமானேன். அடுத்த நாள் காலையில் அவள் வீட்டு முன்பு ஆஜர். பின்பு அங்கிருந்து பண்டாரவளையில் மருந்தை வாங்கிக் கொண்டவள், இத்தனை தூரம் வந்துவிட்டோம் திருச்செந்தூர் முருகனைப் பார்த்து விட்டுப் போகலாம் என்று அங்கும் சென்று முருகனுக்கு நன்றி செலுத்திவிட்டு வரும்போது என்றுமே பேசாதே என் தோழி எனக்கு போன் செய்து பேசினாள் . அவள் சொன்னது
சொரிமுத்தையனார் கோவிலுக்கு சென்று வா..அவர் பார்த்துக் கொள்வார். அதிகம் பேசாமல் இதை மட்டும் சொல்லிவிட்டு அதன் பின்பு கைபேசி இணைப்பு துண்டிக்கப் பட்டது. டவர் சிக்னல் கிடைக்காமல்...."ஹலோ....ஹலோ....என்று வைக்கப் பட்டது..." இது தான் தெய்வ வாக்கு. நிமித்தம் என்பார்களோ என்று எண்ணி.....அடுத்தது சொரிமுத்தையனார் ஆலயம் என்று மனசுக்குள் முடிச்சுப் போட்டுக் கொண்டேன். அதே நேரம் பஸ்ஸில் என் அருகில் அமர்ந்து வந்து கொண்டிருந்த ஒரு அம்மையாரிடம் "சொரிமுத்தையனார் கோவில் எங்கிருக்கு" என்றும் கேட்டுத் தெரிந்து கொண்டேன். அவர் சொன்ன விஷயங்கள் எனக்கு மிகவும் ஆச்சரியமாகவே இருந்தது.

அது பாபநாசம் கோயில் தாண்டி மலையில போகணும்....அங்கிட்டு ஆடி அமாவாசையில் லட்சக் கணக்குல ஜனங்க படையலுக்கு வருவாங்க..காலு வலி இருக்குறவுக செருப்பு வாங்கி படைப்பாங்க ...அங்க கோவில்ல பூஜை செய்து அங்கயே செருப்புகளக் கட்டிப் போட்டுட்டு வந்துரணும் ....பட்டவராயன் அந்த செருப்புகளை மாட்டிக்கிட்டு ராத்திரி பூரா மலையில் வேட்டைக்குச் சுத்துவாராம்...புதுச் செருப்பா நாம கட்டிட்டு வந்தா அது அப்படியே நடந்து நடந்து தேய்ஞ்சு போயிருக்குமாம்..அதை யாரும் தொடுறதில்லை. ஆனால் இந்த செருப்புகள் தேய்வதும், அவற்றில் சகதி, மண், புல், மிருகங்களின் கழிவு என்று ஒட்டிக்கொண்டிருப்பது காண ஆச்சரியமா இருக்கும். இதெல்லாம் பல காலமா இருக்கும் ஒரு நம்பிக்கை தான். .அது போல செருப்புக் கட்டினவுக கால்வலியும் காணாமே போயிருமாம்....சொரிமுத்தையனார் கோவில் மிகப் பழமையானது.ஐயப்பனின் ஆதி அவதாரம். இதெல்லாம் அனைவருக்குமே தெரிந்த விஷயங்கள் தான். தங்கள் குல தெய்வம் யார் என்று அறிந்திராதவர்கள் இவரிடம் சென்று முறையிட்டால் போதுமாம். குல தெய்வத்திற்கு செய்ய வேண்டிய பூஜைகளை இவருக்குச் செய்வித்தால் போதுமாம். சகல குல தெய்வத்தின் பட்டயத்தையும் இவர் கையில் வாங்கி வைத்திருப்பதாகவும் பட்டவராயன் என்று இவரது சன்னதியில் பூஜை போட்டு பொங்கலிட்டால் குல தெய்வத்திற்கு செய்த அத்தனை பலன்களையும் இவர் தருவார் என்பது நியதி. இதுவே வழக்கத்தில் இருக்கிறது. வழக்கமாகவும் இருக்கிறது. எப்பேர்பட்ட தகவல்கள்....எனக்கு இறைவனே வந்து சொன்னது போலிருந்தது. தெய்வம் மனுஷ்ய ரூபேண...இந்த வாக்கு பொய்ப்பதில்லை.

அக்காவிடம் சொன்னதும்....முதலில் அதெல்லாம் வேண்டாம் என்று சொன்னவள்..பின்பு சரி போகலாம் என்று ஒத்துக் கொண்டாள்
அங்கிருக்கும் இன்னொரு தம்பியோடு ஞாயிற்றுக் கிழமை காலை கிளம்பினோம். அதற்குள் ஏற்பட்ட தடையைச் சொல்லி மாளாது.
கார் திருநெல்வேலியைத் தாண்டி பாபநாசத்தை அடைந்து. மறக்காமல் எல்லோருக்குமாக பேர் பேராக எண்ணி அவரவர் கால் எண்கள் படி செருப்புகள் வாங்கிக் கொண்டோம். கோவிலுக்கு வெளியே செருப்பைப் போட்டுவிட்டுப் பழக்கப் பட்டவள் இப்போது கோவிலுக்குச் செருப்பு வாங்கிக் கொண்டு போகிறேனே என்ற புதுமை புல்லரித்தது. இதெல்லாம் கனவா? இதெல்லாம் இறைவனின் ஆணையா?
இரண்டொரு நாளில் எத்தனை நிகழ்வுகள்...எதிர்பாராமல் நடந்து விடுகிறது. எதுவுமே நம்மிடம் இல்லை என்று நினைத்துக் கொண்டேன்.

கார் பொதிகை மலை மேல் செல்ல ஆரம்பித்தது. "பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் " என்ற இந்தப் பாடலை முணுமுணுக்காமல் பொதிகை மலையைக் கடக்க முடியாது..மலை அழகோ அழகு அத்தனை அழகு.தமிழ்நாட்டில் ஒரு கேரளா என்பது போல, திருநெல்வேலி மண்ணையும், மரத்தையும், தென்றலையும் மொத்தக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டு எழிலாகக் காட்சியளித்தது. ஒவ்வொரு நிமிடமும் ஜன்னல் கண்ணாடி வழியாக இயற்கை கையசைத்து ஓடும்போது மனசு லேசானது. அங்கங்கே குரங்குகள், மயில்கள் காண மகிழ்வாக இருந்தாலும் புலிகள் காப்பகங்கள் என்ற பலகை மட்டும் அச்சுறுத்தியது. அங்கங்கே குழாயில் தண்ணீர் அப்படியே ஐஸாக வந்தது.ஜிலீர் என்று கையேந்தி குடித்ததும்....மழைத் தண்ணீர் தாமிரபரணி மூலிகைத் தண்ணீர் தொண்டையை நனைக்க அப்படியே இந்தத் தண்ணீருக்கு எந்த 'பிஸ்லெரி மினரல் வாட்டர்' பதில் சொல்ல முடியும் என்று சவால் விடுவது போலிருந்தது. செல்லும் போதே அகத்தியர் அருவி...அகத்தியர் தவம் செய்யும் கல்யாணி தீர்த்தம் என்ற பெயர் பலகையைப் பார்த்ததும்...சித்தர்கள் மேல் சமீப காலமாக பலத்த ஈடுபாட்டுடன் இருக்கும் எனக்கு உடனே அங்கும் செல்ல வேண்டும் என்ற ஆவல் மேலிட அப்போதிருந்தே 'இங்கயும் சென்று பார்க்க வேண்டும் ' என்று அனத்த ஆரம்பித்தேன். இதற்கு முன் சில வருடங்கள் முன்பு பாண தீர்த்தம், குற்றாலம், எல்லாம் பல தடவைகள் சென்று வந்தவள் தான் இருந்தாலும் இப்போ இந்த ட்ரிப்பில் கண்டிப்பா அகத்தியர் ஃபால்ஸ் பார்க்கணும் என்றேன்.

'போச்சுடா....'என்ற எனது அக்கா, அரை மனசுடன் நேரமிருந்தால் பார்க்கலாம் என்று முற்றுப் புள்ளி வைத்தாள்.

கார் மலையேறியது....வளைந்து நெளிந்த பாதை. இரண்டு பக்கமும் பசுமையாக உயர்ந்த மரங்கள். காரின் கதவைத் திறந்து விட சிலீரென்ற தென்றலுடன் மூலிகை வாசம்...பரிசுத்தமான காற்றில் மனமும் பறந்தது.தென்றலுக்கு முன்பு இசை கூட இரண்டாம்பட்சமாக விலகிக் கொண்டது..காரையார் வளைவு கடந்து சொரிமுத்தையனார் கோவில் வாசலில் சென்று நின்றது. கூட்டமான கூட்டம். எங்கு நோக்கினாலும் வித விதமான வாகனங்கள். அமைதியான மலையில் திடீர் திருப்பமென பக்தர்களின் கூட்டம். கோவிலின் தொன்மையையும், சக்தியையும் சொல்லாமல் சொல்லியது.வயதானவர்கள், கைக்குழந்தையோடு வருபவர்கள், நேர்த்தி கடன் கழிக்க வருபவர்கள், அடிக்கடி வருபவர்கள், என்னைப் போல முதல் முறையாக வருபவர்கள் என்று பக்தர்கள் அலைமோத உள்நோக்கிச் சரிந்த படிகளைக் கடக்கும் போது , "நினைத்ததை நடத்தி வைத்தார் ஐயனார்'என்ற நன்றிப் பெருக்கு எனக்குள். உள்ளே நுழையும் போதே பயமும், பக்தியும் தானாகத் தொற்றிக் கொண்டது.

கீழே நதி ஓடிக் கொண்டிருந்தது. நிறைய பேர்கள் குளித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு ஓரமாக ஆடுகள் பலி கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.ரத்த ஆறுகள் ஆற்றோடு கலந்து ஓடிக் கொண்டிருந்தது. அங்கேயே பெரிய பெரிய அண்டா வைத்து விறகு வைத்து சமையல் செய்து கொண்டிருந்தனர். சமைத்ததைப் பேச்சியம்மனுக்குப் படையல் கொடுத்து விட்டு எல்லோருக்கும் அன்னதானம் வழங்க ஒரு இடத்திற்குள் வெளியில் தூக்கிச் சென்று மீந்து போனது என்று தெரிந்ததும் அதை அப்படியே கொண்டு வந்து ஆற்றில் கொட்டி விட்டு அங்கேயே பாத்திரத்தைக் கழுவி கமுத்தி வைத்தனர். இதெல்லாம் சம்பிரதாயமோ என்று நினைத்துக் கொண்டேன்.

எல்லா சந்நிதானத்திலும் கூட்டமிருந்தது. நாங்கள் சென்றிருந்த வேளையிலே அய்யனாருக்கு அபிஷேகம் நடந்து கொண்டிருந்தது. நல்ல சகுனம் என்று எண்ணியபடி திவ்விய தரிசனம் செய்தோம். அருகில் இருந்த சங்கிலிக் கருப்பன் சன்னதியில் பெரிய நீளமான இரும்புச் சங்கிலிகள் குவித்து வைக்கப் பட்டிருந்தது. சங்கிலி கொண்டு அடித்துக் கொண்டு நேர்த்திக் கடன் செலுத்துவார்களாம். இன்னும் சற்றுத் தொலைவில் பட்டவராயன் சந்நிதானம். அங்கு சென்று வழிபடும்போது ஒருவருக்கு சுவாமி வந்து குறி சொல்லிக் கொண்டிருந்தார். அடுத்தடுத்து சிலர் ஆவேசமாக கத்தியபடி இருந்தார். சுவாமி மிகவும் உக்கிரம் என்று நினைத்துக் கொண்டோம். அங்கு தான் செருப்புகள் கட்டித் தொங்க விடப் பட்டிருந்தது. பூசாரியிடம் விஷயம் சொன்னதும், அவர்கள் ஒரு தாம்பாளத்தை நீட்டினார்....மிகுந்த பயத்தோடு வாங்கிய செருப்புகளை அதில் வைத்தோம். சிறிது நேரத்தில் அந்தப் பித்தளைத் தாம்பாளம் ஏழு ஜோடிச் செருப்புக்களுடன் உள்ளே எடுத்துச் செல்லப்பட்டு சுவாமி முன்பு ஒவ்வொன்றாக பரத்தி வைக்கப்பட்டு அதில் சந்தானம், குங்குமம் இடப்பட்டு வெளியில் வந்து அத்தனை பேர்களின் நட்சத்திரம், கோத்ரம் கேட்டுச் சென்று பூஜை செய்வித்தார். பின்பு அந்த செருப்புகளை எடுத்துக் கொடுத்து கயிற்றில் கட்டி விட்டுச் செல்லுங்கள் என்றார். தீர்த்தத்தை முகத்தில் தெளித்து உளுந்து வடை பிரசாதம் கொடுத்து அனுப்பினார்.

நாங்கள் பக்தியோடு வேண்டுதலும் வைத்து ஒவ்வொரு ஜோடி காலணிகளையும் காணிக்கையாக கயிற்றில் கட்டி விட்டு ஒரு பிரதட்சிணம் செய்து விட்டுக் கோவிலை விட்டுக் கிளம்பினோம்.அதை யாரும் தொடுவதில்லை. ஆனால் இந்த செருப்புகள் தேய்வதும், அவற்றில் சகதி, மண், புல், மிருகங்களின் கழிவு என்று ஒட்டிக்கொண்டிருப்பது காண வியப்பாக இருக்கும். அந்த செருப்புகளை பட்டவராயர் அணிந்துகொண்டு வேட்டைக்கு சென்று வருவதாக ஒரு நம்பிக்கை உள்ளது.

சொரிமுத்தையனார் கோயில் வரலாறு

உயர்ந்துவிட்ட தென்பகுதியை சமன்படுத்த ஈசனின் ஆணைப்படி அகத்தியர் பொதிகைக்கு வந்து நீராடினார். அங்கு ஈசன் அவருக்குத் தன் திருமணக் காட்சியை காட்டினார். அந்தப் பகுதி தற்போது கல்யாணி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. பாறை மீதமர்ந்து யோக நித்திரையில் ஆழ்ந்தார். அவர் அகத்திற்குள் ஒரு ஜோதி பரவிற்று. அந்த ஒளியினூடே பிரம்ம ராட்சசி, பேச்சி, சாஸ்தா முதலிய எல்லா தெய்வங்களும் மகாலிங்கம் எனும் பெயர் தாங்கிய பரமனை பூஜிப்பதைக் கண்டார். சட்டென்று தன் அக ஒளிக்குள் கண்ட அந்த திவ்ய காட்சி புற உலகிலும் நடைபெறுவதைப் பார்த்து தன்னை மறந்து நெக்குருகிப் போனார். தீர்த்தத்தின் விசேஷமும், தலத்தின் சாந்நித்தியமும் இத்தனை மகாசக்தி வாய்ந்ததாக உள்ளதே என்று ஆச்சரியப்பட்டார். உடனே அகத்தியர் இந்த தீர்த்த கட்டத்தில் யார் நீராடி, இங்குள்ள மூர்த்திகளை வழிபாடு செய்கிறார்களோ, அவர்களுக்கு எல்லா இன்னல்களும் நெருப்பு பட்ட பஞ்சு போல சாம்பலாக வேண்டும். புத்திர பாக்கியத்துடன் அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைத்து அவர்கள் நல்வாழ்வு பெற வேண்டுமென்று ஈசனை வணங்கி நின்றார். ஈசனும் இசைந்து அந்த வரத்தை அருளினார். தேவர்கள் அனைவரும் இத்திருக் காட்சியை கண்டனர். மெய்சிலிர்த்தனர். மலர்களை மழையாகப் பொழிந்தனர். இவ்வாறு பூக்களை தேவர்கள் சொரிந்ததால் அத்தலத்தில் உறைந்து ஈசனையும் பூஜித்து வரும் அய்யனாரையும் (மலர்ச்)சொரி முத்து அய்யனார் என்று பிற்காலத்தில் அழைத்தனர். அவரின் அருள் விலைமதிக்க முடியாத முத்தாக இருப்பதால் சொரி என்பதோடு முத்தையும் சேர்த்து ஏற்றம் கொடுத்து வணங்கினர். அகத்தியரால் வணங்கப்பட்ட புகழ்பெற்ற இந்த ஆலயம், புராண காலத்திற்குப் பிறகு மெல்ல பூமிக்குள் மறைந்தது.

மக்கள் பண்டமாற்று முறை மூலம் பொருட்களை வாங்கி, கொடுத்து வாழ்க்கை நடத்திய காலம். பாண்டிய நாட்டிலிருந்து மாட்டு வண்டியில் சுமை ஏற்றி வந்து பொதிகை மலை உச்சியில் சேரநாட்டவர்களுடன் பண்ட மாற்றம் செய்து வந்தனர். திருடர்கள் பயம் மிக அதிகமாக இருந்தது. எனவே மாட்டு வண்டிகள் கூட்டம் கூட்டமாகத்தான் வரும். அப்படி வந்த வண்டிகளில் முதல் வண்டி சொரிமுத்து அய்யனார் இருப்பிடம் வந்தபோது அந்த அற்புதம் நடந்தது. வண்டியின் சக்கரம் ஒரு கல் மீது மோதியது. கல்லிலிருந்து ரத்தம் வடிந்தது. வண்டியோட்டி அதிர்ச்சியில் அலறினார். அனைவரும் ஓடி வந்து பார்த்தனர். செய்வதறியாது திகைத்தனர். வானத்தில் மின்னல் வெட்டியது. கூடவே அசரீரி ஒலித்தது. ‘‘இந்த இடம் அகத்திய மாமுனிவர் ஞானதிருஷ்டி மூலம் மகாலிங்க சுவாமி, சொரிமுத்து அய்யனார் புடை சூழ இருந்ததை தரிசித்த இடம். ஆகவே இங்கு ஆகம விதிப்படி பூஜைகள் நடத்த வேண்டும். வருங்காலத்தில் இவ்விடம் மிகச் சிறப்பான புண்ணிய தலமாக விளங்கும்’’ என்று ஓங்கி ஒலித்தது. அன்றே கோயில் அமைத்தனர். சிவநேச செல்வர்களும், பக்தர்களும் இன்றுவரை பல திருப்பணிகளை செய்து அய்யனார் கோயிலை செப்பனிட்டு வருகின்றனர்.

பொதிகை மலையில் மரங்கள் சூழ, தென்றல் தாலாட்டு பாட தாமிரபரணி சதங்கைகள் ஒலிப்பதுபோல சலசலத்து ஓட, ஒருமித்து மிளிரும் அந்த மொத்த அழகின் மையத்தே சொரிமுத்து அய்யனார் ஆலயம் அழகுற அமைந் துள்ளது. அகத்தியர் அனுபவித்த அதே உணர்வை நாமும் அடைய முடிகிறது. காட்டு பகுதியான இவ்விடத்தில் கொடிய விலங்குகள் இருந்தும், அவை எதுவும் பக்தர்களைச் சிறிதும் துன்புறுத்தியதாக தகவலே இல்லை. இக் கோயிலில் மகாலிங்கம், சொரி முத்து அய்யனார், பூதத்தார், பிரம்ம ராட்சசி, தளவாய் மாடசாமி, தூசி மாடசாமி, பட்டவராயர் ஆகியோருக்குத் தனித்தனியே சந்நதிகள் உள்ளன. சொரிமுத்தையனார் கோவில் மிகப் பழமையானது.ஐயப்பனின் ஆதி அவதாரம்.

சொரிமுத்தையனார் கோவிலை தரிசித்து விட்டு வரும் வழியில் அகத்தியர் அருவி அருகில் காரை நிறுத்தி விட்டு அருவிக்கரை அருகே நடந்தோம். எத்தனை விதமான குரங்குகள்...கூட்டம் கூட்டமாக பொதிகை மலையை ஆளும் அரசர்கள் என்பதை அவைகள் நம்மைப் பார்த்த பார்வையில் புரிந்து கொண்டு பயந்து ஒதுகினோம். ஒரு மூட்டை கடலை கூட பத்தாது என்று தோன்றியது. இவற்றிற்கெல்லாம் யார் பசியைப் போக்குவது? கொண்டு சென்ற எதுவும் எடுத்துப் போட்ட சில நொடியில் காணாமல் போனதும் இல்லாமல், அவைகள் நம்மைப் பார்த்த பார்வை....சே...உன்னால் ஒரு குரங்குக்கு கூட பசியை ஆற்ற முடியவில்லையே என்ற குற்ற உணர்வு மனதை வதைத்தது. சில பெரிய குரங்குகள் பயத்தை வரவழைத்தது.

அகத்தியர் அருவிக்கு அருகே கல்யாணி தீர்த்தம் செல்லும் வழி என்ற பலகை இருந்தது. மேலே பெரிய பெரிய கருங்கல் படிகள்....அண்ணாந்து பார்த்ததும் மனத்தின் ஓரத்தில் ஒரு திகில் குரல்.....உன்னால் இதில் ஏற முடியாது..சும்மா படியைப் பார்த்து ஒரு கும்பிடு போட்டுவிட்டு திரும்பிப் போ...என்று. கூட வந்த அக்காவும் அதையே தான் சொன்னாள் . வேண்டாம் இந்த ரிஸ்க்...உன்னை அங்கே தனியே அனுப்பி விட்டு நான் இங்கு நீ எப்போ வருவேன்னு பார்த்துண்டு பயந்து உட்கார்ந்திருக்க முடியாது.

இல்லை...கண்டிப்பா ஏறுவேன்....பார்த்துட்டு தான் வருவேன். மனசுக்குள் அகத்தியரை நினைத்துக் கொண்டே...நான் ஏற மாட்டேன்....நீங்கள் ஏற்றி விடுங்கள்....நான் கல்யாணி தீர்த்தம் பார்த்து அதில் காலை நனைத்துக் கொண்டு ஒரு பாட்டிலில் தீர்த்தமாக வீட்டுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். எனக்கொரு பழக்கம்..எந்தக் கோவில் சென்றாலும் புண்ணிய நதியின் தீர்த்தமெடுத்து வருவேன்.ரிஷிகேஷ் மலை மேலே சஹஸ்ராரம் என்ற ஒரு இடம் இருக்கிறது. அங்கிருந்தும், காசி, கயா ,திருச்செந்தூர்,நூபுர கங்கை, ராமேஸ்வரம்,தேவி பட்டினம் என்று எங்கு சென்றாலும் தீர்த்தம் எடுத்து சுவாமி அறையில் சேகரித்து வைத்துக் கொள்வேன்.

என்ன அதிசயம்....! என் அக்காவும் சரி வா....கஷ்டப்பட்டாவது ஏறலாம் என்று கூட வர ஆரம்பித்தாள் . என் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. மேலே ஏறும் போது வழியெல்லாம் மூலிகைகள். அதில் மஞ்சனத்தி மரம் அதிகம்.

படி ஏற ஏற மேலே போய்க் கொண்டே இருந்தது. குத்துப் படிக்கட்டு...கொஞ்சம் மூச்சு வாங்கினாலும், ஒரு ஆர்வமும் "ஓம் நமசிவாய....அகச்தீஸ்வராய நமஹ..."சொல்லச் சொல்ல இருநூறு படிகள் மேலே ஐம்பது படிகள் கீழே மேலும் அறுபது படிகள் மேலே என்று ஏறி ஏறி கல்யாணி தீர்த்த கட்டத்திற்கு வந்துவிட்டோம். அங்கு ஒரு கோவில். அதன் பின்பு பெரிய மலை. அந்த மலையில் அழகாக சிவன் பார்வதி கல்யாணக் கோலம் சிற்பமாகச் செதுக்கி இருந்தது. இன்னும் விஷ்ணு, பிரம்மா என்று அழகாக மலையிலேயே செதுக்கி இருக்கிறார்கள். அதன் அருகில் அகத்தியர் தனது மனைவி லோபாமுத்திரையுடன் காட்சி தருகிறார்.

இந்த இடத்தில் தான் அகத்தியருக்கு தனது கல்யாணத் திருக்கோலத்தில் சிவனும் பார்வதியும் காட்சி தந்தார்கள் என்ற அந்த நிகழ்ச்சி நடந்த இடம் என்று பார்த்த போது மனம் சொல்ல முடியாத ஒரு பரவசம் அடைந்தது. நான்கு புறமும் வானளாவ உயர்ந்த மலை....பாறைகள்....கீழே ஒரு இருபத்தைந்து அடியில் பசுமையைத் தெரிந்தது கல்யாணி தீர்த்தம்.

யாரோ நான்கு பேர்கள் அங்கு ஏதோ பரிகாரம் செய்து கொண்டிருந்தார்கள். இத்தனை மேலே ஏறி வந்து விட்டோம்..நாமும் கீழே இறங்கிப் பார்க்கலாம் என்று சொல்லிக் கொண்டே இறங்க ஆரம்பித்து விட்டேன். பயமாக இருந்தாலும் ஒரு துணிச்சலும் கூடவே கை கொடுத்தது. அகஸ்தியர் என்னை வழி நடத்துகிறார் என்று சொல்லிக் கொண்டே இறங்கி விட்டேன். அங்கு பார்த்தால், குளம் முழுக்க மீன்கள்...! மீன் குளத்தில் பாசி இருக்காதோ என்று பயமின்றி ஒவ்வொரு காலாக நனைத்துக் கொண்டு நீரை முகந்து தலையில் தெளித்துக் கொண்டு நான் கொண்டு சென்ற பாட்டிலில் நீரைப் எடுத்து சூரியனிடம் காட்டினால் பச்சையாகத் தெரிந்த நீர் ஸ்படிகமாக மின்னியது. அத்தனை தூய்மை.

அங்கு தான் தாமிரபரணி நேரிடையாக வந்து விழுகிறது என்று சொன்னார்கள். அங்கிருந்த மலையில் அழகான நின்ற நிலையில் ராமன் சீதா நின்ற கோலத்தில் ஆஞ்சனேயர் என்று அற்புதமான சிலை இருந்தது. தொட்டுத் தொழும் பாக்கியம் கிடைத்ததே என்று நினைக்கும் போது இப்போது கூட மனத்துள் ஒரு பரவசம்.

அதை விட ஒரு சந்தோஷம். மிகவும் பரிசுத்தமான இடத்தில் தூய்மையான நாயுருவி வேர் எடுத்து வந்து வீட்டில் வைத்தால் மிகவும் நல்லது என்று சொல்வார்கள். நானும் மலை ஏறும் போதே எனது அக்காவிடம் சொல்லி வைத்தேன், எனக்கு இங்கு நாயுருவி வேர் கிடைத்தால் நல்லது. பார்க்கலாம்...கிடைக்கிறதா என்று...? சந்தேகமாகத் தான் சொன்னேன்..வரும் வழி எங்கும் என் கண்ணில் படவில்லை.ஆனால் அப்படி ஒரு இடத்தில் கிடைப்பது ரொம்ப அரிது. ஆனால் இந்த இடத்தில் கல்யாணி தீர்த்தம் அருகில் ஒரே ஒரு செடி மட்டும் இருந்தது. மானசிகமாக உத்தரவு கேட்டுவிட்டு அதைப் பறித்து நீரில் அலம்பிக் கொண்டு எடுத்து வந்தேன். அகஸ்தியர் அருகில் சிறிது நேரம் தியானம் செய்து விட்டு மன நிறைவோடு படி இறங்கினோம். நிச்சயமாக கால்வலி என்ற பேச்சுக்கே இடம் இல்லை .

கீழே இறங்கியதும் அருவியில் குளியல். பின்பு இதமாக சுடச் சுட சுக்கு மல்லி காப்பி வாங்கி குடித்து விட்டு பாபநாசம் சிவன் கோவிலையும் தரிசனம் செய்து விட்டு கிளம்பினோம். மலையை விட்டு இறங்கியதும், மலை மனதுக்குள் ஏறிக் கொண்டது தான் நிஜம். அத்தனை நினைவுகளைக் கொடுத்தது பொதிகை மலை. அடுத்தது எப்போது? என்ற எண்ணத்தில் மீண்டும் அன்றே பஸ் ஏறி பாண்டிச்சேரி வந்து சேர்ந்தேன். அங்கு சென்று வந்ததிலிருந்து நாளுக்கு நாள் முன்னேற்றம் தான்.

அந்தப் படிகளையும், ஏற்றத்தையும், இறக்கத்தையும் இப்போது மனக்கண்ணில் பார்த்தால் கூட நாமா ஏறினோம் என்று மலைப்பாக இருக்கிறது. வாழ்வில் ஒரு முறையாவது இது போன்ற அனுபவம் கிடைக்கப் பெற வேண்டும்.

வீட்டிலிருந்து கிளம்பிய போது இருந்த மனநிலைமையை இப்போது எண்ணிக் கொண்டாலும், இறைவன் எனது பிரார்த்தனைக்கு செவி சாய்த்தார் என்று எண்ணும் போது மனம் சரணாகதி அடைகிறது மானசிகமாய்.

நன்றி.சொரிமுத்தையனார் கோயில் வரலாறு மட்டும் (கோவில் புத்தகத்திலிருந்து .)


ஜெயஸ்ரீ ஷங்கர்.

வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

ஸ்ரீ பாலா பீடம், நெமிலி



2002 ஆம் ஆண்டு புட்டபர்த்திக்கு செல்லும் பாக்கியம் அமைந்தது. அங்கு அன்று மாலை பஜனையின் போது அனைவரும் பாடி முடித்ததும், "பாலா திரிபுர சுந்தரி" என்ற அம்பிகையின் மேல் ஒரு இனிமையான பாடலை ஒரு அம்மையார் பாடினார். அதைக் கேட்டதும்,எனக்குள் அந்த அம்பிகையின் மீது ஆழ்ந்த பக்தி உருவானது. பாலா திரிபுர சுந்தரி என்னும் அம்பிகையை தரிசிக்கும் ஆவலும் நாளுக்கு நாள் அதிகரித்தது. அப்போது தான் நெமிலி ஸ்ரீ பாலா பீடத்தைப் பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பும் கிட்டியது. நெமிலி எங்கு இருக்கிறது? என்று மனதுக்குள் நினைத்தபடியே "பாலா" எனக்கு உன்னைப் பார்க்க வேண்டும் என்றாவது ஒருநாள் என்னை நெமிலிக்கு நீயே அழைத்துசெல் என்ற எனது கோரிக்கையை வைத்து விட்டு மறந்து போனேன். எப்படியாவது சில சந்தர்ப்பங்களில் நாம் எப்போது நெமிலிக்கு செல்ல முடியுமோ ? என்றும் நினைத்துக் கொள்வேன். சில தெய்வங்களை நாம் எத்தனை நினைத்தாலும் சென்று பார்த்து விட முடியாது. அவள் அங்கிருந்து அழைக்க வேண்டும். அதற்கும் நேரம் வர வேண்டுமல்லவா...நானும் காத்திருந்தேன். இந்நிலையில் ஆண்டுகள் பல கடந்தும் போயின.

பூர்வ புண்ணியத்தால் சிதம்பரத்தில் வசிக்கும் வாய்ப்பும் உண்டானது. அங்கு நவராத்திரி ஒன்பது நாட்களும் சித்தாந்த ரத்னம் அவர்கள் ஸ்ரீ பலமஹா திரிபுர சுந்தரி தேவிக்கு நவ வித அலங்காரங்கள் செய்து பெரிய பெரிய யாகங்கள் செய்து அந்த ஒன்பது நாட்களையும் பெரிய திருவிழாவாக எடுத்துக் கொண்டாடுவார்.அந்த பாலாவும் ஒரு சிறிய பெண் வடிவச் சிலா ரூபம் தான். அழகென்றால் அழகு..கொள்ளை அழகு. அந்த நவராத்திரி நிகழ்சிகளில் ஒன்பது நாட்களும் நானும் கலந்து கொண்டு பாலாஷ்டகம் படிப்பதுண்டு. அப்போது கூட அந்த பூஜைக்கு வந்த ஒருவர என்னிடம் கேட்டார்..."நீங்க நெமிலி போயிருக்கேள் தானே?" என்று..எனக்கு உடனே தூக்கி வாரிப் போட்டது. நான் போகவேண்டும் என்று நினைத்ததுண்டு ஆனாலும் இது வரை அந்த ஊர் இங்கிருக்கிறது என்றே தெரியவில்லை...உங்களுக்குத் தெரியுமா? எப்படிப் போவது ? என்றும் கேட்டேன். அவர் சொன்னார்...அரக்கோணம் பக்கத்தில் என்று நினைக்கிறேன்...நானும் போனதில்லை...ஆனால் பாலா என்றாலே நெமிலி தான் என்று கேள்விப் பட்டிருக்கிறேன் என்றார் அந்த அம்மையார். இது நடந்தும் ஐந்து வருடங்கள் கழிந்து விட்டது. இரண்டு ஆண்டுகள் முன்பு பாண்டிச்சேரியில் ஒரு போட்டோ ஸ்டுடியோவில் ஒரு வேலையாகச் சென்றிருந்தேன். அப்போது ஒருவர் நெமிலி பாலா என்ற ஒரு சின்ன போட்டோவை பெரிது பண்ணச் சொல்லி வாங்கிக் கொண்டிருந்தார். அதைப் பார்த்ததும் எனக்குள் ஒரு சந்தோஷம். எனக்கும் ஒரு பிரதி வேண்டுமே என்று கேட்க நினைத்தேன். அதற்குள் அங்கு வேலை செய்து கொண்டிருக்கும் பெண் என்னிடம், மேடம்...அவர் ஒரு காப்பி தான் வேணும்னு சொன்னார்..நான் தவறாக இரண்டு பிரதி எடுத்து விட்டேன்...நீங்க ஒண்ணு எடுத்துகிறீங்களா? என்று கேட்டாள் . இதெல்லாம் 'அவளின்' அருள் என்று நினைத்துக் கொண்டே அந்தப் படத்தை வாங்கிக் கொண்டேன். மனசுக்குள் 'பாலா' என்கிட்டே வந்து விட்டாள் என்ற மகிழ்ச்சி இருந்தது. அத்தோடு இல்லாமல் அந்த புகைப்படத்தின் கீழே, 'ஸ்ரீ பாலா பீடம்' நெமிலி என்ற சரியான முகவரியும், கோவில் திறந்திருக்கும் நேரம், தொலைபேசி எண் என்று அனைத்தும் எழுதி இருந்தது. அடுத்த நாளே அவர்களுக்குப் பேசி, சரியான வழியைத் தெரிந்து கொண்டேன். இருந்தும் செல்ல முடியவில்லை. இப்படியே இரண்டு ஆண்டுகள் கழிந்தது. அதற்குள், ஸ்ரீ பாலா, திருக்கோயில் இரும்பை என்ற ஊரில் பாண்டிச்சேரி அருகில் ஒருவர் கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்வித்தார். அதற்குப் செல்லும் வாய்ப்பு எனக்குக் கிட்டியதைப் பெரும் பாக்கியமாக எண்ணினேன். அன்றைக்கும், நெமிலி செல்ல வேண்டும் என்ற ஒரே கோரிக்கையை அவள் முன்னே வைத்தேன். ஆழ் மனதின் ஆசைகள் என்றாவது ஒரு நாள் நிறைவேறும் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். ஏன்...அனுபவத்தில் கிடைக்கப் பெற்றிருக்கிறேன். இருந்தாலும், தெய்வங்கள் கண் பார்க்காமல் நமது எந்த ஆசையும் அத்துணை எளிதாக நிறைவேறி விடாது என்பதிலும் எனக்கு நம்பிக்கை உண்டு.
ஜென்ம சம்பந்தம் இல்லாமல் நம்மால் ஒருவரிடமும் பேசி விட முடியாது..ஒரு இடத்திற்கும் சென்று விடவும் முடியாது. அது போன்ற ஓர் இடம் தான் ஸ்ரீ பாலா பீடம். அங்கு செல்ல வேண்டும் என்று நினைத்து அழுதால் அந்தக் குழந்தையின் அருட் கடாக்ஷம் கிடைக்கும்...வா என்று அழைப்பாள் ..தரிசனம் தருவாள்..நம்மோடு கூடவே வீடு வரை வருவாள் ..நம்மோடு தங்குவாள்...நமது நல்லது, கெட்டதை அவளே பார்த்துக் கொள்வாள். இது அனுபவ உண்மை.

நானும் நினைத்து நினைத்து இறுதியில் 1.2.2014 அன்று காலையில் எனக்கு நெமிலிக்கு செல்ல வேண்டும் என்ற உத்வேகம் எழுந்தது. எனது அக்காவின் பெண் காயத்ரியை கூட அழைத்துக் கொண்டேன். அவளுக்கு ஒன்பது வயது. இது வரை எந்த வெளியூருக்கும் அவளைத் தனியாக நான் எங்கும் அழைத்துச் சென்றதில்லை.

காஞ்சிபுரம்- அரக்கோணம் சாலையில் காஞ்சி புரத்தில் இருந்து சுமார் 23 கி.மீ தொலைவிலும், அரக்கோணத்தில் இருந்து சுமார் 16 கி.மீ தொலை விலும் அமைந்துள்ளது நெமிலி.

பாண்டிச்சேரியிலிருந்து நேராக காஞ்சிபுரம் சென்று அங்கிருந்து நெமிலிக்கு சென்றுவிட்டேன்.
ரொம்ப சின்ன கிராமம். அங்கிருந்து அரக்கோணம் பக்கத்தில் தான் இருக்கிறது என்றார்கள்.
அரக்கோணத்திலிருந்து அரைமணி நேரம் தான். இந்த கிராமத்தில் அடிக்கடி பஸ் வசதி கிடையாது. ஒரு ஆறு ஓடுகிறது. எங்கும் பசுமை நிறைந்த இடம் , சுத்தமான காற்று, ஊருக்குள் கொஞ்சம் நெருக்கடியாகத் தான் இருந்தது. நிறைய வீடுகள் ஒட்டி ஒட்டி இருந்தது.
நிறைய ஒட்டு வீடுகள். அதன் எதிரில் பெரிய மூன்று மாடிக் கட்டிடம்....ஸ்ரீ பாலா பீடம் என்று பளிச்சென்று எழுதி இருந்தது. வாசலில் பெரிய பெரிய கார்கள் வரிசையாக நின்றிருந்தன. தயக்கத்துடன் உள்ளே நுழைந்ததும், கேட்ட முதல் வார்த்தை...."கோவில் சார்த்தியாச்சு" நாங்க இப்போ வெளியூர் கிளம்பிண்டு இருக்கோம்....அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஒரு கார் கிளம்பிப் போனது. அடுத்த காரில் செல்பவர்கள் தயாராக நின்று கொண்டிருந்தார்கள். என்னுடன் இருந்த காயத்ரியைப் பார்த்தவர், குழந்தையோட வந்திருக்கேள்...திரும்ப அனுப்ப மனசு வரலை....நான் கோவிலைத் திறக்கறேன். ஒரு நிமிஷம் தான்...பார்த்துட்டு கிளம்புங்கோ....என்றவர் பெரிய மனசு பண்ணி நீங்க பக்கத்து கேட் வழியாக உள்ளே வாங்கோ..என்றார். மனசுக்குள் ஒரு குழந்தை தெய்வத்தைப் பார்க்கும் பாக்கியம் இன்னொரு குழந்தையால் முடிந்தது...என்ற எண்ணம் தானே வந்தது. உள்ளே செல்லும் வழியில் இருந்த குழாயில் கை கால்களை அலம்பிக் கொண்டு உள்ளே நுழைந்ததும்....ஜெகஜ் ஜோதியாக அலங்காரம் செய்து வைக்கப் பட்டிருந்த மண்டபம்....முற்றிலும் நவ ரத்தினங்கள் பள பளக்க முத்தால் அலங்காரம் செய்யப் பட்ட கட்டை விரல் அளவே இருந்த ஸ்ரீ பாலா விக்ரகம்...கண்டதும் கண்கள் பனித்தது . எத்தனை ஆண்டுகள் ஆசை...நிறைவேறிய நிஜ நிமிடங்கள். ஒரு அருள் கடாக்ஷம் ஆட்கொண்ட நிமிடங்கள். தெய்வத்திடம் கேட்க ஒன்றுமே இல்லை.....பார்த்துப் பார்த்து உள்வாங்கிக்கொண்டு கண்களால் படம் பிடித்துக் கொண்டு...மனத்தால் சரணாகதி அடைந்து ஒரு நிமிடம் தானே.....என்ற அவசரம் எனக்குள்.


அதற்குள்...இன்னொரு குடும்பமும், உள்ளே வர....ஒரு நிமிடம் என்பது அரை மணி நேரமானது.இதெல்லாம் கூட அம்பாளின் அனுக்கிரகம் தானே. வாங்கிக் கொண்டு சென்ற சாக்லேட், பூக்களை தட்டில் வைத்து விட்டு அந்த வாலைக் குமரி ஸ்ரீ பாலா வை தரிசனம் செய்து கொண்டிருந்தேன்.

"இங்கு வர வேண்டும் என்று நினைத்ததும் வந்து விட முடியாது...அவள் கூப்பிடணும். யாரை இன்று அவள் அழைப்பாளோ அவர்களுக்குத் தான் இங்கு என்ட்ரி...சிலர் பத்துப் பதினோரு வருடங்கள் வர வேண்டும் என்று நினைத்துக் கொண்டு வர முடியாமல் போனவர்கள் இங்கு வந்ததும் சொல்வார்கள்...என்றதும்...என் மனதை அவர் பேசியது போலிருந்தது.

ஆறாவது தலைமுறையாக இப்போது இந்த நெமிலி ஸ்ரீ பாலா பீடம்....பூஜை செய்யப்படுகிறது.குழந்தை பாலா விரும்பிக் குடி கொண்ட இடம்...அவர் சொன்னதைக் கேட்க கேட்க மனசு பூரிப்பு அடைந்தது தான் நிஜம்.
கும்ப ராசிக்கார்கள் அவசியம் அங்கு சென்று தரிசிக்க வேண்டும்..என்பது விதியாகும் என்றும் சொன்னார்கள்.

பாலா_ உச்சரிக்கும்போதே உள்ளத்தில் உவகை பொங்கச் செய்யும் உன்னத திருநாமம்! 'பாலாதிரிபுரசுந்தரி' என்றும் 'ஸதா நவவர்ஷா' என்றும் வேதங்கள் போற்றும் இந்த தேவி, தன் திருக்கரங்களில் ஏடும் அட்ச மாலையும் ஏந்தி ஞான தேவதையாகக் காட்சி தருபவள்.
'பண்டாசுரன் எனும் அசுரனை வதைத்த பிறகு பாலா, தன் அன்னையான லலிதாம்பிகையிடமே ஐக்கியமானாள்!' என்று இந்த தேவியின் மகாத்மியங்களை விவரிக்கிறது லலிதோபாக்யானம். தன்னைத் தேடி வருவோருக்கு, கல்வி, செல்வம், திருமண பாக்கியம், குழந்தைப்பேறு, தொழில் வளர்ச்சி என்று சகல சௌபாக்கியங்களையும் அருளும் சக்தி இவள்!
உருவிலும் வயதிலும் சிறியவளாக புராணங்கள் குறிப்பிடும் இந்த தேவியை தரிசிக்க, வேலூர் மாவட்டம்- நெமிலி திருத்தலத்துக்குச் செல்ல வேண்டும்.

இந்தத் தலத்தில் பாலா எழுந்தருளியது எப்படி?!

வேலூர் மாவட்டம், தாங்கி எனும் சிற்றூரில் வசித்தவர் ராமசுவாமி ஐயர். வேத வித்தகரான இவரின் மனைவி சாவித்திரி. ஒரு முறை, குடும்பச் சூழலின் காரணமாக ராமசுவாமி ஐயர் ஊரைவிட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது. எனவே, மனைவி மற்றும் குழந்தைகள் மூவருடனும் நெமிலியை வந்தடைந்தார் ராமசுவாமி ஐயர்.
அங்கு சத்திரம் ஒன்றைக் கண்டவர்கள், 'ஒரு வீடு கிடைக்கும் வரை, இங்கேயே தங்கலாம்' என்ற முடிவுடன் உள்ளே நுழைய முற்பட்டனர். ஆனால் திண்ணையில் அமர்ந்திருந்த சிலர், ''இங்கேயா தங்கப் போகிறீர்கள்? இது, பேய்கள் நடமாடும் இடமாயிற்றே! வேண்டாம், இங்கிருந்து போய் விடுங்கள்!'' என்று எச்சரித்தனர். மௌனமாக கேட் டுக் கொண்ட ராமசுவாமி, குடும்பத்துடன் அந்தச் சத்திரத்திலேயே தங்கினார்.


உள்ளே நுழைந்ததும் சாவித்திரி அம்மாள், சத்திரத்தை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து தீபம் ஏற்றி வைத்தார். இரவு வேளை வந்தது. அனைவரும் உறங்கினர். ஆனால் ராமசுவாமி, விடிய விடிய சூக்தம், புருஷ சூக்தம் ஆகிய வற்றை பாராயணம் செய்து கொண்டிருந்தார். இதனால் தீய சக்திகள் அங்கிருந்து விலகின.பொழுது விடிந்தது. அசம்பாவிதம் எதுவும் நேராமல், ராமசுவாமியின் குடும்பம் பாதுகாப்பாக இருந்ததைக் கண்ட ஊரார் வியந்தனர். 'இவர்களி டம் தெய்வ சக்தி குடிகொண்டுள்ளது!' என்று கருதிய ஊர்மக்கள் மளிகைப் பொருட்கள் உட்பட பல்வேறு உதவிகளையும் செய்து தந்தனர். ராமசுவாமியின் குடும்பம் மகிழ்ச்சியுடன் புது வாழ்க்கையை ஆரம்பித்தது.
காலங்கள் ஓடின. தன் மூத்த மகன் வீரராகவனுக்கும் இரண்டாவது மகன் சுப்ரமணியனுக்கும் திருமணம் செய்து வைத்தார் ராமசுவாமி. இவர்கள் இருவரும் தங்கள் தந்தையைப் போலவே வேதங்களைக் கற்று, இறை சிந்தனையுடன் வாழ்ந்து வந்தனர்.
அந்தக் குடும்பத்துக்கு அருள்புரிய திருவுளம் கொண்டாள் பாலாதிரிபுரசுந்தரி.


ஒரு நாள் இரவு! சுப்ரமணியனின் கனவில் சுமார் ஒன்பது வயதுள்ள சிறுமி தோன்றினாள். அவள், ''அன்னை ராஜராஜேஸ்வரியின் அறிவுரைப்படி, பாலாவாகிய நான் ஆற்றில் மிதந்து வருகிறேன். என்னை, உனது இல்லத்துக்கு அழைத்துச் சென்று அங்கேயே அமர்த்திக் கொள்'' என்று அருளி மறைந்தாள்.


விழித்தெழுந்தார் சுப்ரமணி. அன்னை பராசக்தியே பாலாதிரிபுராசுந்தரியாக தனது இல்லம் தேடி வரப் போகிறாள் என்பதை எண்ணி பேரானந்தம் அடைந்தார்! விடிந்ததும் தனது கனவு பற்றி குடும்பத்தாரிடம் விவரித்தார் சுப்ரமணியன். அத்துடன், உதவிக்கு சிலரை அழைத்துக் கொண்டு அருகில் உள்ள குசஸ்தலை ஆற்றுக்குச் சென்றார். ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தனது கனவில் வந்த சிறுமியைத் தேடினார் சுப்ரமணி. ஆனால், வெகுநேரம் ஆகியும் சிறுமி கிடைத்தபாடில்லை. ஒரு கட்டத்தில், சுப்ரமணியன் ஆற்றில் மூழ்கும் நிலை! உடன் வந்தவர்கள் அவரைக் காப்பாற்றி, வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். மறுநாள்... எவரும் துணைக்கு வராத நிலையில் தனியாகப் புறப்பட்டார் சுப்ரமணி. குசஸ்தலை நதிக்குச் சென்று தனது தேடுதலைத் தொடர்ந்தார். இந்த முறையும் ஏமாற்றமே மிஞ்சியது.


மூன்றாம் நாள்! மிகுந்த நம்பிக்கையுடன் ஆற்றில் மூழ்கித் தேடிக் கொண்டிருந்தார் சுப்ரமணியன். நேரம் ஓடிக் கொண்டிருந்தது. ஆற்றின் பல பாகங்களுக்கும் சென்று தேடியும் எதுவும் புலப்படவில்லை..
எனினும் நம்பிக்கை இழக்காத சுப்ரமணி அன்னையைப் பிரார்த்தித்த வாறு... ஆற்றில் ஒருமுறை மூழ்கி எழுந்தார். அப்போது அவர் கரங்களில் சுண்டுவிரல் அளவிலான சின்னஞ் சிறிய விக்கிரகம் தவழ்ந்தது! சிற்றாடை இடை உடுத்தி மின்னலெனச் சிரிக்கும் பாவனையுடன் காட்சியளிக்கும் அந்த விக்கிரகத்தை உற்றுக் கவனித்த சுப்ரமணியத்தின் முகத்தில் மலர்ச்சி.
'தனது கனவில் சிறுமியாக வந்த பாலாதிரிபுர சுந்தரியே, சிறு விக்கிரமாக தன் கரங்களில் தவழ் கிறாள்!' என்பதை உணர்ந்தார். பரவசம் பொங்க அந்த சிறிய விக்கிரகத்துடன் வீடு வந்து சேர்ந்தார். ஆம், சுப்ரமணியின் இல்லத்தையே கோயிலாகக் கருதி அங்குக் குடியேறினாள் பாலா.


நவராத்திரிக்கு சில தினங்களே இருந்த நிலையில்... நெமிலியில் பாலா குடியேறிய செய்தி கிராமம் முழுவதும் பரவியது. பிறகென்ன?! நவராத்திரியின் ஒன்பது நாட்களும் கிராமத்தாரது உதவியுடன் ஹோமம், அபிஷேகம், பூஜைகள், அன்னதானம், வஸ்திரதானம் என அமர்க்களப்பட்டன. அனைவரும் பாலாதிரிபுர சுந்தரியை வணங்கிச் சென்றனர். விரைவில், அனைவருக்கும் வரங்களை வாரி வழங்கும் நெமிலி பாலாவின் மகிமை எங்கும் பரவியது. சுப்ர மணியனின் வீடு பாலா பீடமானது.
இப்படி, கலியுகத்தில் பாலா தன்னை வெளிப்படுத்துவாள் என்பதை, பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே குறிப்பிட்டுள்ளார் கருவூர்ச் சித்தர். சுமார் 800 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இவர்... 30 கண்ணிகள் கொண்ட தனது, 'கருவூரார் பூஜாவிதிகள்' என்ற நூலில், 'ஆதியந்தம் வாலையவன் இருந்த வீடே ஆச்சரியம் மெத்த மெத்த அதுதான் பாரு! சோதியந்த நடுவீடு பீடமாகி...' _ எனத் துவங்கும் வரிகளில் பாலா மற்றும் பாலா பீடம் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

கருவூராரின் வாக்குப் பலித்தது போலும்! ஆம், அகிலம் காக்கும் அன்னையாக நெமிலியில் இன்றும் கோலோற்றுகிறாள் பாலா.
நாமும் அவளை தரிசிக்கலாமா...?

நெமிலி கிராமத்தில் உள்ள பெரிய கடைத் தெருவில் இருந்து பிரியும் சத்திரத் தெருவில் அமைந்திருக்கிறது பாலாவின் ஆலயம். இதற்கு இரண்டு வாயில்கள் உள்ளன. முதல் வாயில் வழியாக பாலா குடிகொண்டிருக்கும் உள்கூடத்துக்குச் செல்லலாம். இரண்டாவது வாயில், பாலாவை ஆராதிக்கும் குடும்பத்தினர் வசிக்கும் இல்லத்துக்குரியது. நாம் முதல் வாயில் வழியாக நுழைகிறோம்.
முதலில் நீண்டதோர் தாழ்வாரம். இங்கு வலப்புறத்தில் இருக்கும் தண்ணீர்க் குழாயைத் திறந்து நம்மைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். அடுத்து பெரிய கூடம். இங்குதான், மணிமண்டபம் ஒன்றில் கொலுவீற்றிருக்கிறாள் பாலா. மணிமண்டபத்தின் எதிரில்


இருக்கும் அகன்ற பகுதியில் நாம் அமரவேண்டும்.


நமக்கு எதிரில் பெரிய திரை ஒன்று தொங்கவிடப் பட்டுள்ளது. அங்கு, நம் செவிகளில் விழும் பாலா திரிபுர சுந்தரியைப் போற்றும் பக்திப் பாடல்கள் நம் சிந்தையை நிறைக்கின்றன.


சில நிமிடங்களில் திரை விலக்கப் பட... அழகிய சிறு பீடத்தில் விரல் அளவேயான திருவடிவில் காட்சி தருகிறாள் அழகு பாலா!
இந்த அம்பிகை, நவ சக்திகள் (த்ரிபுரா, த்ரிபுரேசி, த்ரிபுர சுந்தரி, த்ரிபுர வாசினி, த்ரிபுரா, த்ரிபுரமாலினி, த்ரிபுர ஸித்தா, த்ரிபுராம்பா, மகா திரிபுர சுந்தரி), நவ யோகங்கள் மற்றும் நவ சக்கரங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளதாகக் கூறுவர்.
பாலாவின் மகாத்மியங்களுக்கு எல்லையே இல்லை என்கிறார்கள் இங்கு வரும் பக்தர்கள்.
ஒருமுறை, பாலாவுக்கு மண்டபம் எழுப்புவதற்காக நிதி திரட்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது. அப்போது, கவிஞர் எழில்மணியின் (ராமசுவாமி பரம்பரையைச் சேர்ந்தவர்) தாயாரது கனவில் தோன்றிய பாலா, 'நிதி கேட்டு அலையாதீர்கள். உங்கள் குடும்பம் மட்டுமே இதைச் செய்யட்டும்!' என்று அருளினாளாம். அதன்படி இவர்களே மண்டபத்தை எழுப்பினராம். இங்கு, உண்டியல் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது!


காஞ்சி மகாப் பெரியவாள், திருமுருக கிருபானந்த வாரியார், பரமஹம்ச புவனேஸ்வரி ஸ்வாமிகள், வள்ளிமலை சுவாமிகள், மயிலை குருஜி சுந்தராம ஸ்வாமிகள், கொடுவிலார்பட்டி சச்சிதானந்த பரஞ்ஜோதி சுவாமிகள் என்று மகான்கள் பலரும் இங்கு வந்து பாலாவை தரிசித்துள்ளனர். காஞ்சிப் பெரியவாள், நெமிலி சந்நிதியில் சில நாட்கள் முகாமிட்டு சந்திரமௌலீசுவரர் பூஜைகள் மேற் கொண்டுள்ளாராம்!


ஆண்டுதோறும் பாலாவின் சந்நிதியில் நவராத்திரி உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. நவ ராத்திரியின் ஒன்பது நாட்களும் அன்னைக்கு பிரம் மோற்சவம் என்றே கூறலாம். பிரதமை திதியில் கலச ஸ்தாபனம் செய்வதுடன் ஒன்பது நாட்களும்... காலையில் மஹன்னியாச பூர்வக ருத்திராபிஷேகம், சூரிய நமஸ்காரம், தேவி பாகவதம், சப்தசதி பாராயணம், சகஸ்ர நாம அர்ச்சனை ஆகியன நடைபெறும். மாலை வேளையில்- குங்குமார்ச்சனை நடைபெறும். ஒன்பது நாட்களும் மலைமகள், அலைமகள் மற்றும் கலைமகள் அலங்காரத்தில் காட்சி தருகிறாள் அன்னை. நவமி அந்தியத்தில் நிகழும் 'மகிஷாசுர வதம்' வைபவத்தைக் காணக் கண்கோடி வேண்டும். விஜயதசமியன்று இங்கு நடைபெறும் அன்னதானம் வெகுப் பிரசித்தி.

விழா நாட்களில் இசை நிகழ்ச்சிகளும் நடைபெறும். டாக்டர் எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி, சீர்காழி கோவிந்தராஜன், வீரமணி உட்பட முக்கிய கலைஞர்கள் பலரது இசை நிகழ்ச்சிகள் இங்கு நடைபெற்றுள்ளன! நவராத்திரி தவிர, புத்தாண்டு, மாதத்தின் முதல் ஞாயிறு, தை மற்றும் ஆடி வெள்ளிக் கிழமைகள் ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
நெமிலி பாலா பீடம், தினமும் காலை 9 முதல் மதியம் 2 மணி வரையும், மாலை 4 முதல் இரவு 7 மணி வரையும் திறந்திருக்கும். சுப்ரமணியனின் கைகளில் கிடைத்த குழந்தை பாலாவை இப்போதும் அவர்களது அடுத்தடுத்த தலைமுறையினரே பூஜித்து வருகின்றனர்.
பாலா பீடத்தினர் ஆன்மிக யாத்திரையை மேற் கொள்வதால், பாலாவை தரிசிக்க விரும்புவோர் 04177-247216 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பேசி விட்டுச் செல்லலாம்.


"தேன் பாகும் சக்கரையும் சுவைத்தால் தான் தித்திக்கும்
தென்பழனி முருகன் பெயரைச் சொன்னாலே தித்திக்கும் '

'தணிகை மழைப் படிகள் எல்லாம்
திருப்புகழ் பாடும்..! அங்கே தன்னை மறந்து
மயில்கள் எல்லாம் நாட்டியம் ஆடும்.."

இந்த முருகன் பாடல்களை கேட்டு தனை மறக்காத முருக பக்தர்கள் தமிழ் நாட்டில் யாருமே இருந்திருக்க முடியாது. அத்தனைப் பிரபலமான பாடல்களை நமது திரையிசைப் பாடகர்களான டி.எம்.எஸ் அவர்களின் இனிமையான குரலிலும், இரண்டாவது பாடலை சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் கணீரென்ற குரலிலும் கேட்டு மகிழ்ந்திருப்போம்.
என்ன...தலைப்பிற்கும் ஆரம்பத்திற்கும் சம்பந்தமே இல்லையே என்று நினைப்பது புரிகிறது.
இந்த இரண்டு பாடலையும்...இன்னும் இது போலப் பல பிரபலமான முருகன் பாடல்களை எழுதியவர் எழில்மணி, நெமிலி. இது அநேகமாக நம் அனைவருக்குமே தெரிந்திருக்கும் விஷயம் தான். அதில் விசேஷமாக ஒன்றும் இல்லை. எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து இது போன்ற முருகன் பாடல்களையே அதிகம் ரசித்து விரும்பிக் கேட்பேன். "கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உன்னை மறவேன்..." இந்தப் பாடலின் வரிகளில் அந்தச் சின்ன வயதிலேயே மிகுந்த பற்று கொண்டவள்.

இந்தப் பாடல் வரிகளை எழுதியவர் தான் இந்த பீடத்தின் நெமிலி எழில்மணி என்பவர். ஸ்ரீ பாலாவின் திருவருளால் தான் நமக்கும் அத்தனை இனிய பாடல்கள் கிடைத்தது என்றே சொல்லலாம்.


தரிசனம் முடித்து வெளியே வந்ததும்,பல வருடங்களாய் மனத்தில் தோன்றிய எண்ணத்தை குழந்தை பாலா நிறைவேற்றி வைத்த மகிழ்வும் நிறைவும் என்னோடு வந்தது.

நன்றி.

ஜெயஸ்ரீ ஷங்கர்.
ஹைதராபாத்.

வியாழன், 27 பிப்ரவரி, 2014

பூமிநாதசுவாமி கோயில் , திருச்சுழி


 
 
 

திருச்சுழி என்ற பெயரை கேட்க நேர்ந்தால்..நம்மையும் அறியாமல் நம் மனம் "பகவான் ஸ்ரீ ரமணர்" பிறந்த இடமல்லவா அது? என்று நினைக்கும் அல்லவா?. பகவான் ஸ்ரீ ரமணர் பிறந்த வீட்டுக்கு மிகவும் அருகில் அதுவும் ஒரு திருப்பத்தின் எதிரிலேயே அமைந்து அருள்பாலிக்கும் பூமிநாத சுவாமி ஆலயம். மிக மிகப் பழமையானது. இந்தப் புனிதத் தலத்தில் அமைந்துள்ள கோயிலின் அருமையை இன்றைய தினமான மஹா சிவராத்திரி எனும் புனித நன்னாளில் ஒரு கட்டுரை வாயிலாக தெரியப் படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

திருச்சுழி என்ற இந்தச் சின்ன ஊர் பிரபலமாக இருந்தாலும் கூட இந்தக் காலத்திலும் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியான கிராமமாகவே 'திருச்சுழி'விளங்குகிறது .சிவபெருமான் இத்தலத்தில் பிரளய வெள்ளத்தை ஓர் அம்பினால் சுழித்துப் பாதாளத்தில் செலுத்தியதால் இவ்வூர் திருச்சுழியல் என்று அழைக்கப்பட்டது. ஒவ்வொரு யுகத்திலும் இவ்வூரில் பெருவெள்ளம் ஏற்பட்டு பேரழிவு உண்டாவதுண்டு. துவாபர யுகத்தில் பேரழிவு ஏற்பட்ட போது இப்பகுதியை ஆண்டுவந்த மன்னன் இந்த இயற்கை அழிவிலிருந்து இவ்வூரைக் காப்பாற்ற வேண்டிச் சிவபெருமானை வேண்டவும். அவனது வேண்டுதலை ஏற்றுக் கொண்ட சிவனும் தனது சூலத்தால் தரையில் குத்தி நிலத்தில் ஒரு பெரிய ஓட்டையிட்டு; வெள்ளத்தைப் பூமியில் புகுமாறு செய்தார். சிவபெருமானின் சூலத்தைச் சுற்றி வெள்ளம் சுழித்துச் சென்றதால் "சுழி" என்று பெயர் பெற்றுப் பின்னர் "திரு" எனும் அடைமொழி சேர்ந்து "திருச்சுழியல்"' ஆயிற்று என் தலபுராணம் விவரிக்கிறது. நாளடைவில் 'திருச்சுளி' என்று மாறி தற்போது அப்படியே பேச்சு வழக்கில் அழைக்கப்படுகிறது..

மதுரை, அருப்புக்கோட்டையில் இருந்து நேரடி பேருந்துகள் நிறையவே இருக்கின்றன. மதுரையில் இருந்து காரியாபட்டி வரை நகரப் பேருந்தில் சென்று, அங்கிருந்து மீண்டும் நகரப் பேருந்தில் திருச்சுழியல் வரை செல்லலாம். மதுரை - காரியாபட்டி - திருச்சுழி தான் நேர் வழி. மதுரையிலிருந்து காரில் செல்வதானால் ஒரு மணி நேரத்தில் கோவிலைச் சென்றடையலாம்.

பூமிநாத சுவாமி கோயிலும், பகவான் ஸ்ரீ ரமணர் பிறந்த வீடும் மட்டும் தான் இந்தக் கிராமத்தின் இரண்டு கண்கள். அமைதியான கோவிலின் நுழை வாயிலிலிருந்து உள்ளே செல்லச் செல்ல பழமையின் சாநித்தியம் நம்மைச் சூழ்ந்து கொள்வதை மனத்தால் உணர முடிகிறது. குண்டாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்ட போது சுவாமி விவேகானந்தர் இந்த கோயிலில் 3 நாட்கள் தங்கியிருந்தாராம்.


இத்திருத்தலத்தில் திருமால், இந்திரன், பிரம்மன், சூரியன், கௌதமர், அகலிகை, கண்ணுவமுனிவர், அருச்சுனன், சேரமான் பெருமாள் ஆகியோர் வழிபட்டுப் பேறு பெற்றனர் என்பது சிறப்பு. இத்தலத்தில் பூமிதேவி இறைவனை வழிபட்டிருப்பதால் இறைவனுக்கு பூமிநாதசுவாமி என்ற பெயரும் உண்டு. ஆண்டுக்கு இருமுறை சூரியஒளி மூலவரின் திருமேனி மீது விழுமாறு கருவறை அமைக்கப்பட்டிருக்கிறது..சுந்தரர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.திருச்சுழியல், மதுரை, இராமேஸ்வரம் ஆகிய மூன்று கோயில்களும் ஒரே அமைப்புடைய கட்டுமானம் என்பர். பராக்கிரம பாண்டியன் காலத்திய கல்வெட்டுகளிலிருந்து இக்கோயில் கருவறை அவனால் கட்டப்பட்டது என்று தெரிகிறது. பிற்காலத்தில் நகரத்தார், கருவறை நீலங்கலான பிற பகுதிகளைப் பிரித்துப் பல நிலைகளில் திருப்பணிகளைச் செய்துள்ளனர்.

கோயில் கோபுரத்தின் எதிரே கோயிலின் குளம் பெரியதாக மதில் சுவற்றோடு இருந்தாலும் நீர் இல்லாமல் வறண்டு கிடப்பதைப் பார்க்க மனம் ஏனோ "சீர்காழி கோவிலை" ஒரு நிமிடம் நினைத்துப் பார்த்தது. அங்கு கோவிலுக்குப் பாதி பெரிய குளம். குளம் நிரம்பி வழிய அலை அலையாய் நெளிந்து நிறைத்த நீரும், நீந்தும் மீன்களும் கண்களுக்கு விருந்தாக இருந்ததை மறக்க முடியவில்லை.அந்தக் கோவிலின் தல வரலாறும், திருச்சுழி கோவிலின் தல வரலாறும் ஒன்றோடு ஒன்று இணைந்தது போலத் தான் இருந்தது.. பிரளய காலத்தில் சீர்காழியில்.'ஈசன்' தோணியப்பராக எழுந்தருளி இருப்பார்.

திருச்சுழி என்னும் இந்தப் புண்ணிய தலத்தில் இறைவர் அருள்மிகு திருமேனிநாதர் பூமிநாதசுவாமி , இறைவி.சகாயவல்லி, துனைமாலை நாயகியும் ஆவார். பாண்டிய நாட்டின் புகழ் பெற்ற 14 சிவாலயங்களில் ஒன்றான பெருமை கொண்டது. இந்தத் தலம் சைவ நாயன்மார் சுந்தரமூர்த்தி மற்றும் சேக்கிழாரால் பாடல் பெற்ற திருத்தலமாகும்.. முத்துராமலிங்க சேதுபதியால் இந்த கோயில் புனரமைக்கப்பட்டு புதிய சன்னதிகள் தற்போது கட்டப்பட்டுள்ளது.இருப்பினும் பழைமை இன்னும் மாறாமலே இருக்கிறது. அழகழகான அனேக சிற்பங்கள் காலத்தைக் கடந்தும் கலையைச் சொல்கிறது.ஒரு தூணில் அழகான ஆஞ்சனேயரின் சிற்பத்தையும் காணலாம்.சண்டேசுவரருக்கு எதிரில் மேற்புறத்திலிருந்து தண்ணீர் கீழே இறங்குவதற்குக் கருங்கல்லில் குழாய் அமைந்திருப்பது காணத்தக்கது. பிராகாரம் விலாசமானது. மேற்புறத்தில் சித்திர வேலைப்பாடுகள் அழகாக காணப் படுகிறது.

ஏழுநிலை கோபுரம் கம்பீரமாக அமைந்துள்ளது/ கோபுர வாயில் வழியே உள் நுழைந்து நந்தியை வணங்கி விட்டு சபா மண்டபம், அந்தராள மண்டபம், அர்த்த மண்டபம் ஆகியவற்றைக் கடந்து இறைவன் கருவறையை அடையலாம். இறைவன் திருமேனிநாதர் சுயம்புலிங்க வடிவில் சதுர ஆவுடையார் மீது கிழக்கு நோக்கி அருட்காட்சி தருகிறார். கருவறை அகழி அமைப்புடையது. கருவறை சுற்றுப் பிரகாரத்தில் உஷா, பிரத்யுஷா சமேத சூரியன், அறுபத்துமூவர், சந்தானாசாரியர், சப்தமாதர்கள் சந்நிதிகள் உள்ளன. மேலும் தென்மேற்கில் விநாயகர், மேற்கில் சோமாஸ்கந்தர், காசி விசுவநாதர், விசாலாட்சி, சுழிகைக் கோவிந்தர், வடமேற்கில் முருகன் ஆகியோர் எழுந்தருளி உள்ளனர். கருவறை சுற்றுச் சுவரில் கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், துர்க்கை, பிரம்மா ஆகியோர் உள்ளனர். சபா மண்டபத்தில் நடராஜர் சந்நிதி உள்ளது. இங்கு நடராஜர் மூலவராகச் சிலாரூபத்தில் கம்பீரமாகக் காட்சி தருகிறார். அருகே நடராஜர், சிவகாமி, பதஞ்சலி, வியாக்ரபாதர் ஆகியோரின் உற்சவ மூர்த்திகள் தரிசனம்.அருமையாக கிடைத்தது.

சுவாமி சந்நிதிக்கு தென்புறம் சகாயவல்லி என்றும், துணைமாலை நாயகி என்றும் அழைக்கப்படும் இறைவியின் கோவில் தனி சந்நிதியாக இருக்கிறது. இங்கும் கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவை உள்ளன. இவற்றைக் கடந்து கருவறை உள்ளே சென்றால் இறைவி கிழக்கு நோக்கி காட்சி தருகிறாள். இறைவியின் எதிரில் உள்ள மண்டபத்தின் மேற்புறத்தில் ஸ்ரீ சக்கரம் கல்லில் வடிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. கோவிலின் சாநித்தியம் ஒவ்வொரு நிமிடத்திலும் உணர முடிகிறது.

சுவாமி, அம்பாள் இரு சந்நிதிகளையும் சேர்த்து வெளிப் பிரகாரம் சுற்றி வரும் போது தென்மேற்கு மூலையில் அண்டபகிரண்ட விநாயகர் சந்நிதி உள்ளது. அதையடுத்து மேற்குப் பிரகாரத்தில் தலமரமான புன்னை மரக்கன்று வைத்து வளர்க்கப்படுகிறது. அதையடுத்து வடமேற்கு மூலையில் பிரளயவிடங்கர் சந்நிதி அமைதுள்ளது. இத்தலத்தில் ஏற்பட்ட பிரளய வெள்ளத்தை அடக்கியவர் இவர். மேலும் வெளிப் பிரகாரம் சுற்றி வரும்போது வடகிழக்கு மூலையில் தண்டபாணி சுவாமி சந்நிதி இருக்கிறது. சந்நிதி முன கொடிமரம், பலிபீடம், மயில் உள்ளன..

கோவிலின் சிறப்பு :மற்ற எந்தக் கோவிலிலும் இல்லாத பெருமை இந்தக் கோவிலுக்கு உள்ளது என்பார்கள். அதாவது இறந்தவர்களுக்கு இந்த ஒரு கோவிலில் மட்டுமே அர்ச்சனை செய்து மோட்ச தீபம் ஏற்றுவார்கள். அப்படி இறந்த நம் உறவுகளுக்கு அர்ச்சனை செய்வித்து மோட்ச தீபம் ஏற்றினால் உடனே அவரது பாவங்கள் கழிக்கப்பட்டு 21 பிறவியை அவர்கள் கடந்து விடுவார்களாம். யார் அவர்களுக்காக அர்ச்சனை செய்கிறாரோ அவர் முதலில் தனக்கு வேண்டப்பட்ட இறந்தவர்களுக்கு முதலில் அர்ச்சனை செய்து வணங்கி விட்டு, அதன் பிறகு மீண்டும் இன்னொரு முறை சென்று தனது பெயருக்கு அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும் என்பது ஐதீகமாம். 21 ஜென்மங்களைக் கடந்து போவது என்பது பெரிய வரம் அல்லவா? இது மட்டுமா...? இந்தக் கோயிலில் கால் பட்டால் வேண்டிக்கொள்ளும் போது நிலம் வேண்டுவோர், வீடு வேண்டுவோர், வீடு கட்டுவதற்கு முயற்சி செய்பவர் அனைவருக்கும் எந்தத் தடங்கலும் இன்றி நினைத்தது போலக் நடக்குமாம்.. இதுவும் ஐதீகம். சமீபத்தில் இசையமைப்பாளர் திருவாளர். இளையராஜா அவர்களின் மகள் பாடகி பவதாரிணியின் நடன அரங்கேற்றம் இந்தக் கோயிலில் வைத்து நடைபெற்றது.

இதெல்லாவற்றிற்கும் மேலாக ,இந்தக் கோவிலுக்கு செல்லும் வாய்ப்பு தானே அமையுமாம்.நம்மோடு கூடவே வாழ்ந்தவர் திடீரென்று இறந்து விட்டால் அந்த சோகத்தைத் தாங்கி வாழும் நிலை வரும். இறந்தவர்களுக்கு மோட்ச தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து விட்டால் நம் மனத்துக்குள்ளும் ஒரு வித நிம்மதி ஏற்படுவது உறுதி.இது யாருக்கு வாய்க்குமோ அவர்கள் வரம் வாங்கி வந்தவர்கள்.

நான் பல தடவைகள் திருச்சுழி சென்றிருக்கிறேன். இருந்தாலும் எனக்கு இந்த விஷயம் எதுவுமே அப்போது அறிந்திராத படியால் யாருக்கும் எதுவும் செய்யவில்லை. இந்த மாதம் மீண்டும் செல்லும் வாய்ப்பு கிட்டியது. மேலும் இது போன்ற விஷயங்களை அங்கிருப்பவர்கள் சொல்லக் கேட்டதும், எனது தந்தை, எனது மாமியார், மாமனார் என்று மோட்ச தீபங்கள் ஏற்ற வைத்து அர்ச்சனை செய்து வந்தேன். அதுவே ஒரு நிம்மதியான அனுபவமாக இருந்தது வியப்பு.

கோவிலிலிருந்து வெளியேறி வழக்கம் போலவே நேராக பகவான் ஸ்ரீ ரமணர் பிறந்த இல்லத்திற்கு சென்றால், அங்கு எனக்கு ஆச்சரியம் காத்திருந்தது. நான்கு வருடங்கள் முன்பு இருந்த அந்தப் பழைய ஒட்டு வீடு முழுதுமாக இடிக்கப்பட்டு புத்தம் புதிதாக பள பள கிரானைட் கற்களால் இழைத்து அந்த கிராமத்திற்கும் அந்த வீட்டிற்கும சம்பந்தமே இல்லாதது போல ரொம்ப ரொம்ப கம்பீரமாக அந்தப் பெரிய நவீன பாணியில் கட்டப் பட்ட வீட்டுக்குள் நுழைந்ததும், வித்தியாசமான உணர்வு எழுந்ததில், அங்கிருந்த அந்த இல்லத்தைப் பராமரிப்பவரிடம், "ஏன் மாமி....? அந்தப் பழைய வீடு தான் அழகு...அந்த வீட்டுக்குள் நுழையும் போது இருந்த சாநித்தியமும், ஒரு பௌயமும் இந்த வீட்டுக்குள் நுழையும் போது கிடைக்கவில்லையே என்றேன்.


அந்த அறை அப்படியே தான் இருக்கு..என்றவர், உள்ளே வாங்கோ என்றார். புத்தம் புதிய வீட்டுக்குள் நுழைவது போன்ற உணர்வு மட்டுமே என்னுள் எழுந்தது. அனால் அதே பகவான் ரமணரின் படங்கள். அவரது தாய் அழகம்மையின் படங்கள்..ஆள் உயரக் குத்துவிளக்கு. கண்ணைப் பறிக்கும் வண்ண விளக்குகள்..காலை வழுக்கும் மிளிரும் தரை, பாலீஷ் போட்டுப் பள பள க்கும் கதவுகள்...ஜன்னல்கள்...! இதையெல்லாம் மனம் ஏற்காமல்....ஐந்து வருடங்கள் முன்பு வந்த போது இருந்த அந்தப் பழைய ஒட்டு வீடு, காரை பெயர்ந்த சுவர்கள், சொர சொர வென்று காலில் நெருடும் சிமெண்ட் தரை....பழங்கால இரும்புப் பூண் போட்ட கதவு....அதற்குள் ரமணரின் இதே படங்கள்.

சில இடங்களில் புதுமையை மனம் ஏற்க மறுக்கிறதே....ஏனோ? எனக்குள் கேட்டுக் கொண்டவளாக, அன்று தொட்டுப் பார்த்து சிலிர்த்த சுவர்கள் இன்று வண்ண டிஸ்டெம்பரில் விரல் வைக்கவே தயக்கத்தை உண்டு செய்தது தான் உண்மை. இருந்தும், தியானம் செய்ய அமர்ந்த போது அதே அமைதி....முன்பிருந்த அதே ஆன்மீக உணர்வுகள் மேலோங்கியது. கொண்டு சென்ற நல்லெண்ணையை விளக்கில் ஊற்றி விட்டு, திரியை சரி செய்து விளக்கேற்றி, பகவான் ரமணருக்கு மாலையைப் போட்டு அழகு பார்த்து, உள்ளே சென்று அவர் பிறந்த அறையைத் திறக்கச் சொல்லி கேட்டுக் கொண்டதும், அவர்களும் திறந்து விட்டார்கள்.

பகவான் அவதரித்த அறை.உள்ளே நுழையும்போது உடலில் சிலிர்ப்பு, கம கம வென்ற சந்தன மணம் .. அவர் அணிந்த பாதுகை..தொட்டுத் தொழுததும், இது கனவா.?..நிஜமா ?என்று என்னையே கேட்டுக் கொண்டேன். மௌனத்தில் கரைந்தது மனமும், ஷணமும்..


தியானம் முடித்து வெளியே வந்ததும், "மாமி....இந்த வீட்டை புதிசாகக் கட்டியதும், நம்ம இசைஞானி இளையராஜா அவர்கள் வந்தார்களா? என்று என்னையும் மீறி கேட்டுவைத்தேன்.

ஒ.....அவர் வராமல் இருப்பாரா? மூன்று தடவை வந்து சென்றார். இதோ நீ உட்கார்ந்த இடத்தில் தான்...இங்கு தான் உட்கார்ந்தார்....அவர்கள் சொன்னதும், மீன்றும் எனது கண்கள் அந்த இடத்தை நோக்கியது.

யார்கிட்டயும் சொல்லாதேங்கோ...நான் நாளைக்கு வந்துட்டு இருக்கேன்னு..சொல்லி ஃபோன் செய்வார். நானும் யாருக்கும் சொல்ல மாட்டேன். ஆனாலும்....எப்படியே அவரோட காரை கண்டு பிடிச்சுண்டு ஒரு நூறு பேராவது சேர்ந்துடுவாளாக்கும் , நான் என்ன பண்ண முடியும்..? என்னால முடிஞ்சது சுடச் சுட கேசரி கிளறிக் கொடுத்தேன்...சாப்டார்...என்று சொன்னார் அந்த மாமி.பின்பு வீட்டுக்குப் பின் புரத்திலிருந்த மருதாணிச் செடியிலிருந்து நிறைய மருதாணி கொம்பொடு எடுத்துக் கொள்ளச் சொல்லி கொடுத்தார்கள். மனம் முழுக்க மகிழ்வோடு எனது இரண்டு தோழிகளுடன் நானும்.சேர்ந்து மதுரையை நோக்கி பிரயாணித்தோம். மனத்தின் அமைதியை எம்.எஸ்.வி. அவர்கள் இசையமைத்த ‘ஸ்ரீ ரமண நாத அமுதம்’ என்ற குறுந்தகடு சுழல இசைஞானியின் பாடல்கள் மென்மையாக ஒலிக்க , ஒரு நிறைவான பயணத்தை விவரிக்க வார்த்தைகளைத் தேடாமல் கண்களை மூடிக்கொண்டே இசையில் தொலைந்தேன்..

நன்றி.

ஜெயஸ்ரீ ஷங்கர்.

ஹைதராபாத்.