திங்கள், 30 மார்ச், 2015

மனதில் நிறைந்த மக்கள் திலகம்

Image result for mgr

மனதில் நிறைந்த மக்கள் திலகம்

– ஜெயஸ்ரீ ஷங்கர்.
யோகத்தின் முகவரிகள்:
நாங்கல்லாம் எம்.ஜி.ஆர் கட்சி. நீ யார் கட்சி? எனது பள்ளி நாட்களில் இந்த ஒரு கேள்வி மிகவும் சகஜமாக எனது தோழிகளிடையில் ஒருவருக்கொருவரைப் பார்த்துக் கேட்டுக் கொள்ளும் கேள்வியாகவே இருந்தது. அதை வைத்துத் தான் எங்களுக்குள் நட்பு வட்டமும் அமையும். அது போன்றதொரு காலமது. அப்போது எனக்கு பத்து வயது இருக்கும்.. எனக்குப் பிடித்த தோழிக்காக, நானும் எம்.ஜி.ஆர் கட்சி தான் என்று சொல்லி அவளோடு சேர்ந்து கொண்டேன். எம்.ஜி.ஆர் பாடல்கள் தான் எங்கள் நட்புக்கு வித்தாகி, உரமாகி, மரங்களாகி நந்தவனமாகியது. அதையும் கடந்து, இள நெஞ்சங்களுள் அவரால் ஏற்படுத்தப்பட்ட தாக்கத்தின் ஆதிக்கம் அபாரமானது என்றே சொல்ல வேண்டும்…
இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு யோகம் கைதூக்கி விட்டு கடைசி வரையில் கூட வரும் என்றும் சொல்வார்கள். அந்த விதத்தில் பரிபூரணமா அமைந்த ‘யோக ஜாதகம்’ அவருடையது தான். அப்பேர்பட்ட யோகக்காரருக்கு தனது உயர்ந்த பண்பால், செல்வமும், பெரும்புகழும், அழிவில்லாத மக்கள் செல்வாக்கும் வாழ்வின் எல்லை வரை அமையப் பெற்றால் அவர் மனிதருள் மாணிக்கமாவர் .
இந்நிலையில் தான் ஒரு நாள் நம்ப ஊருக்கு எம்.ஜி.ஆர் வருகிறார் என்ற செய்தி ‘காட்டுத் தீ’ போலப் பரவியது. எந்தவித தொலைத் தொடர்பும் அதிகரித்திராத காலம். மதுரையில் அவருக்கு ரசிகர்கள் கடலளவு என்பதை உணர்த்திய அனுபவம் எனக்கு அதுதான். திரையில் பார்த்திருந்த ஒரு மனிதனை நேரில் பார்க்கும் அந்த சந்தர்ப்பம் மிகவும் பிரமாண்டமானது என்று தான் சொல்ல வேண்டும். அத்தனை பிரமிப்பு மனத்துள். நேரமாக நேரமாக மக்கள் வெள்ளம் அலைமோதத் தொடங்கியது. அந்த ரசிகர் கூட்டத்தின் மத்தியில் நானும் எனது தோழியின் வீட்டு மொட்டைமாடியில் நின்றபடி அவரைக் காணும் ஆவலுடன் நின்றிருந்தேன். அவர் நடித்த திரைப்படப் பாடல்கள் ஒலிபெருக்கியில் தொடர்ந்து ஒலித்த வண்ணம் இருந்தது.
“நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த
நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற
என்றும் நல்லவங்க எல்லாரும் ஒங்க பின்னாலே நீங்க
நெனச்சதெல்லாம் நடக்குமுங்க கண்ணு முன்னாலே”
அத்தோடு கூடவே இன்னொரு பாடலாக …
“வாங்கய்யா வாத்தியாரையா 
வரவேற்க வந்தோமைய்யா “
இந்தப் பாடலும் திரும்பத் திரும்ப ஒலித்த வண்ணம் இருந்தது. மதுரையின் தெருக்கள் முழுதும் அவருக்காக அலங்கரிக்கப் பட்டு அத்தனை இதயங்களுக்குள்ளும் அவரைப் பார்த்துவிட வேண்டும் என்ற ‘ஒரே எண்ணம் ‘ நிறைந்ததாக இருந்ததைக் உணரவும் முடிந்தது. அத்தனை அன்புக்கும் சொந்தக்காரர் ‘அமாவாசை வானில் எழுந்த முழு நிலவாக’ வசீகரமான தோற்றப் பொலிவோடு வெண்பஞ்சுத் தொப்பியும், கறுப்புக் கண்ணாடியும், வெள்ளை அங்கியும் கழுத்தைச் சுற்றிய ஷாலோடு , கூப்பிய கரங்களில் ஒரு வாகனத்தில் நின்று அனைவரையும் பார்த்து கையசைத்த வண்ணம் எங்களைக் கடந்து சென்றார். வானுலக தேவனே வந்து எழுந்தருளியது போன்ற ஒரு நிம்மதி அவரைக் கண்டுவிட்ட முகங்களில் தெரிந்தது. கூட்டத்தில் பெருத்த ஆரவாரம். அந்த ஆனந்த அலை ஓயாது நீண்ட நேரம் ஒலித்தவண்ணம் இருந்தது. இன்றும் கூட நான் முதன் முதலாகக் கண்ட அந்த மாபெரும் பிரம்மாண்டமான மக்கள் திரள் கண்ணுள் நிறைந்து வழிகிறது. அன்றிலிருந்து எனது மனத்துள் அவரை ஒரு அதிசயப் பிறவியாகவே எண்ண ஆரம்பித்தது.
பள்ளியில் மாறுவேடப் போட்டியில் அநேகமாக அத்தனை தாய்மார்களும் தங்கள் குழந்தைகளுக்கு ‘எம்.ஜி.ஆர்” வேடமிட்டு ‘என் ரத்தத்தின் ரத்தமே ‘ என்ற அவர் மேடையில் பேச ஆரம்பிக்கும் போது, பொது மக்களிடையே தனக்கு இருக்கும் பந்தத்தை உறுதி செய்யுமுகமாக உபயோகப் படுத்தும் அந்த சக்திப் பிரயோக வாக்கியத்தையே வசனமாகச் சொல்ல வைத்து அப்படியே மெய் சிலிர்த்துப் போவார்கள். அத்தனை ஈடுபாடும், அன்பும், பக்தியும் கொண்ட தாய்குலங்கள் அவரை ஒரு அவதார புருஷராகவே எண்ணியிருந்தனர் . அவர் மக்கள் இதயத்தின் தாரக மந்திரம்.
வெள்ளித் திரை நடிகர் என்பதையும் மீறிய ஒரு பிணைப்பும், ஆளுமையும் அவர் மீது பொது மக்களிடையில் இருப்பதை காணும் போதெல்லாம் ‘இது எப்படி சாத்தியம்’ என்ற கேள்விக்கே இடமில்லாமல் அத்தனை பேர்களின் உள்ளத்தையும் ஈர்த்த வினோத காந்தமாக அவரது எளிமையும், காருண்யமும் இருந்தது தான் அந்த உயர்ந்த ஆன்மாவின் உன்னத சாட்சி. அவரைச் சந்திக்கும் எவரையும் அவரது ரசிகனாகவே மாற்றிவிடும் இரகசியம் தெரிந்தவர். அவர் பிறந்ததும், வாழ்ந்ததும், வெள்ளித் திரையில் சாதனைகள் புரிந்ததும், அரசியலில் தனக்கென ஒரு நிரந்திர இடத்தை பற்றி பொது மக்களின் நலனுக்காக சேவைகள் பல புரிந்ததும் அறியாதவர் யாருமே தமிழ் நாட்டில் இருக்க முடியாது. எம்.ஜி.ஆர் என்ற இந்தப் பெயரில் தான் எத்தனை ஆணித்தரமான நம்பிக்கை மக்களிடத்தில் இருந்திருக்க வேண்டும்.
செல்வம்:
இந்நிலையில் அவர் நடித்து வெளிவந்த படங்களும், கருத்துமிக்கப் பாடல்களும், பட்டிதொட்டி எங்கும் அவர் புகழ் பரப்பும் ஏணியாகி, அவரைத் தமிழக மக்களின் மத்தியில் ஓர் அரிய மேதையாக,மங்காத புகழ் தாங்கி நிற்கும் ‘மக்கள் திலகமாக’ மாற்றக் காரணமாயிருந்தது.. அவரை ‘ரத்தத்தின் ரத்தமாக’ அவர் நடித்த நடிப்பு வளர்த்ததா, அவரது சமூக சிந்தனை வளர்த்ததா, மக்கள் மீது அவர் வைத்திருந்த அன்பு வளர்த்ததா என்றெல்லாம் ஆராய இயலாத குறுகிய காலக்கட்டம், அவர் பெயரை எம்.ஜி.ஆர் என்று சொல்லும் போதே ஒரு மிகப்பெரிய கடலுக்கு முன்னால் கம்பீரமாக எழுந்து நிற்கும் கலங்கரை விளக்கம் போன்றதொரு பாதுகாப்பு அவரிடத்தில் நமக்கு ஏற்பட்டதில் எந்த வியப்பும் இல்லை எனலாம். அத்தனை இறைவனும் அவர் பக்கம் நின்று ஒன்றாக ஆசீர்வதித்திருக்க வேண்டும். ஒரு சாமானிய மனிதனால் அசாதாரண உயரத்தில் ஒவ்வொரு இதயத்திலும் கோலோட்சி செய்தவர் நமது எம்.ஜி.ஆர் அவர்கள் மட்டும் தான் என்றாலும் அது மிகையில்லை.
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று கூறி பரந்த மனப்பான்மையை நெஞ்சில் விதைத்தவர் திருமூலர். அந்த உயர்ந்த கருத்தை பட்டி தொட்டி எங்கும் பரப்பி மனித நேயத்தை வளர்த்தவர் நம் புரட்சித்தலைவர். அவருக்காகவே கவிஞர்கள் இதயத்தில் சுரக்கும் அமிர்த சஞ்சீவியாக கவிதை வரிகள் பொங்கி எழும். அதை எம்.ஜி.ஆர். பாடும்போது, ரசிகர்களின் நெஞ்சம் பெருமையில் பூரித்துப் போகும். சாமான்ய மக்களையும் அவரது திரையிசைப் பாடல்களால் வாழ்வியல் முறைகளை எளிமையாகக் கற்றுக் கொள்ள வைக்கும். எத்தனையோ பேர்களின் உந்து சக்தி அவரது பாடல்களாகவே இருந்திருக்கிறது. தன்னம்பிக்கையின் அஸ்திவாரத்தை அதன் மூலமாகவே மக்களிடம் எழுப்பி இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
எந்த உயரமும் ஒரே நாளில் ஏற்பட்டு விட முடியாது என்பது நியதி. இருப்பினும், அவரது அரசியல் உயரம் ஆரம்பித்த போதே பிரம்மாண்டமாக வளர்ந்து உயர்ந்த நிலையில் தான் உருவானது என்பதற்கு பல ஆதாரங்கள் உண்டு. இருந்தாலும், ஒரு சராசரி மனிதன் தனது சொந்த வாழ்வில் படும் அத்தனை அவஸ்தைகளையும் சந்தித்தவர் தான் எதிரிகளின் சூழ்ச்சி வலையில் சிக்கித் தவித்தவர் தான். இதிலிருந்தெல்லாம் அவர் வெளிவர அவருக்குள் வெகுண்டு வெளிவந்த தைரியமும், தீர்க்கமான அறிவும், பகட்டே அறியாத தூய அன்பும் நல்ல மனமும் மட்டும் தான் துணையாக இருந்தது. அங்கிருந்து நாடே போற்ற அந்த மனிதர் மாமனிதர் ஆனார். வயது வித்தியாசமில்லாமல் சகலமானவர்களும் போற்றும் உயர்ந்த பொக்கிஷமாக கருதப்பட்டார். அவரைச் சுற்றி தமிழ்நாட்டு மக்கள் அனைவருமே பாதுகாப்பு வளையமாக வலம் வந்தார்கள். ஒரு நாட்டின் அத்தனை இதயங்களுக்கும் ஒரே ‘ஏகாந்தம்’ அவராகவே திகழ்ந்தார், அவரது புகழ் உயர்ந்தாலும், அவர் வந்த பாதையை மறக்காமல் , ஏழை எளிய மக்களுக்கு அவரது உதவும் கரங்களை நீட்டிக் கொண்டே இருந்தார். அவருக்கு வாழ்க்கை தந்த திரை உலகத்தையும், அவரால் மக்களுக்கு வாழ்க்கை தர முடிந்த அரசியல் உலகத்தையும் தனது இரண்டு கண்களாகவே போற்றியவர் தனது அரசியல் சின்னத்திற்கு ‘இரட்டை இலையை ‘ அடையாளமாக்கி அதையே என்றென்றும் அரசியல் செல்வத்தின் முத்திரையாகப் பதித்தவர்..
பெரும்புகழ்:
பள்ளிக் கூட கல்வி என்பது அவரது வாழ்வில் எட்டாத கனியாகி இருந்தாலும், தமிழகக் குழந்தைகள் கல்வி கற்க வேண்டிய அவசியத்தை ஒவ்வொரு குடும்பத்திற்கும் உணர்த்தி அவர்களது வளர்ச்சிக்கு உதவும் வண்ணம் பள்ளிகளில் ‘மதிய உணவு திட்டத்தை ‘ ஏற்படுத்தி அதன் மூலம் வருங்கால சந்ததியினரின் அறிவுக்கும் உணவு ஊட்டி அழகு பார்த்தார்.. இது ஒரு சமுதாயப் புரட்சியாகவே மக்களிடையில் பெருமையாகப் பேசப்பட்டது. நல்லதொரு தலைவன் நம் நாட்டைக் காக்கிறான் என்னும் நம்பிக்கையில் மக்கள் கவலைகளற்று இருந்த நேரம். மக்கள் திலகம் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களின் வார்த்தைகளும் எளிமையானவை. வாழ்க்கையும் எளிமையானவை தான். காலம் அவருக்கான செயல்களை மிகவும் சிறப்பாகவே செய்தது. அதே போல்,
தமிழக மக்கள் அவர் மீது வைத்திருந்த நம்பிக்கையின் அளவை வேறு எதனாலும் அளவிட்டுக் குறித்து விட முடியாததாகும். அவரையே தன்னுயிராக பாவித்து வாழ்ந்தவர்கள், அவருக்கு ஒன்றென்றால் தனது உயிரையும் துச்சமாக எண்ணி உயிர் கொடுத்து உயிர் காக்கக் கடமை பட்டவர்களாகவே பெரும்பாலான அவரது ரசிகர்கள் இருந்தார்கள் என்பது கண்கூடு. அப்படித்தான் ஒருமுறை ‘எம்.ஜி.ஆர் அவர்களின் திடீர் மரணச் செய்தி ‘ கொண்ட பொய்யான தகவல் காற்றுவாக்கில் பரவத் தொடங்கியதும், மக்களின் வேதனை கரை மீறியது. அந்த மாலை வேளையில் ஊரே ஸ்தம்பித்து ஆக்ரோஷித்தது. அந்தச் செய்தியை ஜீரணிக்க இயலாத பல ரசிகர்கள் தங்களையே எமனுக்குத் தாரை வார்த்துக் கொண்டார்கள். தமிழ் நாட்டின் அந்தக் கொந்தளிப்பை அடக்க, அந்தச் செய்தி பொய்யான வதந்தி என்ற செய்தியால் மட்டுமே முடிந்தது. அவர் சம்பாதித்து சேர்த்து வைத்திருந்த ரசிகர்களின் நெஞ்சங்களின் வலிமையை அனைவரும் உணர்ந்து கொள்ள அந்த ஒரு நிகழ்வு போதுமாயிருந்தது.
மனிதன் என்று பிறந்தானோ மரணமும் அவனோடு சேர்ந்தே பிறந்து விடும் என்னும் உண்மையைப் பொய்யாக்கி எம்.ஜி.ஆர் அவர்களை சிரஞ்சீவியாக வாழவைக்க வழி தேடியது அவரது ரசிக மனங்கள். அதன் வெளிப்பாடும் தெரியப் படுத்தும் விதமாக அந்த நாளும் வந்தது.
அழிவில்லாத மக்கள் செல்வாக்கு:
அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்த நேரம் தான் அது. ஒரு நாட்டையே உலுக்கி எடுத்த நாட்கள் அவை. கூட்டுப் பிரார்த்தனை இல்லை. நாட்டுப் பிரார்த்தை அது. எங்கள் எம்.ஜி.ஆர். மீண்டும் நலம் பெற வேண்டும் என்ற ஒரே பிரார்த்தனை. தொடர்ந்த பிரார்த்தனையாக அவர் நடித்த படப்பாடலே எங்கும் ஒலித்து பிரபஞ்ச சக்தியை கெஞ்சிக் கொண்டிருந்தது.
இறைவா உன் மாளிகையில் 
எத்தனையோ மணி விளக்கு 
தலைவா உன் காலடியில் 
என் நம்பிக்கையின் ஒளிவிளக்கு…!
இதன் அடுத்த வரி நம் அனைத்து இதயத்துள்ளும் ஒலித்துக் கொண்டே இருக்கும் பிரார்த்தனை வரிகள் தான்..நம்பிக்கையோடு பல்லாயிரக் கணக்கான இதயங்களின், ஒரே ஒரு மனிதனின் இதயத்துடிப்பின் தொடர்ச்சிக்காக இசையால் கையேந்திக் கதறிய நாட்கள் அவை. இந்த நாட்டுப் பிரார்த்தனை எந்தக் காலக்கட்டத்திலும் நடந்திராத ஒரு உலகளாவிய அதிசயம் தான். அதன் முன்பும், அதன் பின்பும் யாருக்காகவும் நடந்திருப்பதாக சரித்திர வரலாறு கூட இல்லை எனலாம்.. ஒரு உயிரின் மீது லட்சோப லட்ச மக்களின் ஆளுமையும் அன்பும் கரை புரள அதைத் தாங்கிய புரட்சித் தலைவர் எனும் அந்தப் பொன்மனச் செம்மலை மட்டுமே சேரும். பிரபஞ்சம் விடை சொன்னது. அவரை மீட்டுக் கொடுத்தது. மக்களின் மனத்துள் பால் வார்த்தது. இந்த நாடே அவர் ஒருவருக்காகவே உருவானதோ என்று எண்ணும் அளவுக்கு அவரது செல்வாக்கும் புகழும் ஓங்கி உலகளந்தது .
ஒரு தனி மனிதனின் புகழ் என்பது காலப்போக்கில் மாறும் இயல்புடையது. அனால் அதையும் முறியடித்தது அவர் வாழ்ந்த வரலாறு காணாத ஒரு தனி மனித சகாப்தம். இல்லையில்லை, அந்தக் கீர்த்தியை சத்திய உலகின் பிரதிநிதி என்றே சொல்லவேண்டும். எம்.ஜி.ஆர் அவர்களை எத்தனையோ புகழாரங்கள் சரணடைந்திருக்கலாம். அத்தனைக்கும் தலை வணங்கிய அவரது தலை செருக்கில் நிமிராது தாழ்ந்திருந்தமையால் தான் தரணியில் அவருக்கென்ற தனியிடம் நிரந்தரமானது. கோடியில் ஒரு நட்சத்திரமாக தமிழகத்தில் ஒளிவிட்டு மங்காத சரித்திரதை உருவாக்கி என்றென்றும் ‘சிரஞ்சீவி’ யாகவே இன்றும் மனத்தில் நிறைந்து நிற்பவர் நம் மக்கள் திலகம் மட்டும் தான். எந்தக் காலத்திலும் தமிழ் மக்களின் இதயங்கள் தான் அவர் வாழும் உறைவிடம்.
ஜெயஸ்ரீ ஷங்கர்
எழுத்தாளர்

ஞாயிறு, 15 மார்ச், 2015

தொட்டில்

cradle toy க்கான பட முடிவு

வாசல்ல பரங்கிப்பூல்லாம் நட்டு வெச்சு கோலமெல்லாம் ரொம்ப அம்சமாப் போட்டிருக்கீகம்மா , என்று சொல்லிக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தாள் பணிப்பெண் லெட்சுமி.

இன்னிக்கு பாருங்கம்மா, எம்புட்டு குளிருதுன்னு என்றவள், நடுங்கியபடியே இழுத்துப் போர்த்திய புடவை முந்தானையை மேலும் வேகமாக இழுத்து விட்டுக்கொண்டவளின் குரலிலும் லேசான நடுக்கம் தெரிந்தது அகிலாவுக்கு.

இன்னிலேர்ந்து மார்கழி மாசம் ஆரம்பிச்சிருச்சுல்ல …அதான் கோலமும்…குளிரும்..என்ற அகிலா தலையில் முடிந்திருந்த ஈரத்துண்டை அவிழ்த்தபடியே , ‘இரு லெட்சுமி காப்பி போட்டிட்டுருக்கேன், குளிருக்கு சூடா காப்பி குடிச்சிட்டு பெறகு பாத்திரம் தேய்க்கலாம் என்று சமையலறைக்குள் நுழைந்தாள்.

‘இன்னிக்கு ‘கற்பகம் மருத்துவமனை’க்குப் போயாகணுமே, போனவாரமே, இன்றைய தினத்துக்கு பெயரையும் பதிந்தாயிற்று. அவர் எழுந்ததும் எப்படியாச்சும் பேசி, சமாளிச்சு அழைச்சிட்டுப் போயிறணும்’, என்று எண்ணியவள் , ‘ஷெல்’பிலிருந்த தம்ளரை எடுக்கப் போக, அங்கிருந்த இன்னொரு தம்ளர் கைதட்டிக் கீழே விழுந்து ‘ரிங் ரிங் ரிங் ரிங்’ என்ற சத்தத்துடன் வட்டம் போட்டது.

அதை வேகமாகக் குனிந்து எடுத்த லெட்சுமி, அம்மா….”ஐயா முளிச்சுக்கிடப் போறாரு” என்றாள் பதற்றமான குரலில்.

மென்மையாகச் சிரித்த அகிலா, இன்னிக்கி சீக்கிரம் முழிச்சா நல்லது தான் என்றவளாக, இந்தா என்று ஆவிபறக்கும் காப்பி தம்ளரை அவளிடம் நீட்ட,

காப்பி கை மாறியது.

பூஜையறையிலிருந்து வந்த சைக்கிள் பிராண்ட் ஊதுபத்தி மணத்தை, நரசுஸ் காப்பியின் வாசனை ஜெயித்துக் கொண்டிருந்தது.

“மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளாம் ” .என்று டீவி யில் மேடை ‘களை’ கட்டிக்கொண்டிருந்தது.

காப்பியோடு வந்து சோபாவில் சாய்ந்தவளின் மனம், பாட்டில் லயிக்காமல் வேறு சிந்தனையில் வயப்பட்டு, ‘தை பிறந்தால் வழி பிறக்கும்னு’ ன்னு கல்யாணம் மட்டும் தை மாசம் கரெக்டாஆயிருச்சு, அதுக்குப் பின்னாலே பதினைந்து ‘தை மாதங்கள்’ வந்துட்டு போயிடுச்சு, அடுத்த வழி பிறக்கக் காணோம்….வழக்கம் போலவே மனசுக்குள் சலிப்புத் தட்டியது அவளுக்கு.

அங்கிருந்த டீபாயிலிருந்து , அவர்களது மருத்துவ ஃபைலை கையிலெடுக்க, அது அவளது மனத்தைப் போல கனத்து, அவர்களது ‘விதியை’ எந்நேரமும் விளம்பரப்படுத்த தயாராக இருந்தது.. கண்ணெதிரே, ஃபோட்டாவில் ராகவனோடு சிரித்துக் கொண்டிருந்தாள் அகிலா.

அவளது எண்ணங்கள் நழுவத் தொடங்கியது.

கல்யாணமாகி முதல் இரண்டு வருடங்கள் முடிந்த நிலையில், ஆபீசில்,அக்கம் பக்கத்தில், என்று தெரிந்தவர்கள் என்று யாரைப் பார்த்தாலும் ‘கல்யாண சாப்பாடு’ தான் போடாமால் ஏமாத்திட்டீங்க, ‘சீமந்தச் சாப்பாடு எப்போ..?’ சீக்கிரமா விசேஷத்தை சொல்லுங்க’ என்ற ஒரே கேள்வியைத் தான் உரிமையோடு கேட்டார்கள்.

அப்பொழுதெல்லாம் வெட்கத்தில் சிரித்து மழுப்புவாள் அகிலா.

இன்னும் சிறிது வருடங்கள் சென்ற நிலையில், இவர்களைப் பார்த்த மாத்திரத்தில், அவர்களின் பார்வையில் ஒருவித வருத்தம் கலந்த விசாரிப்பு இருந்தது. காலங்கள் செல்லச் செல்ல, அவர்களே எதுவும் கேட்காமல் மௌனமாக நகர்ந்து கொண்டார்கள். மேலும் அவர்கள் பெண்களின் ‘சீமந்த நிகழ்வின் போது துணைப் பெண்ணாக வரச்சொல்லி அழைத்தார்கள். பிறகு அதுவும் மறுக்கப்பட்டு, அழைக்கப் படுவதையே தவிர்த்த போது தான், அகிலா வேதனையின் உச்சத்திற்குச் சென்று யார் எடுத்துச் சொல்லியும் கேளாமல், தனது வங்கி வேலையை ராஜினாமா செய்தவள் வீட்டுக்குள் முடங்கிப் போனாள்.

இருபது வருடத்திற்கு முன்பு அகிலாவும், ராகவனும் தான், அந்த வங்கியில் அதிகமாக பேசப்பட்ட காதல் ஜோடி. இருவர் வீட்டிலும் மறுக்கப்பட்ட காதலுக்கு ஆதரவு காட்டி, ‘காவல் நிலையம்’ வரை சென்று அங்கேயே கல்யாணத்தை முடித்து வெற்றி பெற்றதாக மகிழ்ந்ததும் அந்த வங்கி நண்பர்களே.
வாழ்க்கையில் வந்து சேர வேண்டிய வசதிகள் ஒவ்வொன்றாக வந்த பின்பும், அவர்கள் விரும்பியது கிடைக்கப் பெறாத போது தான், அதுவே, விஸ்வரூபப் பிரச்சனையானது.

தங்களைத் துரத்தும் கவலையிலிருந்து விலகி ஓட வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த போதெல்லாம், பணி நிமித்தம் கிடைத்த ஊர் மாற்றமும் கை கொடுத்தது. சூழ்நிலையின் மாற்றம், இருவரின் மனத்திற்கும் மருந்தானது.
“அம்மா, நான் கெளம்பறேன்…இனிமேட்டு போயி சோறாக்கி பசங்கள பள்ளியோடம் அனுப்போணும்….அதுங்க ரெண்டும் பாம்பும் கீரியுமா சீறிக்கிட்டு நிக்கப் போவுது. எல்லாம் என் தலையெளுத்து.கட்டினது புட்டியோட புரளும்..அதோட குட்டிங்க கட்டிக்கிட்டு புரளும், புலம்பியபடியே லெட்சுமி அவசரமாக சென்றாள்.


சுயநினைவுக்கு வந்த அகிலா , நேரமானதை உணர்ந்து கொண்டு எழுகிறாள்.
கண்ணாடியின் முன்பு தனது காதோர நரைமுடிக்கு ‘டை’ அடித்துக் கொண்டிருந்த கணவர் ராகவன் , ‘என்ன அகிலா…இன்னிக்கு காலங்கார்த்தாலயே மூட் அவுட்டா..?” என்கிறார்.

இன்னிக்கி நீங்க பேங்குக்கு லீவு போடுறீங்க…என்று இழுத்தவள், தனது கோரிக்கையைச் சொல்லி முடித்தாள்.
இந்த வயசுல இனி தேவையா? அதான் நாமளும் பார்க்காத வைத்தியமில்லை, ஜாதகம், ஜோசியம், பரிகாரம், கோயில் குளம்னு பார்த்துப் பார்த்து ஓய்ஞ்சு போயாச்சே. வழியே இல்லைன்னு ஆனபிறகு, விட்டுத் தள்ளு அகிலா. நம்ப குழந்தையும் எங்கியோ வெளியூர்ல படிச்சுக்கிட்டு இருக்குன்னு நெனைச்சு மனசைத் தேத்திக்கோ. இப்போல்லாம் குழந்தைகள் இருக்கறவங்களே தனியாத் தான் இருக்கும்படியா ஆகுது.

ப்ளீஸ்ங்க.இந்த ஒரு தரம் மட்டும் கடைசியா ‘ட்ரை’ பண்ணிப் பார்த்திடலாமே. இது வேற மாதிரியாம் . இந்த டாக்டர் ரொம்ப கைராசியாம். அங்கே போனா நம்ம பிரச்சனை கண்டிப்பாத் தீர்ந்து போயிரும். விளம்பரத்தைப் பார்த்து நம்ப பெயரையும் இன்னிக்கு வரதா பதிஞ்சு வெச்சிருக்கேன். அந்தக் கடவுள் நம்மைக் கைவிட மாட்டாங்க , கடைசியா ஒரு தடவைங்க, ஒரு குழந்தையைப் போலக் கெஞ்சினாள் கேட்டாள் அகிலா.
வேண்டா வெறுப்பாக ‘ம்’ என்றவர், சரி நீயும் கிளம்பு, என்றார்.

முகத்தில் மின்னலடிக்க, துள்ளலுடன் உள்ளே சென்றாள் அகிலா.. அவளது நடையில் தான் பெரிதாக எதையோ சாதித்து விட்ட திருப்தி இருந்தது.
அடுத்த சிலமணி நேரத்தில் அவர்களது கார் காம்பவுண்டு கேட்டை விட்டு வெளியேறியது. அகிலாவின் மனத்தில் இருக்கும் எதிர்பார்ப்பு அவளது முகத்தில் பிரதிபலிக்க, அன்றைய நாளிதழை விரித்து படிக்கத் தொடங்கினாள்.  எதுவுமே பேசாமல், வேறு சிந்தனையில் காரை ஒட்டிக் கொண்டிருந்தார் ராகவன். ‘எல்லாம் அப்பா…அம்மா போட்ட சாபமாக் கூட இருக்கலாம். காதல் தான் பிரதானம்னு நினைச்சு பெத்தவாளை உதாசீனம் பண்ணிண்டு, எதிர்ப்பை ஜெயிக்கிற வேகத்தில் , நண்பர்கள் சொன்னதை வேதவாக்கா எடுத்துண்டு , போலீஸ் ஸ்டேஷன்ல போய் நின்னு…வில்லங்கமா ஒரு கல்யாணம் செஞ்சுண்டு….ச்சே…..அதான்….அதோடே அப்படியே நின்னுடுத்து …’


சிறிது நேர அமைதிக்குப் பிறகு,


இந்தச் செய்தியைப் பாருங்க….ஒரு பசு மாடு மூணு கன்றுகள் போட்டிருக்காம். ஆச்சரியமாயில்லை…என்று கண்களை விரித்தாள் அகிலா. அத்தோட, சில இடங்கள்லே, பசு மாட்டுக்கு ஊசியைப் போட்டு ஒரே பிரசவத்துல ரெண்டு, மூணு கன்றுகளைக் கூடப் போடறா மாதிரி பண்ணுவாங்களாம். ச்சே..இவங்கல்லாம் .என்ன மனுஷங்க.. சுயநலக்காரங்க…பசுமாடுங்க பாவம்ல என்று திரும்பி ராகவனைப் பார்த்து செய்தித்தாளை காட்டிய அகிலா, அவரது முகத்தின் இறுக்கத்தை உணர்ந்து அதை மடக்கி வைக்கிறாள்.
சிக்னலின் சிவப்பு விளக்குக்கு அடங்கி நின்றது கார். அதற்காகவே காத்திருந்த ஒரு சிறுவன் கைகளில் சில தொட்டில் பொம்மைகளோடு இவர்களை நோக்கி ஓடி வருகிறான். அம்மா…அம்மா……கார்ல வாங்கி மாட்டுங்கம்மா…என்றபடி அந்த பொம்மைகளை வைத்து ஜன்னல் கண்ணாடியில் தட்டித் தட்டி கண்களால் கெஞ்சிக் கொண்டிருந்தான்.


வாங்குங்களேன்….என்றவள் தனது கைப்பையை எடுக்கப்போக.,
வேண்டாம்….என்றவர் குரலில் தீர்மானத்தோடு சிக்னலை பார்க்கலானார்.
அந்தச் சிறுவனின் முகத்தைப் பார்க்கும் திராணியற்று அவளும் சிக்னலை வெறித்தாள்.
 

கணவனின் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்டவளாக, ‘அந்தச் சின்ன வயசிலே நமக்குள்ளே இருந்த வேகம், எங்கே, சாதி, அந்தஸ்துன்னு காரணம் காட்டி, நம்பள பிரிச்சுடுவாங்களோன்னு பயந்து போய்தானே அப்படி ஒரு காரியத்தை செஞ்சுட்டோம். நீங்களே சொல்லிருக்கீங்க, உங்க வீட்டுல காய்கறிக்குக் கூட ‘பேதம்’ பார்ப்பாங்கன்னு. பெறகென்ன.? கல்யாணத்தை முடிச்சுட்டு போனா சரியாகிடும்னு, ஆசீர்வாதம் வாங்க வீட்டுக்குப் போனா, அங்கென்னாச்சு..? ரெண்டு வீட்லயும் நம்பள துரோகியாத்தானே பார்த்தாங்க. ‘போலீஸ் ஸ்டேஷன்ல போய் வாழ்க்கையைத் துவங்கினவங்களுக்கு இங்கென்ன வேலையின்னு கேட்டு துரத்தி விட்டாங்களே..நாமளும் தான் என்னத்த பெரிசா சாதிசுட்டோம். இன்னும் ஆரம்பிச்ச இடத்துலேயே நின்னுக்கிட்டு இருக்கோம். அவங்க வாழ்க்கையே.. இந்த பத்துப் பதினைந்து வருஷத்துல முடிஞ்சும் போயிருச்சு. எனக்கும் புரியும்…அவங்க மனசை எல்லாம் சங்கடப் படுத்தினோம்ல, அதான்..முளைச்சு நிக்குது. தழு தழுத்தாள் அகிலா.

என்ன பண்றது, நாம கொடுத்து வெச்சது அவ்ளோ தான். சரி..சரி….அழுதுடாதே…என்றவர், இன்னும் எவ்ளோ தூரம் போகணும்?..எங்கே அந்த ‘அட்ரஸை’ காமி என்று நினைவை திசை திருப்பினார்.
கார் கற்பகம் மருத்துவமனையை நோக்கிச் சென்றது.

அங்கே…!
 

வரவேற்பறையில் இளவயது கர்ப்பிணிப் பெண்கள் கையில் ஃபைல்களோடும் கண்களில் ஒரு வித எதிர்பார்ப்புடனும் வரிசையில் காத்திருந்திருந்தனர்.
அறைக்குள் பயந்தபடியே உள்ளே நுழைந்தவளைப் பார்த்து அமரச் சொன்ன டாக்டர், குழப்பத்துடன், நீ யாரும்மா? என்கிறாள்.
 

அடுத்த கணம் அந்தப்பெண் ஓடிச்சென்று டாக்டரின் காலடியில் விழுந்து, டாக்டரம்மா, என் பெயர் ஜானகி, குமார் என்னை உயிருக்கு உயிரா காதலிச்சாரு. ரெண்டு வீட்டு எதிர்ப்பையும் மீறி நாங்க கோயில்ல கல்யாணம் செஞ்சுக்கிட்டோம். அந்தக் கோவத்துல என் கணவரை என் வீட்டுக்காரங்க ஆளை வெச்சு அடிச்சே கொன்னுபுட்டாங்க. நானும் பயந்து போய் எங்க ஊரை விட்டு இங்கே ஓடி வந்துட்டேன்…இப்போ எனக்குன்னு யாருமேயில்லை. நீங்க தான் தயவுபண்ணி எனக்குப் பிரசவம் பார்த்து விட்டுருங்க டாக்டர். உங்களுக்குப்.புண்ணியமாப் போகும்” கண்ணீரோடு சொல்லிமுடித்தாள் அவள்.
 

இதென்ன தர்மாஸ்பத்திரியா? எழுந்திரு…எழுந்திரு ..அரசு மருத்துவமனைக்கு ஓடு. இந்த மாதிரி கதையெல்லாம் அங்க தான் செல்லும். என்ற டாக்டர், அதே கோபத்தில்,சிஸ்டர் ,”‘இந்த மாதிரி கேஸையெல்லாம் யார் உள்ளே விட்டது?” இவங்களை அழைச்சிட்டுப் போய் வெளியே விடு, என்று கத்தினாள்.

இதைச் சற்றும் எதிர்பாராத ஜானகி, மெல்ல எழுந்து அழுதுகொண்டே அங்கிருந்து வெளியேறினாள்.
 

அன்றைய பதிவுகளைப் பார்வையிட்ட டாக்டர், சிஸ்டர், சோனாலி வந்திருச்சா? அவளை அனுப்பு.
அழைத்ததும், அழகாக மெல்ல வந்து நின்றாள் சோனாலி.
 

உனக்கு இது மூணாவது ப்ராஜெக்ட்….அப்படித்தானே?
 

டாக்டர்ஜி. இந்தவாட்டி ஒரு லட்சம் சம்பளமா குடுங்கஜி . இனிமேல் இந்தத் தொழிலை விட்டுட்டு நானும் ‘ஷாதி’ பண்ணிட்டு ஃலைப்ல செட்டில் ஆயிடப் போறேன். முடிவான குரலில் சொன்னாள் சோனாலி.
ம்….என்கிட்டேயே நீ .டிமாண்ட் பண்றியா? அதெல்லாம் உங்க ‘புரோக்கர்’ கிட்டே பேசிக்கோ. சரி……நீ போய் அங்கே வெயிட் பண்ணு. நான் கூப்பிடும் போது வா, என்று டாக்டர் காட்டிய நீலத்திரை மறைவில் சென்று மறைந்தாள் சோனாலி.
 

சற்றுநேரத்தில், மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார்கள் அகிலாவும் ராகவனும்.
 

வரவேற்பறையில் காத்திருந்த இளம் கர்ப்பிணிப்பெண்களை பார்த்ததும், உள்ளுக்குள் குறுகிப் போனாள் அகிலா. கூடவே மனத்தின் ஒரு மூலையில் நம்பிக்கையும் துளிர்த்தது.
காதோர நரைத்தமுடி அப்போதுதான் அதிகமாக கவனத்துக்கு வந்தது ராகவனுக்கு. ‘எனக்கென்னவோ இதெல்லாம் சரியாத் தோணலை , ‘வாயேன் அகிலா…போயிடலாம்’ அவளுக்கு மட்டும் கேட்கும் தொனியில் பேசினார்.
ப்ளீஸ்….என்று கண்களால் கெஞ்சிய அகிலா அவரது கரத்தைப் பற்றி, ‘கொஞ்சம் பேசாமல் இருங்கள்’ என்று மெல்ல அழுத்தம் கொடுத்தவள்,
அங்கிருந்த சிஸ்டரிடம் சென்று விசாரித்ததும்..,
‘வாங்க’ என்று ராகவனையும், அவளையும் அந்த சிஸ்டர் ஒரு அறைக்கு அழைத்துச் செல்கிறாள்.
அங்கே, அவர்களுக்காகவே காத்திருந்த டாக்டரிடம் தங்களது ஃபைலை நீட்டிவிட்டு, அவளது முகத்தையே இருவரும் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தனர் .
 

ஃபைலைத் திறந்த டாக்டர் கற்பகம், ரொம்ப மும்முரமாக ஒவ்வொரு பக்கமாக திறந்து நிதானமாகப் படித்தவள் பின் லேசாக உதட்டைப் பிதுக்கி, மெல்ல தலையை உயர்த்தி….’சான்சே இல்லை ‘ என்று ‘நல்வாக்கு’ சொல்லிவிட்டு, ‘டோன்ட் வொர்ரி….உங்களைப் போல இருக்கறவங்களுக்குத் தான் இந்த மருத்துவமனை என்றாள். நீங்க சம்மதித்தால் போதும், அடுத்த பத்து மாசத்துல உங்களுக்கு ‘ட்வின்ஸ்’ கூட எங்கள் மருத்துவமனை மூலமாகப் பெற்றுக் கொடுக்க முடியும். பட், உங்களோட ‘கர்ப்பப்பை’ ரொம்ப சின்ன சைஸில் ரொம்ப வீக்காக இருக்கறதால ‘டெஸ்ட் ட்யூப் பேபிக்கும் சாத்தியமில்லை. .வேணும்னா ‘வாடகைத்தாய்’ முறையில் முடிச்சுக்கலாம். எங்க ஹாஸ்பிடல் ‘அதுக்கு’ ரொம்பவே பிரசித்தம். உங்களைப் போல இருக்கறவங்களுக்கு நாங்க ஒரு வரப்பிரசாதம். என்ன, மொத்தமா ஒரு ஐந்து லட்சங்கள் வரை செலவாகும்.பேசிக் கொண்டே சென்றவள், சிஸ்டர் ‘சோனாலி’யைக் கூப்பிடுங்கள் என்று சொல்லி நிறுத்தினாள்.
 

திரையை விலக்கி வெளிவந்த சோனாலி, ஹிந்திப்பட ஹீரோயினை நினைவு படுத்தினாள்.
 

இதோ…இந்தப் பொண்ணு மூலமாகத்தான், உங்க ப்ராஜெக்டை அக்ரீமெண்ட் போட்டு ப்ராசெஸ் பண்ணுவோம்..ஒருவேளை உங்களுக்கு இவளைப் பிடிக்கலையின்னா, வெளில உட்கார்ந்திருக்காங்க பாருங்க..அவங்களைக் கூட பார்த்து நீங்களே செலக்ட் பண்ணி ‘ புக்’ செய்யலாம்.. பட், கொஞ்சம் ‘டிலே’யாகும். அப்படி நீங்க செலக்ட் பண்றவளுக்கு நாங்க உடனே ‘டெஸ்டிங்’ ஆரம்பிச்சுடுவோம். பரவாயில்லையா? என்று கச்சிதமாக ‘விற்பனை’ செய்தாள் அந்த டாக்டர்.
 

இதையெல்லாம் கேட்டதும் அந்த இடத்தில் மேலும் உட்காரப் பிடிக்காமல், நெளிந்தார் ராகவன். ‘இதென்ன வியாபாரம்’? ‘அடுத்தவரின் ஏழ்மையை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு ஒரு விற்பனை…இதற்கு வாடகைத்தாய் என்று பெயர் வேறு’..சிந்தித்தவர் சட்டென எழுந்தார்….மேஜையிலிருந்த தங்களது ஃ பைலை எடுத்துக்கொண்டு, எதுவுமே பேசாமல் கிளம்பினார். அகிலாவும் ஏமாற்றத்தில் அவரைப் பின்தொடர்ந்தாள்.

அறையை விட்டு வெளியேறியதும் பெரிய மனப்புழுக்கத்திலிருந்து மீண்டு வந்தது போலிருந்தது அகிலாவுக்கும். அங்கே காத்திருக்கும் கர்ப்பிணிப் பெண்களைக் கண்டதும் அவளின் மனத்துள் பரிதாபம் ஏற்பட்டது. கொஞ்சம் கூட அன்போ, பாசமோ இல்லாமல் வெறும் பணத்துக்காக கர்ப்பத்தை சுமக்கும் யாரோ ஒரு ஹிந்திக்காரி பெற்றுத்தரும் குழந்தையை எப்படி ஏற்றுக் கொள்வது? என்ற கேள்வி அவளுள் எழுந்தது.

அங்கிருந்து வெளியேறி காரில் ஏறப்போன அகிலாவின் காலடியில், நிறைமாத ஜானகி, ‘அம்மா’ என்று கண்ணீருடன் விழுந்தபோது, முதலில் என்ன செய்வதென்றே அறியாமல் திகைத்தாலும் சட்டென்று அவளைத் தூக்கி நிறுத்தி ஆதரவாக கட்டிக்கொண்டாள் அகிலா. அவளுக்குள் தாய்மை பொங்கி வழிந்தது.
 

அதைக்கண்ட ராகவன், காரின் பின் கதவைத் திறந்து விட, அங்கு ஜானகியை அமரச் செய்துவிட்டு, அவளது கதையைக் கேட்டதும், அகிலாவுக்குத் தூக்கி வாரிப் போட்டது. இதே நிலைமை தனக்கும் நடந்திருந்தால்……

மனைவியின் மனநிலையை அறிந்து கொண்ட ராகவன், அகிலா..உன் நம்பிக்கை வீண் போகலை.ஆண்டவன் மகளோடு பேரக்குழந்தையும் சேர்த்தே நமக்கு கொடுத்துட்டாங்க. ஜானகியை நல்லாப் பார்த்துக்கோ என்கிறார்.
அதைப் புரிந்து கொண்ட ஜானகி, அவரைப் பார்த்துக் கண்ணீர் மல்க, ‘அப்பா…ரொம்ப நன்றிப்பா’ என்கிறாள்.

அகிலாவின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிய ஆரம்பித்தது.
மூவரின் மனம் நிறைந்த நிம்மதியோடு அங்கிருந்து கார் புறப்பட்டது.
அதே சிக்னலில், மீண்டும் அந்தச் சிறுவன் ‘தொட்டில் பொம்மையோடு’ இவர்களின் காரை நெருங்கவும், ராகவன் ஜன்னல் கதவைத் திறக்கிறார்.

தாய்மை



 தாய்மை க்கான பட முடிவு


தாய்மை தாங்கும் அச்சாணி 
வெறும் கவிதைக்குள் 
அடங்கி விடுமா தாய்மை…?
உதிரம் பகிர்ந்த உறவுகளின் 
உணர்வை ஆணிவேராக 
இதயம் புகுந்து ஊன்றி 
விழுதுகள் மண் தொடும் 
நங்கூரம் தாய்மை..!
இளமையில் இனிமையானது 
முதுமையில் தனிமையானது 
கடமையில் மேன்மையானது 
பொறுமையில் பூமியானது 
தூய்மையான கருணையே தாயானது..!
சுழலும் பூமிக்கு அச்சாணி 
தவிக்கும் இதயத்தின் தோணி 
இலக்கில் உயர்த்தும் ஏணி..
குடும்பத்தைக் காக்கும் ஜீவ ஊருணி..!
மேன்மை கண்ட தாய்மை 
மென்மை கொண்ட பதுமை 
வறுமை இடத்தும் பெருமை 
கொள்ளும் அவள் அருமை 
மங்கை கொண்ட மகுடம் தாய்மை ..!
கொட்டிக் கொடுத்தாலும் 
கிட்டாத சிம்ஹாசனம் 
அடையாளம் இல்லாத 
ஆத்மீக ரகசியம்..தாய்மை ..!
வெடித்த பாறையில் பச்சிலை போல் 
விரிந்த வானத்தின் கார்மேகம் போல் 
பொங்கும் கடலின் தொடர் அலைபோல் 
இறைவன் தந்த சீதனம்..தாய்மை..!
உன்னதத்தை உன்னதத்தால் உன்னதமாக்கும் 
உருவுக்குள் அடங்கி விடாது 
உணர்வுக்குள் முடங்கி விடாது 
கவிதைக்குள் வீழ்ந்து விடாது…தாய்மை ..!
உயிருக்குள் உயிராக 
உலகுக்கே உயிராக 
பெருஞ்ஜோதியின் வரமான 
பெருங்கருணையல்லவா..தாய்மை ..!

சனி, 14 மார்ச், 2015

மதுரையின் மணிக்குரல் மங்கயர்க்கரசி"

Inline image 1 

மதுரையில் பிறந்தவர்கள் மிகவும்  அதிர்ஷ்டம் செய்தவர்கள் என்று நானும் அடிக்கடி நினைத்துக் கொள்வேன். மீனாட்சி அம்மன் கோயில், சித்திரைத் தேர் திருவிழா, நவராத்திரி விழா, மல்லிகைப்பூ, சூடான  இட்லி, காரவடை, பட்ணம் பக்கோடா, சுக்குமல்லி காப்பி என்று இதையெல்லாம் கடந்து ஆடிவீதியில் நடக்கும் ஆன்மீக சொற்பொழிவுகளும் தான் இங்கே பிரசித்தம். பல பிரபலங்களின் கதாகாலாக்ஷேபம் ,  கச்சேரிகள், என்று ஆடிவீதி அடிக்கடி களைகட்டும். அலைமோதும் கூட்டத்தின் நடுவில் தென்றல் நுழைந்து செல்லும். தொலைக்காட்சி பெட்டியின் அறிமுகம் கூட அதிகம் இல்லாத அந்த காலகட்டம்.  எனது பாட்டியின் வற்புறுத்தலின் பேரில் வேண்டாவெறுப்பாக கோயிலுக்கு 'சொற்பொழிவு' கேட்கச் சென்றேன். அன்றைய தினத்தில் 'திருமுருக கிருபானந்த வாரியாரின்' உரை ஆரம்பமாயிற்று. அவர் பேசப்பேச, என்னோடு சேர்ந்து ஆயிரக்கணக்கான தலைகளும் 'மகுடிக்கு ஆடிய அரவம்' போல் அவர் இருக்கும் திக்கைத் தவிர வேறெங்கும் திரும்பாமல் அவர் ஆற்றிய உரைக்குள் உறைந்து போயிருந்தோம் என்று தான் சொல்லவேண்டும். அப்படியொரு அருமையான 'கந்தபுராணம்' பற்றிய சொற்பொழிவு. அன்றைய கூட்ட மிகுதியால் என்னால் அவரது அருகில் சென்று ஆசீர்வாதம் வாங்க நினைத்தும் இயலவில்லை. மனத்துள் ஒருவித ஏமாற்றம் சேர்ந்து கொள்ள வீடு திரும்பினேன். அடுத்த நாளே , அரவிந்த் கண் மருத்துவமனையில் டாக்டர்.நாச்சியார் அவர்களோடு 'கிருபானந்த வாரியாரை' மிக அருகில் காணவும், ஆசீர்வாதம் பெறும் பாக்கியம் எதிர்பாராமல்  எனக்கு அங்கு கிட்டியதையும் இன்றுவரையில் ஒரு வரமாகவே எண்ணுகின்றேன்.

அதுபோலவே, பல ஆண்டுகள் கடந்து, சமீபத்தில் எனது அக்காவுடன் பள்ளி நிர்வாக நிமித்தம் சாத்தூர் திரு.ராஜேந்திரன் அவர்களது இல்லத்துக்கு சென்றிருந்த போது, "இந்த வீட்டிலிருந்து தான் வாரியார் சுவாமிகள் இறுதியாக லண்டனுக்கு சொற்பொழிவாற்ற கிளம்பிச் சென்றார். திரும்பி வரும்போது விமானத்திலேயே உயிரிழந்து விட்டார்...இருபத்தோரு வருடங்கள் இன்னும் இந்த வீட்டிலிருந்து  நகரவே இல்லை என்று அவர் சொன்னதும், அந்த இடத்தில் கனமான மௌனமும் கூடவே வாரியாரின் சுவாசமும் நிழலாக நிலவியது. தனது வாழ்நாள் முழுதும் கிட்டத்தட்ட எழுபது ஆண்டுகள் இடைவிடாது இறையுணர்வோடு பக்தியை உபதேசித்தவர். அந்தத் தீவிர முருக பக்தரைப் பற்றி அறியாதவர் தமிழராக இருந்திடல் முடியாது. தமது வாக்கால் வாழ்ந்த பலருள் முன்னணியில் நின்றவர் வாரியார்.

பெரும் பேறு பெற்ற அவரது அருகாமையில் நின்று, அவரது ஆசியில் வளர்ந்து அவர்காட்டிய பாதையில் சென்று இன்று, தனது வாழ்க்கைப் பிரயாணத்தில் வெற்றிகரமாக பயணிக்கும், மதுரையில் பிறந்த மணிக்குரல் தேச மங்கையர்கரசி மட்டுமே வள்ளல் வாரியாருக்கு பிரசங்க வாரிசாக வளருகிறார் என்றால் அது மிகையாகாது. அதிக இனிய சுவையுடைய மாங்கனியைத் சுவைத்துவிட்டு அதன் சுவையை மீண்டும் நமது சந்ததியர் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதன் விதையை மறக்காமல் மண்ணில் புதைத்து வைப்போம். . அதைப் போலவே, வாஞ்சையோடு வள்ளல் வாரியாரும் இறை உணர்வை, தேசபக்த சிந்தனையை, தேச மங்கயர்கரசிக்குள் ஞானப் புதையலாக புதைத்து விட்டாரோ என்ற எண்ணம் எழுகிறது.

கதை கேட்பதோ, படிப்பதோ வயது வித்தியாசமின்றி அனைவராலும் விரும்பப்படுவது தான் .  அதுவும் விறுவிறுப்பான உண்மை சம்பவத்தை கதையாக படிக்கும் போதே மனத்துள் அந்த ராஜ்ஜியமே உருவாகிவிடும். எண்ணங்களின் ஆதிக்கத்தை எழுத்துக்கள் இழுத்து கண்களுக்குப் படையல் செய்துவிடும். அதை சகஜமாக யார் வேண்டுமானாலும் செய்து விட இயலும். எழுதுவதை ஊறப்போட்டு, ஆறப்போட்டு, சேர்த்து, அடித்து, திருத்தி, இழுத்து, சுருக்கி என்று இஷ்டம்  போல வெட்டி ஒட்டிக் கொள்ளலாம். இறுதியாய் பள்ளத்தில் பாயும் நீராக எண்ணங்கள் வடிவெடுக்கும்.அந்த எழுத்தும் வாசகரை கட்டிப் போடும். அதைப் போன்றே 'செவிக்கு உணவு' என்றொரு பதமும் உண்டு. அந்த பதத்தை, கேட்கும் செவிகளுக்கெல்லாம் 'விருந்தாக' தனது வெண்கலக் குரலில் கதை கதையாய் கதைத்துக்  கேட்கும் ஒவ்வொருவரையும் கதைவசம் கவர்பவர் கலைமாமணி தேச மங்கையர்கரசி மட்டுமே.
மற்ற சொற்பொழிவாற்பவர்களைப் போல, அவர்கள்  பேசும்போது கூடவே ஓடிச் சென்று நாம் மூச்சு விடத் தேவையில்லை. எல்லாம் கேட்டு விட்டு என்ன சொன்னார்னு  ஒண்ணுமே புரியலையே என்று தவிக்கவும் அவசியமில்லை.

சரித்திரத்தில் ஐந்து, ஆறு ஔவையார்கள் இருப்பதாக சொல்வதுண்டு. அந்த ஔவையார், தற்போது  மீண்டும் பிறவியெடுத்து  நம்மோடு அதே பரந்த அறிவோடும், ஞானத்தோடும் நடமாடிக் கொண்டிருந்தால் ஒருவேளை அவர் தேச மங்கையர்க்கரசி போன்றே இருந்திருப்பாரோ என்று கூட எண்ணத் தோன்றும். அந்த அளவுக்கு தெள்ளத் தெளிவோடு வானத்திலிருந்து 'ஜோ' வென்று ஒரே சீராக பெய்யும் மழையைப் போல தன்னிடம் இருக்கும் ஞானத்தை தாராளமாக ஒவ்வொருவருக்கும் பகிர்ந்து அளிப்பதை 'செவிக்கு விருந்தென்று ' சொல்லாமல் என்னென்பது? சந்தேகமே இல்லாமல் இவரும் ஒரு தெய்வீக ஞானக் குழந்தை தான்.

எண்ணங்களை எழுத்தாணியின் உதவியின்றி தனது சொல்லாதிக்கத்தால் முத்திரை பதிக்க முடிந்தால், இதில் சிலர் தான் வெற்றி பெற முடியும் என்பது எனது அபிப்ராயம். அத்தனை புராணங்களும், இதிகாசங்களும், நாயன்மார் கதைகளும், அடுக்கடுக்காக தனது மூளையில் பதியவிட்டு நிறுத்தி அதை அவ்வண்ணமே தங்கு தடையற்ற வார்த்தை ஜாலத்தில் வெளிக்கொணரும் விதம் காண்போருக்கு வியப்பூட்டும். போட்டிபோடும் எண்ணங்கள் யாவும் அவரது குரலில் ஒரே சீரான ஆலயமணி போலக் கேட்கும். 'பக்தி உலா' தொடரில் அவர் கூறும் ஆலய தரிசனம் நிகழ்ச்சி ஒவ்வொன்றும், கேட்போரை அந்தந்த கோயிலுக்கே  அழைத்துச் செல்லும் பிரமையை ஏற்படுத்தும். பேசுவது ஒரு கலை தான். ஆனால் தான் எடுத்துக் கொண்ட தலைப்பைச் சுற்றியே கன கச்சிதமாக தங்கு தடையின்றி ஒவ்வொருவரின் நாடி பிடித்துப் பார்ப்பது போல எதார்த்தமான பேச்சு வழக்கில்,மடை திறந்த வெள்ளம் போல கூடவே நகைச்சுவை கலந்து கேட்பவரின் ஆவலை இறுதிவரையில் தூண்டி , 'எப்பொழுது முடியும்' என்று காக்க வைக்காமல், சீக்கிரம் முடிந்து விடக் கூடாதே என்ற ஆதங்கத்தோடு ரசிக்கும் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப கதை சொல்பவர் சொல்லரசி தேச மங்கையர்கரசி .

கால காலத்துக்கும் நிலைபெறவேண்டிய  நமது கலாச்சாரங்கள், நீதி,நேர்மை, இலக்கிய புராணங்களை அழியவிடாமல் காத்துவரும் வகையில் தேசபக்த சிந்தனையோடு இவர் பிரசங்கம் செய்வதுவும் தேசத்தொண்டு தான். இவரது சொற்பொழிவுகள் சிறுவர்களுக்கும், இளைய தலைமுறையினருக்கும் எளிதில் புரியும் வண்ணம் இந்தக் காலத்திற்கும் பொருந்தும் வண்ணம் கதைகள் சொல்லி எடுத்துரைப்பது தான் இவரது தனிச்சிறப்பு. இந்த உலகத்தில் விரல் விட்டு எண்ணிவிடக் கூடிய அளவில் மிகச் சிலரே சரஸ்வதியின் பரிபூரண கடாக்ஷத்தோடு வளைய வருகின்றனர். அதில் நாவுக்கரசி மங்கையர்கரசியும் ஒருவர் என்று நினைக்க, மனம் நிறைகிறது.

தற்போது தேசம் தாண்டி இவரது பிரசங்கங்கள் நடைபெறுவது மகிழ்வான  விஷயம். நமது நாட்டிற்குப்  பெருமை தேடித் தரும் 'கலைமாமணி' இவரையும் நமது தமிழ்நாடு அரசு அங்கீகரித்து சிறப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையை  அவரது ரசிகர்கள் அனைவரின் சார்பாக இங்கே சமர்ப்பிக்கிறேன்.

தான் எடுத்துக் கொண்ட செயலில் முழு முனைப்புடன் ஈடுபட்டால் கிடைக்கும் வெற்றியின் மகத்துவம் அபரிமிதமானது என்பதற்கு கலைமாமணி தேச மங்கையர்கரசி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.இவரைப் பற்றி முன்பே அறிந்தவர்கள்  இந்த கட்டுரையையும்  ஏற்றுக் கொள்ளக்கூடும்.இதுவரையில் இவரைப் பற்றிய பரிச்சயம் இல்லாதவர்களுக்கு இந்த கட்டுரை ஒரு 'விசிட்டிங் கார்டு' போல செயல்படட்டும். இணையத்தில் இவரது சொற்பொழிவுகள் காணொளியில் நிரம்பி வழிகின்றது. வாய்ப்புக் கிடைத்தால் ஒருமுறை கேட்டுத் தான் பாருங்களேன். புதையலாக மறைந்திருக்கும் ஒரு பொக்கிஷத்தை அடையாளம் காட்டிய பலன் இந்தக் கட்டுரையைச் சேரட்டும்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------



வியாழன், 12 மார்ச், 2015

தாய்மை


 24653


மன்மதன் கரந்தனில்
தாய்மையின் வில்
ரதிதேவி வரமிட்டாள்
தாய்மையே வெல்..!

தாயுமானவன் அவன்
விதைத்த வித்துக்கள்
புவியெங்கும் பூ
மரங்களாகி விதை தூவி
தாய்மைக்கனி தாங்கி
 
புவிதாங்கும் சுமைதாங்கி..!
கார்மேகம் தாங்கும் மழைநீராக
மங்கையரின் மனந்தனில்
தாய்மை உறங்கும்..!

பெற்றெடுத்துத் தாயான
நிமிடம் முதலாய் தியாகத்தின்
உறைவிடமே தாய்மை..!

பெண்மையின் பூரணம்
தாய்மையே தலையாயம்
தேசம் கடந்தும்
புரியும் தாய்மொழி ..!

அன்பின் முகவரி
அன்னையே
தராசு முள்ளென
தாய்மைக்கு
ஆண் பெண்
பேதங்களில்லையே..!

ஏங்கும் மனமெங்கும்
தாய்மையின் சங்கமம்
பெண்ணவளின் கடமைகளுள்
தாய்மையே குங்குமம்..!

தன் பசி துறந்து
பெற்ற மக்களின் வயிறு
நிறைக்கும் அட்சய பாத்திரம்..!

ஆயிரம் ஜென்மங்களும்
நீயே எந்தன் தாயாக வேண்டும்
வேண்டும் மனம் தான்
தாய்மையின் வெற்றி…!

இறைவனின் பிரதிநிதியாகி
வீட்டுக்கு வீடு
வாழும் காமதேனு..!

தாய்மைக்கில்லை
வேலியும் விலங்கும்
நஞ்சையும் அமுதையும்
சமமாக்கி நிறுத்தும்
துலாக்கோல் தாய்மையே ..!

பூலோகப் உயிரினங்களுக்கு
இறைவன் கொடுத்த
உயிர் உரம் தாய்மை….!

தாய்மை ஒரு வரம்
அதுவே மங்கையரின்
சிந்தாமணி மகுடம்..!

ஏழ்மையிலும் தாய்மை
பெருமையையே தாங்கும்
ஊமை நெஞ்சங்களும்
தாய்மைக்கே ஏங்கும்..!

உருவைத் தாங்கி உணர்வில் ஏங்கி
உயிரை வைத்து உயிரைப் பிரித்து
வாழும் அதிசய அன்னம்….அம்மா..!

ஆயிரம் கோடி யுகங்கள்
பிறந்தாலும் அழிந்திடாது
வளரும் உறவு தொப்புள்கொடி..!

ஜனன மரண கணக்குக்குள்
விடையாக விதையாகி
மறைந்து மலரும்
தாய்மைக் கிளைகள்..!

காந்தம் மட்டும் ஈர்ப்பதில்லை இரும்பை
தாய்மையின் காந்தமும்
இளக்கும் இரும்பு மனத்தை..!

தாய்மை என்றொரு பிம்பம்
மனித இதயங்களின் பிரதிநிதியாய்
பேதங்களின்றி அழகு காட்டும்
மாயக் கண்ணாடி..!

தாய்….அன்பின் ஆதிக்கத்தால்
உள்ளம் நிறைத்து
அள்ளிக் கொடுக்கும்
அன்புச் சுரங்கம்…!  இதயங்கள் ஒட்டி
உறவாடும் நந்தவனம்..!

எல்லையில்லா அன்பு கொண்டு
அன்னையாய் நிற்பவள்
தாய்மையின் வாஞ்சையால்
பிரபஞ்சத்தையும் வசமாக்குவாள்
பராசக்தி வடிவானவள்
இப்பரத்தில் தாய்மையே வெல்லும்….!