ஞாயிறு, 29 ஜூலை, 2012

இசையால் வசமாகா இதயம் எது..?


இசைச் சங்கமம்....


கதா காலட்சேபம் - சத்சங்கம்


இசை....இறைவனின் சந்நிதி.


வியாழன், 26 ஜூலை, 2012

ஹைதராபாத் சமையல்:



 


ருசியான பாகாரே பைகன்  செய்யும் முறை.

(Baghare Baigan Recipe)


தேவையானவைகள்:

அரை கிலோ குட்டி கத்திரிக்காய்கள்
சிறிய வெங்காயம்       - 4
இஞ்சி                                 - சின்னத் துண்டு
பூண்டு பல்                       - இரண்டு
தனியா விதை                - 2 ஸ்பூன்
வெள்ளை  எள்ளு          - 5 ஸ்பூன்
நிலக்கடலைகள்           - 8 ஸ்பூன்
ஜீரகம்                                 - 1 ஸ்பூன்
கசகசா                               - அரை  ஸ்பூன்
கொப்பரைத் துருவல்  - 4 ஸ்பூன் அளவு
மெந்தியம்                         - அரை ஸ்பூன்
மஞ்சள் பொடி                 - அரை ஸ்பூன்
மிளகாய் பொடி               - ஒரு ஸ்பூன் அளவில்
வெல்லம் பொடித்தது  - ஒரு ஸ்பூன்
புளி                                      -  பெரிய  எலுமிச்சை அளவு
கருவேப்பலை               -  ஒரு கொத்து
உப்பு                                    - தேவைக்கேற்ப
நல்லெண்ணெய்           -  இரண்டு கரண்டி அளவில்

செய்யும் முறை :
  • புளியை ஒரு டம்ளர் நீரில் ஊறவைத்து கசக்கிச் சாறு எடுத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
  • குட்டிக் கத்திரிக்காய்களை காம்பு நீக்கி அங்கிருந்து குறுக்கே இரண்டு இன்ச் அளவுக்கு + மாதிரி
    வெட்டிக் கொள்ளவும். அடி வரை வெட்டக் கூடாது. (எண்ணைக் கத்திரிக்காய்க்கு வெட்டுவது போல வெட்டவும்)
  • வெங்காயத்தை சின்னதாக நறுக்கி பொன்னிறமாக வதக்கி  வைத்துக் கொள்ளவும்.
  • மிதமான சூட்டில் : தனியா, எள்ளு, நிலக்கடலை, சீரகம், கசகசா, கொப்பரை துருவல், மெந்தியம் அனைத்தையும் சேர்த்து வாசனை வரும் வரை வறுத்து வைத்துக் கொள்ளவும்.
  • மேலே சொன்ன வறுத்து வைத்த மசாலாவுடன் , வதக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, உப்பு, மஞ்சள் பொடி, மிளகாய்பொடி, வெல்லம் அனைத்தையும் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • அரைத்த விழுதை பாதியாக்கி அதை புளித்தண்ணீரில் கலக்கி வைத்துக் கொள்ளவும்.
  • மீதி விழுதை ஸ்பூனால் எடுத்து குட்டி கத்திரிக்காய்களின் உள்ளே அடைக்கவும்.
  • அடி கனமான வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, கருவேப்பளையைப் பொறித்து கொள்ளவும்
  • மசாலா அடைத்த கத்திரிக்காய்களை எண்ணெயோடு சேர்த்து பத்து நிமிடங்கள் வதக்கவும்,அத்தோடு கூட
  • புளித்தண்ணீரில் கரைத்த மசாலா விழுதையும் மெல்லக் கலந்து வேக வைக்கவும்.
  • தேவையானால் சிறிது தண்ணீர் சேர்க்கலாம். மூடியைப் போட்டு மூடி விட்டு, அப்பப்போ சிறிது கரண்டியால் கிளறி விடவும்.
  • கத்திரிக்காய்கள் வெந்து எண்ணெய் பிரிந்து வாணலி ஓரம் மிதந்து வரும் பதம் வரை மிதமான தீயில் வேகவைக்கவும்.
  • கொத்தமல்லித் தழைகளை பொடியாக நறுக்கிச் சேர்க்கவும்.
  • சூடாகப் பரிமாற்ற ருசியான பகாரா பைகன்.
  • சாதத்திற்கும், ரொட்டிக்கும் தொட்டுக் கொள்ள மிகவும் சுவையானது.

கசந்த....லட்டு....!

Laddu/Laddoo from Sri Krishna Sweets
இன்னைக்கு என்ன அதிசயம்....? மழை கொட்டோ.....கொட்டுன்னு கொட்டப் போகுது, அங்க பாருங்க...நாடகத்தை....என்று ..பல்லைக் கடித்துக் கொண்டு ரகசியமாகக் கண்ணைக் காண்பித்துச் சொன்ன பியூன் செல்வராசைத் தொடர்ந்து சுற்றியிருந்த அத்தனை பேர் அதிசயக் கண்களும் அவன் சொன்ன திசைநோக்கித் திரும்பின.

"அடடா.....எச்சில் கையால் கூடக் காக்காய் ஓட்ட மாட்டானே...இந்தக் கடைஞ்செடுத்த கஞ்சன்..கணக்கன்..! இன்னைக்கு என்ன.. சிடுமூஞ்சியில் இத்தனை சிரிப்பு...! கொடைக் கர்ணன் வேஷம் போட்டு என்னைக்கும் இல்லாத திருநாளா... ஒவ்வொருவருக்கும் லட்டு தானம் பண்ணராரே....காணக் கண் கோடி வேண்டும் ! அப்படி என்ன தான் நடந்திருக்கும்...? மனதைத் துளைக்கும் கேள்விக் கணைகள்....அனைவரின் கண்களுக்கும் அக்கௌன்டன்ட் வேதநாராயணன், ஆச்சரியக் குறியாகத் தெரிந்தார்.

யாருக்கும் தெரியாமல் பிரமோஷன்..கிரமோஷன் கெடைச்சுதா..? சந்தேக மனங்கள் நடக்கும் அதிசயத்தை
வேடிக்கை பார்க்க.

அதிசயமாக, வேத நாராயணன்...முகமெல்லாம் சந்தோஷ ரேகைகள் ஓட..அவரது கை நிறைய பொன் வண்ணத்தில் லட்டுக்கள் "கண்ணா... லட்டு திங்க ஆசையா"...? என்று ஆசையைக் கிளப்ப...,அருகில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்-ன் வெள்ளை பிளாஸ்டிக் இனிப்பு டப்பாக்கள்....கண் சிமிட்டிக் கவர்ந்திட.......அப்படி என்ன தான் நடந்திருக்கும்...?

ஆஹா....ஆஹா.....அதிசயம்...ஆனால் உண்மை...! என்ன விசேஷம்....வேதா சார்..! பிரமோஷன். கெடைச்சுதா..? இல்லை...புதையல் கிடைச்சுதா....? இந்த வாங்கு வாங்கறீங்க....."குணா" படத்தைத் தான் இத்தனை லட்டு, ஞாபகப் படுத்துது...."அபிராமி...அபிரா
மி.." என்று பவ்யமாக கை ஏந்தி வாங்கும் சாரங்கன்....கேட்க.

எனக்கா புரமோஷன் ? டிமோஷன் இல்லாம என்னை வச்சிருக்கார் அது போதுமே...இது வேற விஷயம்... அதான்...என் பையன் அருண், இன்ஜினியரிங்கில் நல்ல மார்க் எடுத்து ஃபர்ஸ்ட் கிளாசில் பாஸாயிட்டான் அதான்....நூறு லட்டு ஆர்டர் பண்ணினேன்.....என்று குதூகலமாகச் சொல்லியபடியே லட்டு டப்பாவை எடுத்து நீட்டி எடுத்துக்கோங்க..பிளீஸ் என்ஜாய்.....என்று பெருமை பொங்கும் குரலில் சொல்ல...அவரை பற்றி நன்கு அறிந்த ஆஃபீஸ் நண்பர்கள் எடுத்த லட்டைத் வாயில் ஒன்றும் கையில் ஒன்றுமாய் எடுத்துத் திணித்துக் கொண்டு வாயடைத்துப் போயினர்.

இவர் கருமமே கண்ணாக ஒவ்வொருத்தரிடமும் "ம்ம்...எடுத்துக்கோ....எடுத்துக்கோ....என்று சொல்லிக் கொண்டே நீட்ட...

" அடடா...! எனக்குச் சக்கரை பிராப்ளம்....இருக்கே... ..லட்டு வேண்டாமே...என்று ஒதுக்கியவர்கள் கையிலும் கூட" நீ சாப்பிடாட்டா...என்ன....வீட்டுக்கு எடுத்துண்டு போய் அங்க கொடேன்....இன்னொன்னு கூட எடுத்துக்கோ......நூறு லட்டுக்கள்... வாங்கியிருக்கேன்...!

நூறு என்பதை ரொம்ப அழுத்திச் சொல்லி. கையில் திணித்துக் கொண்டே. இஷ்டம் போல சாப்பிடுங்கள் என்று சொல்லும் அவரைத் திடீர் கர்ணனானதை...ஏற்றுக் கொள்ளாத மனோபாவத்தில் இருந்த அனைவரின்,
"ரொம்ப தேங்க்ஸ்,
" ரொம்ப சந்தோசம்"
இனிமேல் நீங்கள் தாராளமா வி.ஆர்.எஸ். வாங்கிக்கலாம்...!
"உங்கள் குடும்ப கோபுரத்தை சேர்ந்து தூக்க உங்கள் மகன் வந்துட்டான் ஸார்..?"
கொடுத்து வெச்சவர்...நீங்க..!
அருமையான பிள்ளை.....எனக்கும் இருக்கே..ஒரு தருதலை..!
ம்ம்..என்ற ஒருவரின் பெருமூச்சு....!

என்றெல்லாம் ஒவ்வொருவரின் கைக்கு மாறிய லட்டுக்கள் பேசின...!

இவரும் சந்தோஷத்தின் உச்சத்தில்..."ஆமாமாம்..".என்று ஆமோதித்துக் கொண்டிருந்தார்...

கடைசியாக ஒருவர் சொல்லக் .."பின்னே..இத்தனை வருடங்கள் வெளில ஒரு டீயோ...காபியோ கூட வாங்கிச் சாப்பிடாமல்...ரொம்பக் கஷ்டப் பட்டு ஓவர் டைம் எல்லாம் பார்த்து பணத்தைச் சேர்த்து மகனைப் படிக்க வெச்சுருக்கார் ...அந்த கஷ்டம் அவருக்குத்தான் தெரியும்...அப்பாவோட கஷ்டத்தை சரியாப் புரிஞ்சுண்டு பிள்ளையும் நல்ல மார்க் எடுத்து பாஸ் பண்ணிருக்கான்....உங்க மகனுக்கு எங்கள் ஆசீர்வாதங்கள் சார்.." கேட்டபோது..வேதா சாருக்குத் தூக்கி வாரிப் போட்டது. அட...! என்று மனசுக்குள் சிரித்துக் கொண்டார்.

கடைசியாக மீதி இருந்த லட்டுக்கள்...அவருக்கு .வீட்டை ஞாபகப்படுத்த டப்பாவை பத்திரப் படுத்திக் கொண்டார்.

ஆபீஸ் முழுதும் திடீரென கல்யாண சத்திரத்தின் வாசனையைப் பரப்ப....மணி நேரக் கதாநாயகனாக மாறிப்
யிருந்த "வேதா சார்"...அங்குமிங்கும் நடந்தபடி தான்... ஏதோ பெரியதாக சாதித்து விட்டதைப் போல நண்பர்களிடம் தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்தார். இவரை நன்கு புரிந்து வைத்திருந்த பலரும்..."சோழியன் குடுமி சும்மா ஆடுமா" என்ற எண்ணத்தில் காதில் புகை விட்டுக் கொண்டிருக்க....!

அன்றைய தினம் அத்தனை பேரின் ஆச்சரியத்தில் வேலையை முடித்து ஆபீஸை விட்டு மீதமிருந்த லட்டுக்களையும் மறக்காமல் எடுத்துக்கொண்டு வீட்டுக்குக் கிளம்புகிறார் வேத நாராயணன்.

அவர் மனசு முழுதும்.. இனி அருண் எங்கு, எப்போது வேலைக்கு போவான்....? இன்போசிஸ்,விப்ரோ,கூகிள்,ஜீயீ, என்று இவருக்குப் பிடித்த பெரிய பெரிய எம் என் சி கம்பெனியின் பெயர்களாக நினைவில் கொண்டு வந்த படியே.... இங்கெல்லாம் வேலை பார்த்தால் தான் எனக்கு மதிப்பாக இருக்கும்....கிடைக்குமா.....? எல்லாம் கிடைக்கும்...என்று எண்ணியவர் பஸ் வரக் காத்திருந்தார். அவரது பொறுமையை சோதித்துக் கொண்டிருந்தது வராத பஸ்.

அவரைப் பொறுத்தவரை டூ வீலர் கூட டாம்பீகம் தான்.....நமக்காகத் தானே எல்லா இடத்துக்கும் பஸ் விட்டிருக்கான்....அத விட்டுட்டு ஏன் தனியா ஒரு வண்டி பணத்தைப் போட்டு வாங்கி...பெட்ரோல் விக்கற விலைக்கு அதுக்கு வேற எதுக்கு பணத்தை அழணும்..? எனக்கு பஸ் ஸ்டாண்ட் வரை என் சொந்த பதினோராம் நம்பர் பஸ் சர்வீஸ்....அதான் ரெண்டு கால்கள் இருக்கும்போது எந்த டிவிஎஸ், ஹோண்டா, பஜாஜ்,னு எந்தக் கம்பெனியும் என் மனசை அசைச்சுக்க முடியாது....எனக்கு வண்டி ஓட்டத் தெரியாது, அது வேற விஷயம்....ஆனால் எனக்கு இதுவரைக்கும் ஒரு ஆக்ஸிடென்ட் கூட நடந்ததில்லை...என்று பெருமையாகச் சொல்லிக் கொள்ளும் சமர்த்தர்.

அவரின் நடை உடைகள் அவரை எல்லோருக்கும் ஒரு முப்பது வருஷத்துக்கு முந்திய ஃபாஷனை நினைவு படுத்தும்.நெற்றி நிறைய வீபூதிப் பட்டை...கழுத்தில் பாம்பு பிடிக்கிறவன் மாதிரி ஸ்படிகம்,நவரத்தினம்,ருத்ராக்ஷ சங்கிலி என்று.....பயமுறுத்த...கைவிரல் நிறைய மத்தளக் காரன் மாதிரி விரலுக்கு ஒரு வண்ணக் கல் வைத்த மோதிரங்கள்....பள பளக்க... காதில் பூ வைக்காத ஒரு குறைதான் ..! பார்க்கிற உத்தியோகம் அப்படி.. யாராயிருந்தாலும் பயந்து ஒரு பத்தடி தள்ளி நிற்கணும் என்ற தோரணையைக் கச்சிதமாகக் கடை பிடிப்பவர். கணக்கன், கணக்குப் பண்ணித் தான் பேசணும்... என்றும் தன் கொள்கையாக மார்தட்டிக் கொள்வார்.

இருந்தாலும்....அவரிடம் நெருங்கிப் பழகும் சிலர்....உங்க மூளைக்கு நீங்க தான் முண்டாசு கட்டிக்கணும்.....இவரது கஞ்சத் தனத்துக்கு இப்படி எல்லாம் வேற ஒரு காரணம் இருக்கா ? மனுஷன் ரூம் போட்டு யோசிப்பாரோ...? சரியான கஞ்சனாப் பார்த்துத் தான் கணக்கராப் போட்டிருக்காங்க...ஒரு வவுச்சரைப் பாஸ் பண்ண
எப்படியெல்லாம் கேள்வி கேட்கிறார்....அந்தாளோட குறுக்கு புத்தியும், கஞ்ச புத்தியும்....இந்த வேலையே வேண்டாம் சாமின்னு ஓடலாம் போல இருக்கு, என்று அலுத்துக் கொள்ள வைப்பார்.

எல்லாரும் குண்டுச் சட்டியில் தான் குதிரை ஓட்டுவார்கள் ன்னு கேள்வி பட்ருக்கோம்......இவர் கொட்டாங்கச்சியில் குதிரை ஓட்டுவார்பா.....என்றெல்லாம் சிலர் சிலேடையாகச் சிரிப்பதும் உண்டு...சிக்கனம், செலவை எப்படிக் கட்டுப் படுத்தாம்னு நம்ம அக்கௌன்டன்ட் கிட்டத் தான் கேட்டுத் தெரிஞ்சுக்கணும். மனுஷனுக்கு ஏத்த வேலை தான் ஆண்டவன் போட்டுக் கொடுத்திருக்கான்....என்றும்...பேசிக் கொள்வார்கள்.

இவனால எப்படி ஒரு குடும்பத்தை கட்டிக் காப்பாத்த முடியுது...?அப்படி ஒரு ஆசையே இல்லாத பெண்டாட்டியும் , பிள்ளையுமா ..இருப்பார்கள்...இந்த ஆச்சரியத்தை...!
அடப் போப்பா...வீட்டுக் கதவைத் திறந்தால் தான் புகையும், வாசனையும் தானே கிளம்பும்....அங்க என்ன கஷ்டமோ...யாரு கண்டா...இந்தாளெல்லாம் டைவர்ஸ் ஆனாக் கூட லட்டு தான் கொடுப்பார்....செலவெல்லாம் ஒரே தடவை தானேன்னு...என்று அவரோட நண்பர் சிதறு காய் போலப் போட்டு உடைப்பார்.
கூட நின்றவர்கள் கொல்லென்று சிரிப்பார்கள். இந்தக் கேலியும் கூத்தும் அந்த ஆபீஸில் சிரிப்பு சேனல் மாதிரி...

வேத நாராயணன்...யாரிடமும் அதிகம் பேசவும் மாட்டார். பேசாமல் மௌனமாய் அமர்ந்திருப்பவரின் வாயைப் பிடுங்குவதே..ரொம்பக் கஷ்டம்...அவ்வளவு அழுத்தக் காரர்....அதுக்கும் ஒரு காரணம் சொல்வார்..."நானே எனக்கு எனெர்ஜி சேவர் என்று....அப்படியே பேசினாலும் அளந்து வெட்டிப் பேசும் அவரிடம் யாரும் நெருங்கிப் பழக யோசிப்பார்கள்.இவர் இன்று நூறு லட்டு வாங்கி தானம் செய்தது அவருக்கே ஆச்சரியம் தான். மழை இன்னும் ஏன் வராமல் இருக்கிறது ? அவர் நல்லவரா... இல்லையா ?

இதற்குள் பத்தாம் நம்பர் பஸ் வந்து பதினோராம் நம்பரை ஏற்றிக் கொள்ள..... அப்பாடா என்று அமர்ந்தவருக்கு...என்றுமில்லாமல் இன்று இனிப்பு டப்பாகளோடு தான் போய் நின்றால் வீட்டில் ரேவதியும், அருணும் எப்படி சந்தோஷப் படுவார்கள்? என்று நினைத்ததும் , இத்தனை வருடங்களில் இதுபோல் ஒருநாள் கூட சென்றதில்லையே என்ற எண்ணம் அவரை மீறி அவருக்கு நியாபகப் படுத்தியது. கொடுப்பதில் இவ்வளவு சந்தோஷம் வருமா...? என்று கூட மனசு சலனப் பட்டது.

இன்று அவருக்குக் கிடைக்கப்போகும் பெரிய வரவேற்பை நினைத்துக் கொண்டே...இன்னைக்கு லட்டுவுக்கு செலவு செய்த பணக்கணக்கை மனசுக்குள் மனக்கணக்காகப் போட்டுப் பார்த்துக் கொண்டார். மீதி லட்டுக்களை அக்கம் பக்கத்து வீட்டில் இருப்பவர்களுக்கும் அருணிடம் கொடுத்து கொடுக்க சொல்லணம்...பஸ், இவரது மனசின் வேகத்தைப் புரிந்து கொள்ளாமல் இன்று மெதுவாக ஓடியது போலிருந்தது அவருக்கு. பஸ் சிக்னலில் நிற்கும் போதெல்லாம் இவர் தானாகவே... எழுந்து நிற்பார்.

இரவு டின்னருக்காக சப்பாத்தி செய்து கொண்டிருந்த ரேவதிக்கு பிரமிப்பாக இருந்தது....சப்பாத்தி இடும் பொது அவளோட கரங்களில் கண்ணாடி வளையல்கள் கிணு கிணு வென்று சிரித்தன .. ஒன்றிரண்டு வளையல்கள் உடைந்து சமையல் அறையில் காலில் குத்தின. கழுத்தில் எண்ணைப் பிசுக்கில் அழுது வடிந்து கொண்டிருந்தது தாலிச் சரடு. அருணுக்குப் பசிக்குமே...என்று வேக வேகமாக இயங்கிக் கொண்டிருந்தவளின் பின்னாலிருந்து....அருண் பாடிக் கொண்டே வர....

"வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்..
அதை வாங்கித்தந்த பெருமை எல்லாம் உன்னைச் சேரும்..
பெற்றெடுத்து பேர்கொடுத்த அன்னை அல்லவோ...
நீ பேசுகின்ற தெய்வம் என்பதுண்மை அல்லவோ...!"

டேய்...டேய்...போதும்டா....ரொம்ப ஐஸ் வைக்காதே என் மேலே ! இதுக்கெல்லாம் காரணம் உன் பெரியம்மாவும், மாமாவும் தான்....அங்க போயி சொல்லு உன் நன்றியை. இந்தப் பாட்டை அப்பா முன்னாடி பாடித்தொலைக்காதே. அப்பறம் அவ்ளோதான் நீ....என்றவளுக்குப் பெருமை தாங்கவில்லை.

தாங்க்ஸ்மா.....அப்பா வரட்டும் பாடி அசத்திடறேன்.....இது தான் சரியான ரிவிட்....அவருக்கு...!

நான்கு வருடங்கள்....எப்படியோ ஓடிப் போய்விட்டன....நான்கு யுகங்களைக் கடந்து வந்தது போலத் தெரிந்தது...அவளுக்கு......இன்று அருண் "இஞ்சினீயர்" ! இவனை உருவாக்க, ரேவதியின் ஆத்மீகக் கனவை நனவாக்க எத்தனை பேர் கஷ்டப் பட்டிருக்கிறார் அவன் அப்பாவைத் தவிர. அவனை ...இந்தப் பட்டத்தை வாங்க..பட்ட பாடு கொஞ்சமா...நஞ்சமா..? பிளஸ் டூ முடித்து விட்டு என்ன படிக்க வைக்கலாம்னு யோசிக்கும் போது....எல்லோரது மனசும் இஞ்சினீயர், டாக்டர், வக்கீல் என்று போக...இவர் மட்டும்....!

அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்...ஆட்டு மந்தை மாதிரி.....கூட்டத்தோட கூட்டமா இஞ்சினீயர் தான் படிப்பேன் என்று என்ன அழிச்சாட்டியம்...லோகத்தில் லட்சக் கணக்கா .இஞ்சினீயர்கள் வேலை இல்லாமல் தான் சுத்திக்கிண்டு இருக்கா. என்னத்த படிச்சாலும் எல்லாம் ஒண்ணு தான் ...என் ஆஃபீஸ் ல வந்து பாரு....என்ஜினீயரிங் படிச்சுட்டு வெறும் பத்தாயிரம் வாங்கற பயல. அதே ...சமயம் பி.காம் படிச்சுட்டு வந்து இருபதாயிரம் சம்பளம், கிம்பளம் சேர்க்காமல், அது தனி வாங்கறவனும் இருக்கா. எல்லாத்துக்கும் அதிர்ஷ்டம் வேணும்.
நான் என்ன இஞ்சினியருக்கா.. படிச்சேன்?

தோ பாருடா...அருண்.!..நன்னாக் கேட்டுக்கோ....ஒரு இஞ்சினீயர் .. சீட்டுக்கு மூணு லட்சம் லஞ்சம் எல்லாம் என்னால கொடுத்து உன்னை படிக்க வைக்க முடியாது....நீ வாங்கியிருக்கற எண்பத்தாறு பெர்சன்டேஜுக்கு இஞ்சினீயரிங் காலேஜ் வாசல் பக்கம் கூட போய் நிக்க முடியாது....பேசாமல் பி.காம் படிச்சுட்டு ஏதாவது பிரைவேட் பாங்கில் போய் வேலைக்கு உட்காரு..அதான் சரிபட்டு வரும்.....வீணா ஆசையை வளர்த்துக்காதே...

உன் அம்மாவுக்கென்ன....அவளா சம்பாதிக்கறா....? அவ ஆயிரம் சொல்லுவா...! விரலுக்குத் தக்க வீக்கம் வேண்டாமா? சின்னச் செடிக்கு எத்தனை நிழல் தர முடியுமோ அவளளவு தான் முடியும். உங்கம்மா வெறும் கையால் முழம் போட நினைச்சா ....நடக்குமா ..? போ ..நீயா... எதையும் கனவு காணாமல் ....விவேகானந்தா காலேஜூல போய் அப்ளை பண்ணி இருபதோ...முப்பதோ பணத்தைக் கட்டி பி.காமில் சேர்ந்துடு.. அது தான் என்னால முடியும். அதுக்கே நான் கஷ்டப் படணம்..தெரிஞ்சுக்கோ...இஞ்சிநீரும் வேண்டாம்...சுக்குநீரும் வேண்டாம்....புரிஞ்சுதா....அவ்ளோ தான் நான் சொல்லிட்டேன் ...என்று அன்றே, முற்றுப் புள்ளி வைத்து விட்டார்.

அருண் அம்மாவிடம் ...பாரும்மா ...அப்பாவை ...என் கிளாஸ் மேட்ஸ் எல்லாரும் எஸ் ஆர் .எம் காலேஜில் சேர்ந்தாச்சு ....நான் மட்டும் தான் இன்னும் உங்க கிட்ட கேட்டுண்டு நிக்கறேன் .....எனக்கு என்ஜினீயர் படிக்கணும்னு தான் ஆசை. ...இந்தப்பா....தான் இப்படி சொல்றார் ...நீயாவது வந்து ஏதாவது சொல்லி அப்பாவை சம்மதிக்க வைம்மா...ப்ளீஸ்..!

நீ இவ்வளவு தான் புரிஞ்சுண்டு இருக்கியா அவரைப்பத்தி... .....தான் பிடித்த முயலுக்கு மூணே காலுன்னு நிப்பாரே இவர்...இவரை மாத்த அந்த பிரம்மனாலும் முடியாது....இவர்..உன் நாலு வருஷ படிப்புக்கும் ஆகும் செலவை வட்டி போட்டு கணக்குப் பார்த்து ஏற்கனவே முடிவு பண்ணி வெச்சிருப்பார ... நீ வட்டியோட திரும்பத் தரேன்னு சொன்னா ஒரு வேளை மனசு மாறலாம் ...ஆனாலும் எனக்கு நம்பிக்கை இல்லைடா உன் அப்பா மேல. அது அவர் காரக்டர்.

நீ இவ்ளோ கெஞ்சறே...அதுக்காக வேணா... இரு எதுக்கும் கடைசியா ஒரு நடை கேட்டுப் பார்க்கறேன், என்றவள்.

இதோ பாருங்கோ ! அருணுக்கு இஞ்சினீயர் ஆகணும்னு தான் ஆசை ....நமக்குன்னு இருக்கறது ஒரே பையன்....கூட இன்னொண்ணு இருந்திருந்தா...செலவாகும்னு சொல்லலாம்...இவனைப் படிக்க வைக்க நம்மால முடியாதா என்ன....? இந்த வீட்டை வெச்சாவது..., என் நகைகளை விற்றாவது, இல்லன்னா...கடன உடன வாங்கியாவது ..என்று இழுக்க....!

ஆமாம்.....இந்த வீடு எனக்குச் சீரா நீ கொண்டு வந்தது பாரு....ஐடியா சொல்ல வந்துட்டா....எல்லாம் சாதாரணக் காலேஜ் படிச்சா போதும்டி. இந்தக் காலத்தில் பிள்ளையப் படிக்க வெச்சு...லட்சக் கணக்கில் செலவு செய்ய, அவன் உனக்கும் பெப்பே....உங்கப்பனுக்கும் பெப்பே ...னு படிக்கப் போன இடத்தில் எவளையாவது இழுத்துண்டு வந்து நிப்பான்...வேண்டாம்னா...ஓடிப் போவான்...அப்படிப் போறதுக்கு , என் கைக்காசை நான் தொலைக்கணுமா ...? வீட்டை வைக்கணுமாம்..நகையை விக்கணுமாம்....ஏன் ....நாளைக்கு நடுத் தெருவுல இவன் நிக்க வைக்க இன்னைக்கே நாம ஒத்திகை பார்த்துக்கணுமா? அடிபோடி...பயித்தியக் காரி.! முதல்ல சேத்து வெச்சதைக் காப்பாத்தத் துப்பிருக்கான்னு பாரு. அப்பறமா வித்துட்டு காலேஜுக் காரனுக்கு அழரதப் பத்தி யோசிக்கலாம்..

அட ராமா ..நான் ஒண்ணு சொன்னா நீங்க ஒன்னு சொல்றேள்...? பிள்ளையைப் பார்த்து நீங்களே இப்படிப் பேசினா எப்படி .? அவனுக்கு நாம தானே ஒரு நல்ல வழியைக் காமிக்கணும் . படிக்க போற ..எல்லாருமா வீட்டை விட்டு ஓடறா.....எப்பவுமே...நெகடிவாப் பேசி பேசி....அது தான் டாண்ணு வந்து உங்க நாக்கில் முன்னுக்கு நிக்கறது...ஆஃபீஸ் புத்தி எங்க விட்டது...? கடைசியா என்ன தான் சொல்றேள், அதைச் சொல்லுங்கோ...

முதலாவும் அதையே தான் சொல்றேன் ..என்னால இவனை இன்ஜினீயரிங் படிப்பெல்லாம் படிக்கச் வைக்க முடியாது....வெறும் பி.காம் தான் .! நான் அது கூட படிக்கலை ...அதுக்காக வருத்தப் பட்டதும் இல்லை ...இப்ப நாம வாழல...? .இஞ்சினியர் ஆனால் தான் வாழ முடியும்னு எவன் சொன்னான்....ஆட்டுமந்தையில் இவன் ஆயிரத்தியோராவது ஆடு... சுயமாவே...சிந்திக்க மாட்டேன்னா...எப்படி...டீ.? சொன்னவர் மேற்கொண்டு பேச விடாமல் வாயை அடைத்து விட்டார்.

"....................................."

சிலை போல் நின்றாள் ரேவதி ! அருண் கண்களில் கலக்கம்... !

என்னால முடிஞ்சத... நான் சொல்லிட்டேன்....உன்னால என்ன முடியுமோ நீ பார்த்துக்கோ....ஆனா ஒண்ணு பணத்துக்கு என்கிட்டே வந்து நிக்கக் கூடாது....என் பேச்சைக் கேட்டு அவன் காலேஜுல சேர்ந்தால் எல்லாச் செலவையும் நான் பார்த்துப்பேன்....அப்படி இல்லைன்னா உங்க இஷ்டம்...எனக்கு ஆபீஸ் வேலையே ஆயிரம் இருக்கு...என்னால லீவை போட்டுட்டு ஊர் ஊரா இஞ்சினீரிங் சீட்டுப் பிச்சை கேட்க முடியாது...இனிமேல் என்கிட்டே இதப் பத்தி பேசாதே..நான் சொல்றதைச் .சொல்லிட்டேன். தீர்மானமாகச் சொன்னவர் படுக்கச் சென்றார்.

என்னம்மா அப்பா இப்படி சொல்லிட்டுப் போய்ட்டார்.தோளுக்கு மிஞ்சினால் தோழன்..ன்னு கூட நினைக்காமல்..இன்னும் தனக்குக் கீழயே...இருக்கணும்னு நினைக்கிறாரே..அதை நினைச்சாத் தான் வருத்தமா இருக்கு....எங்கம்மா பிடிச்ச இந்த மாதிரி ஒரு ஆளை....எப்டிம்மா...? இவரைப் பெத்து வளர்த்தாளா...... இல்லை இவங்க ஆஃபீசுக்கு ஆர்டர் கொடுத்து செஞ்சாங்களா...? .

நாம என்னம்மா செய்வோம்..? .எனக்கு பி.காம் போதும்மா.....நீ கவலைப் படாதே....இந்த மாதிரி இருக்கறவங்களுக்குப் பிள்ளையாய் பிறந்தால் எதற்கும் ஆசைப் படக் கூடாது...இல்லன்னா வீட்டை விட்டுப் போயிடணும்..தனியா நின்னு ஜெயிச்சுக் காட்டணும்...காட்டறேன்...நானும் யார்ன்னு..இவருக்கு..!

எல்லாருக்கும் தான் அப்பா இருக்கா....தான் செய்யாததை தன் மகனாவது செய்யட்டும்னு யோசிக்கற அப்பா...! ஆனா..இங்கே...நானே.. படிக்கலை...உனக்கு மட்டும் எதுக்குன்னு...? கேட்கற அப்பா...! இவர் இவ்வளவு பணத்தை சம்பாதிச்சு சேர்த்து வெச்சு யாருக்கு என்ன லாபம்...? இப்பவே சொல்லிட்டேன்...என் படிப்புக்கு உதவாத உங்கள் எந்த சொத்தும் எனக்கு எந்தக் காலத்துக்கும் தேவையே இல்லை ....அருண் தன்னோட அத்தனை இயலாமையை கொட்டித் தீர்த்து விட்டு கையில் கிடைத்த நியூஸ் பேப்பரைச் சுருட்டித் தூக்கி வீசிவிட்டுப் போனான். இளமை ரத்தம் துடித்தது. கோபத்தில் கொதித்தது.

அப்பாவுக்கு கொஞ்சமும் குறைவில்லை கோபத்தில் இவன்...என்ன செய்ய...மத்தளத்துக்கு ரெண்டு பக்கம் அடி....முருகா...இதில் இருந்து நீ தான் எங்களைக் காப்பாத்தணம் ... மானசீகமாக வேண்டிக் கொண்டவள்....யாரிடம் உதவி கேட்கலாம் என்று யோசிக்கலாளான்...என்ன ஆனாலும் சரி...அருண் என்ஜினீயரிங் தான் படிப்பான்....அதுக்கு என்ன விலையானாலும் நான் கொடுப்பேன்...ரேவதியின் வைராக்கியம் பூதமாய் எழுந்து நின்றது. திக்கற்றவருக்கு தெய்வம் துணை..ன்னு முருகனைத் தொழும் பொது.."யாமிருக்க பயமேன்" என்று சுவர்ப்படம் பேசியது.

அன்று இரவே தன் அக்காவுக்கும் தம்பிக்கும் ஃபோன் செய்து...வீட்டில் நடந்ததை ஆதியோட அந்தமாகச் சொல்லி அழ..பாதாளத்தில் கிடந்தவளுக்குப் பிடித்துக் கொண்டு ஏறி வரக் கயிறு விழுந்தார்ப் போல...."எல்லாம் நாங்க பாத்துக்கறோம்....நீ கவலைப் படாதே...அருண்....எங்களுக்கும் மகன் மாதிரி தான்...அவனை இஞ்சினீயர் படிப்புதான் படிக்க வைக்கணும்..அவரைப் பத்தி எங்களுக்குத் தெரியாதா என்ன...? இவன் படிச்சு முடிச்சதும் எல்லாம் தானே மாறிப் போவார்...நாளைக்கு இங்கு இருக்கும் ஒரு யூனிவர்சிட்டியில் விண்ணப்பம் வாங்கி அப்ளை பண்ணலாம்....நீ கவலைப் படாதே....நிம்மதியாக இருங்கள்...சொன்னது மட்டும் அல்லாமல்...

தான் பெறாமலே.....தங்கை மகனைத் தான் பெற்ற மகனாக அவனுக்குப் படிக்க வைக்க பெரிய தொகையை உதவி செய்து... அவன் படித்து முடிக்கும் வரை பார்த்துக் கொள்கிறேன் என்று ஊக்கம் கொடுக்க.. அதற்குப் பின்பு நடந்ததெல்லாம் தான் கனவு போல மாறியது.....ரேவதிக்கு.

இதோ...இன்று...நான்கு வருஷத்தில் .அவர்கள் புண்ணியத்தில்.....சமயத்தில் ,கேட்டதால் .....கடவுள் அனுப்பிய தேவதைகளாக அக்காவும், தம்பியும் வந்து சமயம் பார்த்து உதவியதால் அருண்..இன்ஜினீயராக.சமுதாயத்தில் தலை நிமிர்ந்து ..நிற்க முடிந்தது....இல்லாவிட்டால் வெறும் இஞ்சினீயர் படிப்புக்குக் கூட .மதிப்பு இல்லாத இந்தக் காலத்தில்....அவனோட எதிர்காலம் எவ்வளவு பெரிய கேள்விக் குறியாக இருந்திருக்கும்.

திரும்ப போன அந்த நாலு வருஷங்களும் கையில் கிடைக்குமா? காலத்தே பயிர் செய்....செய்வனத் திருந்தச் செய்...உள்ளுவ தெல்லாம் உயர் உள்ளல், இது போன்ற காலத்தால் மாற்ற இயலாத சில விஷயங்களுக்காகத் தான் அந்தக் காலத்தில் சொல்லியிருக்கா பெரியவா.நல்ல வேளையா......அருண் பிழைச்சான்.

பார்த்தியா அருண்....மனம் எப்படித் மாறும்னு... ஜெயிக்க முடியா விட்டால் அவரோடு சேர்ந்து கொள் என்பது கூட பழமொழி.அதுமாதிரி....

அடுத்தவர் பணம் போட்டா...எல்லாருக்கும் தான் மாறும்...மனம் ! எனக்கு எவ்ளோ கோபம் இப்போ வருது தெரியுமாம்மா....?

அவருக்கு உணர்த்த வேண்டும்......வலிக்கணம்...ஒரு வார்த்தையோ.., செய்கையோ...அடுத்தவாளை எப்படி கீறிப் பார்க்கும்னு அவருக்குப் புரியணம்..ஒரே ஒரு தடவை அவரை அவருக்கு உறைக்கரா மாதிரி.. நான் தான் ..செய்து காட்டணும்...அவரோட கொட்டத்தை அடக்கணும்...அதுக்காகத் தான் அந்த சந்தர்ப்பத்துக்காகக் காத்துண்டு இருக்கேன் ...ப்ளீஸ்மா.....என்னை விடேன்....

உன் கோபம் நியாயமானது தான்...நான் தப்பு சொல்லலை...அதே சமயம்...அவரோட நிலையில் இருந்து பார்த்தால்....புரியும்...அவர் வளர்ந்த விதமும், அவரை வளர்த்த விதமும் வேற....! கிணற்றுத் தவளை மனசு....!இதெல்லாம் நோக்குப் புரியாது. அவர் உழைக்கிறவர்....அவருக்குத்தான் பணத்தின் அருமை தெரியும்.
நாளைக்கே நீ கூட இப்படி மாறலாம்...யார் கண்டா..?

அதெல்லாம் ஒண்ணும் இல்லை...சுயநலம்....பக்கா சுயநலம்....நீ சப்பைக் கட்டு கட்டறே...

சரி விடு...இந்தா சப்பாத்தி சாப்பிடு.....இனிமேல்..உன் கவனத்தை உனக்கு நல்ல வேலை கிடைப்பதில் செலுத்து...இந்த வீட்டு அரசியலுக்குள் நுழையாதே...! இதெல்லாம் வேலைக்காகாது...!

ஏதோ உன் நல்ல நேரம்....உனக்கு உன் பெரியம்மாவும் மாமாவும் கை கொடுத்து உதவினா...அவா இல்லைன்னா....நமது இழப்பு என்னன்னு தெரிஞ்சிருக்கும். நாம் அவாளுக்குத் தான் கடமை பட்டிருக்கோம். என்றவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே...வாசலில் கேட் திறக்கும் சத்தம் கேட்க...

வந்துட்டார்.....கையில் ஏதோ கனமாத் தூக்கீண்டு வரார்...போய்ப் பார்த்து வாங்கிண்டு வா....மகனை விரட்ட...

இதோ....போறேன்மா...ஆனா..ஒரே ஒரு சந்தர்ப்பம்..கிடைச்சாலும் நான் .நழுவ விட மாட்டேன்.... இப்பவே உன்கிட்ட சொல்லிட்டேன்...நீ இதில் தலையிடாதே...வலிக்கணும்....அவருக்கும் புரியணும்... ரேவதிக்கு மட்டும் கேட்கும்படியாகச் சொல்லி விட்டு வாசலுக்கு நகர்ந்தவனை...பார்த்தபடியே...

என்ன இது, இந்தப் பிள்ளை இப்படிக் கச்சை கட்டிண்டு நிக்கறதே.....இது எங்கே கொண்டு போய் நிறுத்தப் போறதோ..? பகவானே...மனசுக்குள் "பயம் " வந்து ஒட்டிக் கொண்டது.

என்னப்பா....இதெல்லாம்....ஆச்சரியமா இருக்கே....நம்ம வீட்டுக்கு ஸ்வீட் பாக்ஸ் ஆ...!அதுவும் நீங்களா வாங்குவேள்? ஆஃபீஸில் யாராவது விட்டுட்டு போயிட்டாளா...? என்று நக்கலாகக் கேட்க....."இவருக்கு வலிக்கணும்.." மனசு சமயம் பார்த்துக் கொண்டே இருந்தது ரேவதி "ப்ளீஸ் வேண்டாம்டா...பாவம்டா..வந்ததும் வராததுமா...? " .என்று கண்களால் கெஞ்சிக் கொண்டிருந்தாள். என்ன இருந்தாலும்..பெண் மனம்.

இல்லடா...நான் தான் இன்னைக்கு வாங்கினேன். லட்டு ! நூறு லட்டு ! .. உனக்காக வாங்கினேன் .. ! ஆஃபீஸ்ல எல்லாருக்கும் லட்டு கொடுத்தேனாக்கும்.... .எதுக்குத் தெரியுமா...? என்றபடியே...கை அலம்பிக் கொண்டு வந்தவர், துடைத்துக் கொண்டே.....எல்லாம் நீ இன்ஜினீயர் ஆயிட்டியே....அதுக்குத் தான்......

அவர் சொன்னதைக் கேட்டதும் ரேவதிக்குத் தூக்கி வாரிப் போட்டது...கடைத் தேங்காயோ...வழிப் பிள்ளையாரோ....?
ன்னு கதை இப்படிப் போறதா...? பேஷ்..பேஷ்...ரொம்ப நன்னாருக்கு....பட பட வென தன்னை மீறி வந்த வார்த்தைகளை அப்படியே விழுங்கினாள். இது தானே...இவர் கேரக்டர்....என்று நினைத்தவள்..

இந்தா....நீயும் எடுத்துக்கோ...."எங்கே ஆ...காட்டு."...என்று ஆசையோடு அருணின் வாயில் ஒரு முழு லட்டைத் திணிக்க....

இந்தா...ரேவதி...உனக்கும்....நீயும் எடுத்துக்கோ என்று லட்டு டப்பாவுடன் அருகில் வந்தவரை.... நேராகப் பார்க்க விரும்பாது மனசு தடுக்க......தடுமாற்றத்தோடு...தீர்மானமாக அங்கிருந்து நழுவினாள் ரேவதி...."யாருக்கு வேணும் லட்டு...." அன்று செய்யத் தவறிய காரியம், இன்று லட்டு தந்தால் சரியாகி விடுமா...." மனசு இடித்துக் காண்பித்தது....நானாக்கும் பெரிய மனசு பண்ணி போனால் போகட்டும்னு விட்டுட்டேன்....என்று வைராக்கிய மனசுக்கு சமாதானம் சொல்லியது.

அடுத்த நிமிஷம்....

லட்டு தொண்டையைப் பிடிக்க......"தூ...தூ....தூ..." என்று வாஷ்பேசினை நோக்கி அருண் ஓடிச் சென்று துப்ப...
அவன் மனசு.."இத...இத...இதத்தான் நான் எதிர் பார்த்தேன்..." என்று கைதட்டியது.

என்னாச்சு...?..என்னாச்சு ? என்று பதற்றத்தோடு கேட்ட தேவ நாராயணனை.....

அமைதியாகப் பார்த்தபடியே.....

"இந்த லட்டு கசுக்குதுப்பா....." என்ற அருணின் கண்களும்.சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்த ..மனசும்...."அவருக்கு வலிக்கட்டும் ." என்று ஆவலோடு தூண்டித் துருவி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

புதன், 25 ஜூலை, 2012

ஆறு மனமே...ஆறு..!


சிதறிய சலங்கைகள்...!


எந்தப் பாதை எங்கே பயணம்..


பாலா திரிபுரசுந்தரி...

https://mail-attachment.googleusercontent.com/attachment/u/0/?ui=2&ik=b53b4d0fe5&view=att&th=138bf04a5c06d2b3&attid=0.1&disp=inline&realattid=f_h52n4yz10&safe=1&zw&saduie=AG9B_P9tYrnQP8YFRqF0o8EVSLi-&sadet=1343234587851&sads=dZIYwLozDVDNG4t_T4gwcgOzpk8&sadssc=1

(பாலா இதை நான் எழுதவில்லை....நீயே என்னுள் வந்து எழுதிக் கொடேன்....
என் பாவை விளக்கில் உந்தன் பதிவும் இருக்க வேண்டாமா....? வா....என் தங்கமே..!)

முத்து மகள் நின் பாதம்
பவழப் பட்டைத் தொட்டதும்...
மங்கலங்கள் யாவும் உந்தன்
பட்டுப் பாதம் கண்டதென்ன..!

வெள்ளைக் கமலம் நிந்தன்
பொற்பாதம் தாங்கி மகிழ..
மகிழம்பூ விரல்களில்...மருதாணி சிரிக்க..
பொற் சிலம்பும் ....தண்டையும்..

நீ வந்திறங்கும் நேரம் சொல்லி
கலீர்...கலீர் என அழைக்க...
தொழுதழுது 
நிற்கின்றேன் 
குஞ்சலமே...கோமளமே...


தாமரைத் தளிர் விரல்கள்..
ஞானம் சொல்லுதம்மா...
நிலை உயரும் போதெல்லாம்....
தலை தாழ்ந்திடல் வேண்டுமென்று.

மரகதமே....மேனி தனில்
வைரங்கள் கொண்டருள்வாய்..
கௌஸ்துபம்  சுவடி கொண்டு
ஞானம் தந்தருள் நீலமணியே..!

பாலா உந்தன் மதி முகத்தில்..
சுந்தரம்  ஒளிரக் கண்டோம்...
காந்தக் கடல் விழிக்குள்
காருண்யம்
மையகலக் கரையாய்..

ஆடும் ஜிமிக்கியில் புவனம் சுழல
ஏகாந்த மௌனம் பூரணி மனதில்
இருள் வானில் சந்திர சூரியனும்
மதி ஒளி மயங்க விழி ஒளி ஒளிர

கன்னிச் செல்வமே எங்களைக்
காத்திடம்மா பவானி...நித்ய
கல்யாணியாய் நெஞ்சினில்
துஞ்சுவாய் சர்வ மனோகரி...!


நானல்ல...நீயம்மா..!

 

தமிழ்ப் பண்டிகைகளும், நைவேத்யமும்


"அனைத்து நலமும், வளமும், நைவேத்யத்தால் பெறுவோம்..!"


இந்தப் புத்தகத்தை காணும் உங்களுக்கு வணக்கம்.

அம்மா.. என்ன செய்வாள்...? மனதின் எழும் இந்த கேள்விக்கு உடனே பதில் கிடைத்துவிடும்...நன்றாகச் சமைப்பாள்.
என் அம்மா இந்தப் பண்டிகைக்கு இதைச் ரொம்பச் சுவையாகச் செய்வாள் தெரியுமா? என்று சொல்லாதவர்கள் இருக்க முடியாது. ஒரு இல்லற வண்டி இனிதாக ஓட..."சமையல் சக்கரமும்" பழுதில்லாமல் இருக்க வேண்டும். ஒரு குடும்பத் தேர்...பல நிலைகளில் நிமிர்ந்தாலும்...."வெற்றிக் கொடி" பறக்க வைக்க சமையலறையே ஏகபோக உரிமையை எடுத்துக் கொள்ளும்.

எனது இருபத்தைந்து ஆண்டுகால சமையலறை அனுபவம் எனக்கே உரித்தானதாக எனக்கென்று ஒரு "கைமணம்"
தந்து குடும்பத்தில் "ஸ்பைஸ் குவீன் " என்ற பட்டம் எல்லாம் தந்து பாராட்டுப் பெற்ற நிமிடங்கள் ,( குடும்பத்தினரின் பாராட்டுப் பெறுவது தான் சமைப்பதைக் காட்டிலும் கஷ்டம்..சாமான்யத்தில் ஒத்துக் கொண்டு விட மாட்டார்களே...நாக்கு நாலு விதம்...ஆச்சே..).அப்படியிருந்தும், எனக்குக் கிடைத்த பாராட்டுதான் என்னை இன்று "நைவேத்யங்கள்...." என்ற இந்த பொக்கிஷத்தை உருவாக்கும் நோக்கத்தை உண்டாக்கியது. சமையலைத் தாண்டியும் இன்னும் பல விஷயங்கள் நமது இந்து பண்டிகைகளில் என்னென்ன நிவேதனம் செய்ய வேண்டும் என்ற விபரங்கள் மற்றும் தினசரி சமையல் குறிப்புகள் மற்றும் பல ஆன்மீக சிந்தனைக் குறிப்புகளும் ஒருசேர அமைத்து ஒவ்வொரு வீட்டிலும் அவசியம் இருக்க வேண்டிய ஒரு "பாவை விளக்காக" இந்தப் புத்தகம் புதிய வெளிச்சத்தைப் பரவச் செய்யும் என்று நம்புகிறேன்.

இந்தப் புத்தகம் வெளிவருவதற்கு எனக்குத் தூண்டுகோலாக உதவிய என்னைச் சேர்ந்த, எனக்குத் தெரிந்த அத்தனை நல இதயங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை பரிமாறுகிறேன்.

அதே சமயம், இதைப் படித்து, பிடித்து, சமைத்து, ருசிக்கும் ஒவ்வொருவருக்கும் எனது நன்றியை இந்தப் பகுதி மூலம் தந்து விடுகிறேன்.

இனி....வாருங்கள்...இந்தப் பண்டிகைகள் கதவைத் தட்டக் காத்திருக்கும் இந்த நல்ல நேரத்தில் என்னைப் போலவே..
நீங்களும் எப்போது வரும் என்று ஆவலோடு காத்திருக்கும் ஒவ்வொரு பண்டிகைக்கும் பக்தியோடு உங்கள் மணம் கூட்டி சமைத்த நிவேதனங்களை இறைவனுக்குப் படைத்து, இறையருள் பெற்று தங்களின் குடும்பத்தினர் வயிறார உண்டு வாயார வாழ்த்தும் பெறுவதற்கு என் ஆத்மார்த்தமான வேண்டுதல்கள்.

அன்புடன்.
ஜெயஸ்ரீ ஷங்கர்.
சிதம்பரம்.

வீட்டு விசேஷங்கள் தடையின்றி நடைபெற...:ஸ்லோகம்:

"ஸதாபால ரூபாபி விக்னாத்த்ரி ஹந்த்ரீ
மஹாதந்திவக்த்ராபி பஞ்சாஸ்யமான்யா
விதீந்த்தா திம்ருக்யா கணேசாபிதாமே..
விதத்தாம்ச்ரியம் காபி கல்யாணமூர்த்தி"


================================================



விநாயகர் வழிபாடு






1. விநாயகர் சதுர்த்தி:

பாலும் தெளிதேனும், பாகும் பருப்பிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே ! நீயெனக்குச்
சங்கத் தமிழ்மூன்றும் தா.


விநாயகர் அகவல்

சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலஇசைப் பாடப்
பொன் அரை ஞாணும் பூந்துகி லாடையும்
வன்ன மருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்,

பேழை வயிறும், பெரும்பாரக் கோடும்,
வேழ முகமும், விளங்குசிந் தூரமும்,
அஞ்சு கரமும், அங்குச பாசமும்,
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்,

நான்ற வாயும் நாலிரு புயமும்,
மூன்று கண்ணும், மும்மதச் சுவடும்,
இரண்டு செவியும், இலங்குபொன் முடியும்
திரண்ட முப்புரிநூல் திகழொளி மார்பும்

சொற்பதம் கடந்த துரிய மெய் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே!
முப்பழம் கிகரும் மூக்ஷிக வாகன!
இப்பொழு தென்னை யாட்கொள வேண்டித்

தாயாய் எனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்க மறுத்தே,
திருந்திய முதல்ஐந் தெழுத்துத் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனிற் புகுந்து,

குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறம்இது பொருள்என
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்,
கோடாயுதத்தாற் கொடுவினை களைந்தே

உவட்டா உபதேசம் புகட்டி என்செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கு முபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்,

கருவிக ளொடுங்குங் கருத்தினை யறிவித்,
திருவினை தன்னை அறுத்திருள் கடிந்து,
தலமொரு நான்குந் தந்தெனக் கருளி,
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே,

ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி
ஆறா தாரத் தங்குச நிலையும்!
பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே,

இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்,
கடையிற் சுழுமுனைக் கபாலமுங் காட்டி,
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்,

குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்து மூண்டெழு கனலைக்
காலால் எழுப்புங் கருத்தறி வித்தே

அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையுங் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடற்சக் கரத்தின் உறுப்பையுங் காட்டிச்,

சண்முக தூலமுஞ் சதுர்முகச் சூக்கமும்
எண்முக மாக இனிதெனக் கருளிப்,
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்,

கருத்தினிற் கபால வாயில் கட்டி,
இருத்தி முத்தி இனிதெனக் கருளி,
என்னை அறிவித் தெனக்கருள் செய்து,
முன்னை வினையின் முதலைக் களைந்தே,

வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து,
இருவெளி யிரண்டிற் கொன்றிட மென்ன
அருள்தரும் ஆனந்தத் தழுத்தி, என் செவியில்

எல்லை இல்லா ஆனந் தமளித்,
தல்லல் களைந்தே, அருள்வழி காட்டிச்,
சத்தத்தி னுள்ளே சதாசிவம் காட்டிச்,
சித்தத்தி னுள்ளே சிவலிங்கங் காட்டி,

அணுவிற் கணுவாய் அப்பாலுக் கப்பாலாய்க்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி,
வேடமும் நீரும் விளங்க நிறுத்திக்,
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி

அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கரத்தின் நிலையறி வித்துத்,
தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட
வித்தக விநாயக, விரைகழல் சரணே.
-----------------------------------------------------------------------------------------------------
ஓம்  ஏகதந்தாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி
தந்நோ தந்தீ ப்ரஜோதயாது

இந்த விரத‌த்தை ஒரு பண்டிகையாகவே நாம் காலகாலமாகக் கொண்டாடு கின்றோம். ‌விநாயக‌ர் ‌மிகவு‌ம் எ‌ளிமையான கடவு‌ள். மண்ணிலும், மஞ்சளிலும் கூட பிள்ளையாரைக் கையால் பிடித்து வைத்து ஆவாஹன் செய்தால் போதும் அவர் அங்கு எழுந்தருளி, அரு‌ள் தருவா‌ர்.

பண்டிகைக்கு முதல் நாள் இரவே வீ‌ட்டையு‌ம் பெரு‌க்‌கி மெழு‌கி சு‌த்தமா‌க்‌கி‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம். அவரவர் விருப்பபடி அவரவர் ரசனைக்கேற்ப வீட்டை அலங்கரித்து..பிள்ளையாரை வைக்க பீடம் அமைத்துக் கொள்ளுங்கள்.
எதுவுமே இல்லாமல், அவரவர் வசதியைப் பொறுத்து மனதில் தூய நினைவோடும், பக்தியோடும் பிள்ளையாரைத் துத்திதாலும் போதும்....அவரது அருள் கிட்டும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை

‌இ‌னி கடை‌ப்‌பிடி‌க்க வே‌ண்டிய ‌விரத‌த்தை ப‌ற்‌றி பா‌ர்‌ப்போ‌ம்...
‌அத‌ன் மே‌‌ல் ஒரு கோல‌ம் போ‌ட்டு, அத‌ன் மே‌ல் ஒரு தலை வாழை இலையை வை‌க்க வேண்டு‌ம். இலை‌யி‌ன் நு‌னி வட‌க்கு பா‌‌ர்‌த்த மா‌தி‌ரி இரு‌ப்பது ந‌ல்லது. இ‌ந்த இலை மே‌ல் ப‌ச்ச‌ரி‌சியை‌ப் பர‌ப்‌பி வை‌த்து, நடு‌வி‌ல் க‌ளிம‌ண்ணாலான ‌‌பி‌ள்ளையாரை வை‌க்க வே‌ண்டு‌ம். பூ‌மி‌யிலிருந்து உருவான எதுவு‌ம் பூ‌மி‌க்கே ‌திரு‌ம்ப‌ச் செல்லும் எனும் த‌த்துவ‌ம்தா‌ன் க‌ளிம‌ண் ‌பி‌ள்ளையா‌ர்.

க‌‌ளிம‌ண் ம‌ட்டு‌ம்தா‌ன் எ‌ன்‌றி‌ல்லாம‌ல், உலோக‌ம், க‌ற்‌சிலை ‌வி‌க்ரக‌ங்களையு‌ம் வை‌க்கலா‌ம். ப‌த்ரபு‌ஷ்ப‌ம் என‌ப்படு‌ம் ப‌ல்வகை‌ப் பூ‌க்க‌ள் கொ‌ண்ட கொ‌‌த்து, எரு‌க்க‌ம் பூ மாலை, அருக‌ம்பு‌ல், சாம‌ந்‌தி, ம‌ல்‌லி‌கை என்று எ‌த்தனை வகை பூ‌க்களை வா‌ங்க முடியுமோ, அவரவ‌ர் வச‌தி‌க்கே‌ற்ப வா‌ங்‌கி‌க் கொ‌ள்ளலா‌ம். அதேமா‌தி‌ரி முடி‌ந்தளவு‌க்கு ‌சில வகைப் பழ‌ங்‌களையு‌ம் வா‌‌ங்‌கி‌க் கொ‌ள்ளலா‌ம்.

இவை எ‌ல்லாவ‌ற்றையு‌ம் ‌விட, ‌‌விநாயகரு‌‌க்கு ரொ‌ம்பவு‌ம் ‌பிடி‌த்தமான மோதக‌த்தை‌த் தயா‌‌ர் ப‌ண்‌ணி‌க் கொ‌ள்ளலா‌‌ம் அதாவது தே‌ங்கா‌ய் பூ‌ரண‌த்தை உ‌ள்ளே வை‌த்து செ‌ய்ய‌ப்படும் கொழு‌க்க‌ட்டை. இ‌திலு‌ம் ஒரு த‌த்துவ‌ம் இரு‌க்‌கிறது. மேலே இரு‌க்கு‌ம் மாவு‌ப் பொரு‌ள்தா‌ன் அ‌ண்ட‌ம். உ‌ள்ளே இரு‌க்கு‌ம் வெ‌‌ல்ல‌ப் பூ‌‌ரண‌‌ம்தா‌ன் ‌பிர‌ம்ம‌ம்.கொழக்கட்டை என்றும் மோதகம் என்றும் சொல்லப்படும் பிரசாத வகைகளை தனியாக இதில் குறிப்பிட்டுள்ளேன்.

விநாயகரு‌க்கு முத‌ன் முறையாக இ‌ந்த‌க் கொழு‌க்க‌ட்டையை ‌நிவேதன‌ம் செ‌ய்தது வ‌சி‌ஷ்‌ட மு‌னிவருடைய மனை‌வியான அரு‌ந்ததி, அதாவது நம‌க்கு‌ள் இரு‌க்கு‌‌ம் இ‌‌னிய குண‌ங்களை மாயை மறை‌க்‌கிறது. இ‌ந்த மாயையை உடை‌த்தா‌ல் அதாவது வெ‌ள்ளை மாவு‌ப் பொருளை உடை‌த்தா‌ல், உ‌ள்ளே இ‌னிய குணமான வெ‌ல்ல‌ப் பூ‌ரண‌ம் நம‌க்கு‌க் ‌ கிடை‌க்கு‌ம்.

பி‌ள்ளையாரு‌க்கு பூ‌க்களா‌ல் அல‌ங்கார‌ம் செ‌ய்து ‌வி‌ட்டு, ‌பிறகு ‌‌விநாயக‌ர் பா‌ட‌ல்க‌ள் எதை வேணு‌ம்னாலு‌ம் பாடலா‌ம். ஒளவையா‌ர் த‌ந்த ‌விநாயக‌ர் அகவ‌ல், கா‌ரிய ‌சி‌த்‌தி மாலை எ‌ன்று படி‌ப்பது‌ம் ‌விசேஷமான பல‌ன்களை‌த் தரு‌ம். ‌பி‌ள்ளையாரு‌க்கு கொழு‌க்க‌ட்டை ம‌ட்டு‌மி‌ல்லாம‌ல், அவரவ‌ர் வச‌தி‌‌க்கே‌ற்ப எ‌ள்ளுரு‌ண்டை, பாயச‌ம் எ‌ன்று‌ம் நைவே‌த்ய‌ம் செ‌ய்யலா‌‌ம். பா‌ல், தே‌ன், வெ‌ல்ல‌ம், மு‌ந்‌தி‌‌ரி, அவ‌ல் என்று ஒ‌வ்வொ‌ன்‌றிலு‌ம் ‌சி‌றிதளவு எடு‌த்து ஒ‌ன்றாக‌க் கல‌ந்து அதையு‌ம் நைவே‌த்ய‌ம் செ‌ய்யலா‌ம். ‌நிவேதன‌ப் பொரு‌ட்க‌ள் ஒ‌வ்வொ‌ன்‌றிலு‌ம் 21 எ‌ன்ற கண‌க்‌கி‌ல் ‌சில‌ர் வை‌ப்பா‌ர்க‌ள். ஆனா‌ல், எ‌ண்‌ணி‌க்கை மு‌க்‌கிய‌மி‌ல்லை. அவரவ‌ர் ஈடுபாடுதா‌ன் மு‌க்‌கிய‌ம். ‌பிறகு க‌ற்பூர‌ம் கா‌ட்டி ‌விர‌த‌த்தை முடி‌க்கலா‌ம்.இ‌ந்த ‌விரத‌த்தை காலை‌யி‌‌லிரு‌ந்தே உணவு எதுவு‌ம் எடு‌த்து‌க் கொ‌ள்ளாம‌ல் அனு‌ஷ்டி‌ப்பது ரொ‌ம்பவு‌ம் ‌விசேஷ‌ம். ‌விநாயக‌ர் சது‌ர்‌த்‌தி அ‌ன்றைக்கு ந‌ல்ல நேர‌ம் எதுவென்று ப‌‌ஞ்சா‌ங்க‌த்‌திலோ அ‌ல்லது பெ‌‌ரியவ‌ர்க‌ள் மூலமாகவோ தெ‌ரி‌ந்து கொ‌ண்டு அ‌ந்த நேர‌த்தில் பூஜையை வை‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம்.

அ‌ந்த நேர‌ம் வரை‌க்கு‌ம் விரதம் இரு‌ப்பது ‌சிற‌ப்பு. ச‌ம்‌பிரதாய‌ம் பா‌ர்‌க்க‌க் கூடியவ‌ர்க‌ள் இ‌ந்த ‌விநாயக‌ர் சது‌ர்‌த்‌தி‌க்கு‌ப் ‌பிறகு‌ம் தொட‌ர்‌‌ந்து ‌விரத‌த்தை அனுச‌ரி‌ப்பா‌ர்க‌ள். அ‌ப்படி‌த் தொட‌ர்‌ந்து போ‌ய் பெள‌ர்ண‌மி‌க்கு‌ப்‌ ‌பிறகு வரு‌ம் சது‌ர்‌த்‌தி ‌தின‌த்தோடு ‌விர‌த‌த்தை ‌நிறைவு செ‌ய்வா‌ர்க‌ள். இ‌த்தனை நா‌ள் விரத‌த்து‌க்கு‌ப் ‌பிறகுதா‌ன் ‌மண் / மஞ்சல் பி‌ள்ளையாரை ‌கிண‌ற்‌றிலோ அ‌ல்லது ஏதாவது ‌நீ‌ர் ‌நிலை‌யிலோ கொ‌ண்டு போ‌ய் போடுவது வழ‌‌க்க‌ம். ப‌தினை‌ந்து நா‌ட்களுக்கு கடைபிடித்தாலும் ச‌ரி, ‌விநாயக‌ர் சது‌ர்‌த்‌தியன்று ஒரே ஒரு நா‌ள் ம‌ட்டு‌ம் இ‌ந்த ‌விரத‌த்தை காலை‌யி‌‌லிரு‌ந்தே உணவு எதுவு‌ம் எடு‌த்து‌க் கொ‌ள்ளாம‌ல் அனு‌ஷ்டி‌ப்பது ரொ‌ம்பவு‌ம் ‌விசேஷ‌ம். ‌விநாயக‌ர் சது‌ர்‌த்‌தி அ‌ன்றைக்கு ந‌ல்ல நேர‌ம் எதுவென்று ப‌‌ஞ்சா‌ங்க‌த்‌திலோ அ‌ல்லது பெ‌‌ரியவ‌ர்க‌ள் மூலமாகவோ தெ‌ரி‌ந்து கொ‌ண்டு அ‌ந்த நேர‌த்தில் பூஜையை வை‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம்.

அ‌ந்த நேர‌ம் வரை‌க்கு‌ம் விரதம் இரு‌ப்பது ‌சிற‌ப்பு. ச‌ம்‌பிரதாய‌ம் பா‌ர்‌க்க‌க் கூடியவ‌ர்க‌ள் இ‌ந்த ‌விநாயக‌ர் சது‌ர்‌த்‌தி‌க்கு‌ப் ‌பிறகு‌ம் தொட‌ர்‌‌ந்து ‌விரத‌த்தை அனுச‌ரி‌ப்பா‌ர்க‌ள். அ‌ப்படி‌த் தொட‌ர்‌ந்து போ‌ய் பெள‌ர்ண‌மி‌க்கு‌ப்‌ ‌பிறகு வரு‌ம் சது‌ர்‌த்‌தி ‌தின‌த்தோடு ‌விர‌த‌த்தை ‌நிறைவு செ‌ய்வா‌ர்க‌ள். இ‌த்தனை நா‌ள் ‌விரத‌த்து‌க்கு‌ப் ‌பிறகுதா‌ன் ‌பி‌ள்ளையாரை ‌கிண‌ற்‌றிலோ அ‌ல்லது ஏதாவது ‌நீ‌ர் ‌நிலை‌யிலோ கொ‌ண்டு போ‌ய் போடுவது வழ‌‌க்க‌ம். ப‌தினை‌ந்து நா‌ட்களுக்கு கடைபிடித்தாலும் ச‌ரி, ‌விநாயக‌ர் சது‌ர்‌த்‌தியன்று ஒரே ஒரு நா‌ள் ம‌ட்டு‌ம் அனுச‌ரி‌த்தாலு‌ம் ச‌ரி, நாம் மே‌ற்கொ‌ள்ளு‌ம் ‌விர‌த‌த்தை உள‌ப்பூ‌ர்வமாகக் கடை‌பிடி‌க்க வே‌ண்டும்.

வருட‌த்‌தி‌ற்கு ஒருமுறை ‌விநாயக‌ர் சது‌ர்‌த்‌தி கொண்டாடப்படுவதுபோல, மாத‌ந்தோறு‌ம் பெள‌ர்ண‌மி‌க்கு அடு‌த்த சது‌ர்‌த்‌தி திதி ச‌ங்கடஹர சது‌ர்‌த்‌தியாக அனு‌ஷ்டி‌க்க‌ப்படு‌கிறது. இ‌ந்த நா‌ளி‌ல் ‌விரத‌ம் இரு‌ப்பதும் வழ‌மையாகும். அ‌ன்றை‌க்கு முழுவது‌ம் விரதம் இரு‌ந்து, ‌விநாயக‌ர் ‌விக்கிரகம் அ‌ல்லது பட‌த்திற்கு மு‌ன்னா‌ல் ‌தீபமே‌ற்‌றி, நாள் முழுவதும் ‌விநாயக‌ர் பாட‌ல்க‌ள், ‌‌ஸ்தோ‌த்‌திர‌ங்‌களை பாடி,மாலை‌யி‌ல் கொழு‌க்க‌ட்டை படைத்து நைவே‌த்ய‌ம் செ‌ய்து, ‌பிறகு ச‌ந்‌திர த‌ரிசன‌ம் செ‌ய்து‌வி‌ட்டு எ‌ளிமையான உணவை எடு‌த்து‌க் கொ‌ண்டு ‌விர‌த‌த்தை முடி‌க்க வேண்டும்..


இனி  நைவேத்யங்கள்  பற்றி :( குறைந்தது பன்னிரண்டு முதல் இருபத்தொரு எண்ணிக்கையில்)

பூரண கொழக்கட்டை
உளுத்தம் கொழக்கட்டை
எள்ளு கொழக்கட்டை
பிடி கொழுக்கட்டை
பால் கொழுக்கட்டை
அம்முனி உருண்டை கொழுக்கட்டை
ஆம வடை
வெல்ல பாயசம்
ஒரு ஸ்பூன் பருப்பு, நெய் சேர்த்த அன்னம் (மகா நெய்வேத்தியம்)
அப்பம்
சுண்டல்
சர்க்கரை பொங்கல்

இதோ உங்களுக்காக:
என்னடா.....இவள் இவ்வளவு வகை எழுதி இருக்காளேன்னு பார்கிறேளா?
முடிந்ததை, செய்ய முடிவதைச் செய்யுங்கள்..செய்ததை...பக்தியோடு

பிள்ளையாருக்கு நைவேத்யம் செய்யுங்கள்..அருள் பெருகட்டும்.


  
கொழுக்கட்டை:

இதெல்லாம் வாங்கி ரெடியா வெச்சுக்கோங்க:

1. அரிசி ஒரு ஆழாக்கு
2. வெல்லம் 1/4 கிலோ
3. முற்றிய தேங்காய் 1
4. ஏலக்காய் 10

இப்படித்தான் செய்ய வேண்டும் கொழக்கட்டை..:

1. பச்சை அரிசியைக் களைந்து வடிகட்டி ஒரு சுத்தமான துணியில் நிழலில் உலர்த்த வேண்டும். உலர்ந்த அரிசியை நைசான மாவாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

2. ஒரு ஆழாக்கு மாவிற்கு 2 1/2 ஆழாக்கு தண்ணீரை அளந்து உருளை மாதிரி அடி கனமான பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும்.

3. மாவு வெண்மையாக இருக்கும் பொருட்டு ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயைத் தண்ணீரில் விடவும். தண்ணீர் கொதித்தவுடன் அடுப்பை விட்டு கீழே இறக்கி வையுங்கள்.

4. அரைத்து வைத்த மாவில் ஒரு ஆழாக்கு மாவைச் சிறிது சிறிதாக உருளித் தண்ணீரில் தூவுங்கள், அதை கட்டி தட்டாமல் கரண்டியால் கிளறி விட்டுக் கொண்டேயிருக்க வேண்டும்.

5. தண்ணீரும் மாவும் நன்றாகக் கலந்த பின் மீண்டும் அடுப்பில் வைத்து இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் விடாமல் கிளற வேண்டும். மாவு டேஸ்டாக இருக்க ஒரு சிட்டிகை உப்பைத் தண்ணீரில் போடலாம். மாவு கையில் ஒட்டாத பதம் வந்ததும், மாவை இறக்கி வைத்து ஒரு தட்டு போட்டு மூடிவைத்துவிட வேண்டும். இப்போது கொழுக்கட்டைக்கு மாவு தயார்.

பூரணம் செய்ய:

6. ஒரு முற்றிய தேங்காயைப் பூப்போல் துருவி 1/4 கிலோ வெல்லமும் சேர்த்து அடுப்பை நிதானமாக எரியவிட்டு கிளறவேண்டும்.

7. வெல்லமும் தேங்காயும் கலந்து ஒட்டாமல் வரும் பதத்தில், 10 ஏலக்காய்களைப் பொடி செய்து சேர்த்துக் கிளறி இறக்கி வைத்து விடவேண்டும். இப்போது பூரணம் தயார்.

8. அரை மணி நேரம் கழித்து மாவை சிறிய எலுமிச்சம் பழ சைஸில் (கையில் நல்லெண்ணெய் தடவிக் கொண்டு) உருட்டி கிண்ணம் போல் செய்து கொள்ளுங்கள்.

9. பூரணத்தை அதில் ஒரு ஸ்பூன் வைத்து, பூரணம் வெளியில் தெரியாதவாறு மூடி வைத்து விடவேண்டும்.

10. இம்மாதிரி 10 கொழுக்கட்டைகள் செய்தபின் குக்கரில் இட்லி தட்டில் எண்ணெய் தடவி அதில் வைத்து வெயிட் போடாமல் 3 நிமிடம் வேக வைக்க வேண்டும். ஆறியபின் கொழுக்கட்டைகளை எடுக்க வேண்டும்.

கொழுகட்டை அச்சில் செய்ய:

  • பிளாஸ்டிக் மற்றும் இன்டாலியம் வகைகளில் கொழுக்கட்டை-கடைகளில் கிடைக்கும் அச்சை உபயோகிக்கலாம். இதை நன்றாக அலம்பி, நல்லெண்ணெய்தடவி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  • ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு மாவை எடுத்து, தட்டை போல தட்டி, அச்சில ஓட்டினார்போலவைக்கவும்.
  • இதில் சிறிது பூரணம் (சின்ன நெல்லிக்காய் அளவு) வைத்து மூடவும். அச்சின் ஓரத்தில்அதிகப்படியாகஇருக்கும் மாவை வழித்து எடுத்து விடவும்.
  • இதை இட்லி குக்கரில் வேக விடவும்..
  •  
  • ----------------------------------------------------------------------------------------------

பூஜைக்குத் தேவையானப் பொருட்கள்
முன்பே தயார் செய்து கொள்ள வேண்டியவை

தயிர்
பசும்பால்
நெய்
தேன்
கற்கண்டு
அவல், பொரி மஞ்சள்
கும்குமம்
சந்தனம்
அக்ஷதை
வெற்றிலை
பாக்கு
மாவிலை, தோரணம்
உதிரிப்பூ - கொஞ்சம்
பூமாலை - 2
தொடுத்த சரம் - 3 முழம்
ஊதுவத்தி
சாம்பிராணி
அட்சதை
கற்பூரம்
வெள்ளை வேஷ்டி துணி
பூணூல்
முழு பாக்கு
மஞ்சள் கிழங்கு
தாம்பாளம்
பஞ்சபாத்திரம் உத்தரணி
பூஜை மணி
கற்பூரத் தட்டு
தூபக்கால்
தீபக்கால்
பித்தளை கிண்ணங்கள்
பித்தளை தட்டுக்கள்
ஆரத்தி தட்டு
பலகை
வெள்ளி காசுகள்
வாழைப்பழம் - 12
தேங்காய் - 6
விளாம்பழம், நாவல்பழம் ஆகிய பழங்கள்.
மேலும் வசதிக்கு ஏற்றபடி சில பழங்கள்

விளாம்பழத்தை பெரும்பாலும் யாரும் பயன்படுத்தாமல் அப்படியே தூக்கி போடுகின்றனர். பூஜை ஆனதும் சிலர் வெல்லம் கலந்து சாப்பிடுவார்கள். அப்படி தித்திப்பு பிடிக்காமல் இருந்தால், பழத்தை உடைத்து உள்ளிருக்கும் சதைப் பகுதியை அப்படியே தயிரில் போட்டு, தாளித்து உப்பு சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

================================================================

பூர்வாங்க பூஜை

பூஜாரம்பம்

ஆசமநம்

(கையில் புஷ்பம் அக்ஷதை எடுத்துக் கொண்டு கீழ்கண்ட மந்திரம் சொல்லிக் குட்டிக் கொள்ளவும்)
கஜானனம் பூதகணாதி சேவிதம்
கபித்த ஜம்பூ பல சார பக்ஷிதம்
உமா சுதம் சோக விநாச காரணம்
நமாமி விக்னேஷ்வர பாத பங்கஜம்

சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்
ப்ரசன்னவதனம் த்யாயேத் சர்வ விக்நோபசாந்தையே
ஸுமுகசைகதந்தச்ச கபிலோ கஜகர்ணக
லம்போதரச்ச விகடோ விக்னராஜோ விநாயக:
தூமகேதுர் கணாத்யக்ஷ பாலசந்த்ரோ கஜானன
வக்ரதுண்ட சூர்ப்பகர்ண ஹேரம்ப ஸ்கந்தபூர்வஜ
ஷோடசைதானி நாமானி ய: பதே ச்ருனுயா தபி
வித்யாரம்பே விவாஹே ச பிரவேசே நிர்கமே ததா
சஜ்க்ராமே சர்வ கார்யேஷு விக்னஸ்தஸ்ய நஜாயதே
அபீப்ஸிதார்தா சித்த்யர்தம் பூஜிதோ யஸ்சு ரைரபி சர்வ விக்னச்சிதே
தஸ்மைகனாதிபதயே நம:

அயம் முஹூர்த்த: ஸுமுஹூர்த்தோஸ்விதி பவந்தோ
மஹாந்தோநு க்ருஹ்ணந்து
என்று சொல்லி பெரியோர்களைக் குறித்து பிரார்த்தித்துக் கொள்ளவும்.

அயம் முஹூர்த்தஸ் ஸுமுஹூர்த்தோஸ்து என்று பெரியவர்கள் ப்ரதிவசனம் சொல்லவும். (மூத்தவர்கள் இருந்தால்)

மமோபாத்த சமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர
ப்ரீத்யர்த்தம் ததேவலக்னம் சுதினம் ததேவ தாராபலம் சந்திரபலம் ததேவ
வித்யாபலம் தெய்வபலம் ததேவ
லக்ஷ்மீ பதே தே அங்க்ரியுகம் ஸ்மராமி

ப்ராணாயாமம்

ஓம் பூ: ஓம் புவ: ஓம் ஸுவ: ஓம் மஹ: ஓம் ஜன: ஓம் தப: ஓம் - ஸத்யம்-ஓம்-தத்ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி-தியோ யோ-ந: ப்ரசோதயாத்-ஓமாப: ஜ்யோதீரஸ: அம்ருதம் ப்ரஹ்ம-பூர்ப்புவஸ் ஸுவரோம்.

ஸங்கல்பம்

மமோபாத்த சமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் சுபே சோபனே முகூர்த்தே(அ)த்ய ப்ரம்மன த்விதீய பரார்த்தே ஸ்வேத வராஹ கல்பே, வைவஸ்வத மன்வந்தரே, அஷ்டாவிம்சதிதமே கலியுகே, பரதமே பாதே, ஜம்பூத்வீபே, பாரத வர்ஷே, பாரத கண்டே மேரோ: தக்ஷிணே பார்ஸ்வே, சகாப்தே, அஸ்மின் வர்தமானே வ்யாவஹாரிகே பிரபவாதி ஷஷ்டி சம்வத்சரானாம், மத்யே ........ (2012) (வருஷம் பெயர்) நாம சம்வத்சரே, தக்ஷிணாயனே, வர்ஷ ரிதௌ (மாசம்) பாத்ரபத (ஆவணி) மாசே சுக்ல பக்ஷே சதுர்த்யாம் சுபதிதௌ குரு வாசர யுக்தாயாம் ஹஸ்த நக்ஷத்திர யுக்தாயாம் சுபயோக சுபகரண ஏவங்குண ஸகல விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் சுப திதௌ,............ (உங்கள் கோத்ரம்) கோத்ர: ஸ்ரீமான்........ (உங்கள் பெயர்), நாமதேயஸ்ய, தர்மபத்னீ சமேதஸ்ய அஸ்மாகம் ஸஹகுடும்பானாம், 

க்ஷேம ஸ்தைர்ய வீர்ய விஜய ஆயுராரோக்ய ஐஸ்வர்ய அபிவ்ருத்யர்த்தம், ஸமஸ்த துரிதோப சாந்த்யர்த்தம், தர்மாத்மா காம மோக்ஷ சதுர்வித ஃபல புருஷார்த்த சித்த்யர்தம், உசிதகாலே ஆயுஷ்மத்ஸுரூப சுகுணபுத்ர அவாப்த்யர்த்தம், சமஸ்த மங்களாவாப்த்யர்த்தம், அரோக திடகாத்ரதா ஸித்யர்த்தம், சிந்தித மனோரத அப்த்யர்தம், மனோ வாஞ்சிதசகல அபீஷ்ட ஃபல சித்த்யார்தம், வர்ஷே ப்ரயுக்த வரசித்தி விநாயக சதுர்தீ முத்திஷ்ய ஸ்ரீ வரசித்தி விநாயக தேவதா ப்ரீத்யர்த்தம், ப்ரஸாத ஸித்த்யர்த்தம், கல்பக்தப்ரகாரேன யாவச்சக்தி த்யான-ஆவாஹனாதி சமஸ்த ஷோடச உபசாரை: ஸ்ரீ சித்திவிநாயக பூஜாம் கரிஷ்யே.

ஆஸன பூஜை
ப்ருதிவ்யா: மேருப்ரு ட்டருஷி: -ஸுதலம் ச்சந்த: கூர்மோ தேவதா
ப்ருத்வி த்வயா த்ருதா லோகா தேவி த்வம் விஷ்ணுநா த்ருதா
த்வம் ச தாரய மாம் தேவி பவித்ரம் குரு சாஸனம்
கண்டா பூஜை
(மணி அடிக்கவும்)
ஆகமார்த்தம்து தேவானாம்கமனார்த்தம் துரக்ஷ ஸாம்
குருகண்டாரவம் தத்ரதேவதாஹ்வான லாஞ்சனம்
த்யானம் மற்றும் ஆவாஹனம்
குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணுர் குருர் தேவோ மஹேச்வர:
குருஸ் ஸாக்ஷாத் பரம்ப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீகுரவே நம:
விக்னேஸ்வர பூஜை (மஞ்சள் பிள்ளையார்)
மஞ்சள் பிள்ளையார் கூம்பு வடிவத்தில் பிடித்து வைத்து சந்தன குங்கும அக்ஷதைகள் சேர்த்து ஒரு சின்ன பித்தளை தட்டில் வைத்துக் கொள்ளவும். பஞ்சுத் திரி நெய் கொண்டு ஐந்து முக விளக்கொன்றை ஏற்றி;

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்
ப்ரசன்னவதனம் த்யாயேத் சர்வவிக்னோ (உ)ப சாந்தயே

என்று ஜபித்து, வலது தொடை மீது வலது கை வைத்து இடது கையால் வலது கையை மூடிக்கொண்டு சங்கல்பம் செய்து கொள்ளவும்.

மமோபாத்த சமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர
ப்ரீத்யர்த்தம் ததேவலக்னம் சுதினம் ததேவ தாராபலம் சந்திரபலம் ததேவ
வித்யாபலம் தெய்வபலம் ததேவ
த்யானம்
கணானாம் த்வாம் கணபதிம் ஹவாமஹே
கவிம் கவீனாம் உபமஸ்ர வஸ்தமம்
ஜ்யேஷ்ட ராஜம் ப்ரம்ஹணாம் பிரம்மணஸ்பத ஆனஹ
ஸ்ருன்வன்னோதிப்ஹிஸ்சீத சாதனம்

அஸ்மின் ஹரித்ரா பிம்பே மஹாகணபதிம் த்யாயாமி

இஷ்டதெய்வத்தை மனதில் த்யானித்துக் கொண்டு, பூ அக்ஷதை சமர்ப்பணம் செய்து, மஞ்சள் பிள்ளையாருக்கு பூஜிக்கவும்.

ஆவாஹனம்
அஸ்மின் பிம்பே ஸ்ரீ மஹாகணபதிம் ஆவாஹயாமி
ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: ஆசனம் சமர்ப்பயாமி (பூ போடவும்)
ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: அர்க்யம் சமர்ப்பயாமி (உத்தரணி ஜலம் எடுத்து ஒரு கிண்ணத்தில் சேர்க்கவும்)
ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: ஆசமநீயம் சமர்ப்பயாமி (உத்தரணி ஜலம் எடுத்து ஒரு கிண்ணத்தில் சேர்க்கவும்)
ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: மதுபர்க்கம் சமர்ப்பயாமி (உத்தரணி ஜலம் எடுத்து ஒரு கிண்ணத்தில் சேர்க்கவும்)
ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: ஸ்நானம் சமர்ப்பயாமி (உத்தரணி ஜலம் எடுத்து ஒரு கிண்ணத்தில் சேர்க்கவும்)
ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: ஸ்நானாநந்தரம் ஆசமநீயம் சமர்ப்பயாமி (உத்தரணி ஜலம் எடுத்து ஒரு கிண்ணத்தில் சேர்க்கவும்)
ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: வஸ்த்ரம் சமர்ப்பயாமி (பூ அக்ஷதை சேர்க்கவும்)
ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: உபவீதம் சமர்ப்பயாமி (பூ அக்ஷதை சேர்க்கவும்)
ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: ஆபரணம் சமர்ப்பயாமி ( (பூ அக்ஷதை சேர்க்கவும்)
ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: கந்தான் தாரயாமி (சந்தனம் இடவும்)
ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: கந்தஸ்யோபரி ஹரித்ரா குங்குமம் சமர்ப்பயாமி (குங்குமம் இடவும்)
ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: புஷ்பை பூஜயாமி ( (பூ அக்ஷதை சேர்க்கவும்)
தூபார்த்தம் தீபார்த்தம் அக்ஷதாந் ஸமர்ப்பயாமி. (வெற்றிலை பாக்கு பழம் நிவேதனம் செய்யவும்)

புஷ்பத்தால் அர்ச்சனை செய்யவும்.

ஓம் சுமுகாய நம:
ஓம் ஏகதந்தாய நம:
ஓம் கபிலாய நம:
ஓம் கஜகர்ணகாய நம:
ஓம் லம்போதராய நம:
ஓம் விகடாய நம:
ஓம் விக்னராஜாய நம:
ஓம் விநாயகாய நம:
ஓம் கணாதிபாய நம:
ஓம் தூமகேதவே நம:
ஓம் கணாத்யக்ஷாய நம:
ஓம் பாலச்சந்த்ராய நம:
ஓம் கஜானனாய நம:
ஓம் வக்ரதுண்டாய நம:
ஓம் சூர்பகர்னாய நம:
ஓம் ஹேரம்பாய நம:
ஓம் ஸ்கந்தபூர்வஜாய நம:
ஓம் சித்திவினாயகாய நம:
ஓம் ஸ்ரீ மகாகணபதயே நம:


உத்தர பூஜைதூபம்: ஊதுவத்தி காண்பித்து : தூபம் ஆக்ஹ்ராபயாமி
தீபம்: நெய் ஜோதி விளக்கு காண்பித்து: தீபம் சந்தர்ஷயாமி
உத்தரணி ஜலம் எடுத்து கிண்ணத்தில் சேர்த்து : தீபானந்தரம் ஆசமநீயம் சமர்பயாமி
நிவேதன மந்திரங்கள்
நைவேத்யம்: தேங்காய் பழங்கள் மீது தண்ணீர் தெளித்து:
ஓம் பூர்புவஸ்ஸுவ: ஓம்-தத்ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோந: ப்ரசோதயாத்

அம்ருதமஸ்து அம்ருதோபஸ்தரணமஸி ஸ்வாஹா, ஓம் ப்ராணாய: ஸ்வாஹா, ஓம் அபானாய ஸ்வாஹா, ஓம் வ்யானாய ஸ்வாஹா, ஓம் உதானாய ஸ்வாஹா, ஓம் சமானாய ஸ்வாஹா, ஓம் ப்ரஹ்ம்மனே ஸ்வாஹா, நைவேத்யம் நிவேதயாமி, நைவேத்யானன்தரம் ஆசமநீயம் சமர்பயாமி.

தாம்பூலம் சமர்பித்து:
தாம்பூலம் சமர்பயாமி
கற்பூர நீராஞ்சனம்: கற்பூர நீராஞ்சனம் சமர்பயாமி
உத்தரணி ஜலம் எடுத்து கிண்ணத்தில் சேர்த்து : கற்பூர நீராஜனனந்தரம் ஆசமநீயம் சமர்பயாமி
வந்தனம்: மந்த்ரபுஷ்பம் சமர்பயாமி
ஆத்ம பிரதக்ஷிணம்
(தன்னையே பிரதக்ஷிணம் செய்து கொண்டு)
யானி கானிச்ச பாபானி ஜன்மாந்தர க்ரிதானிச தானி தானி வினஸ் யந்தி
பிரதக்ஷிண பதே பதே

நமஸ்காரம் செய்து:
நமோ நமோ கணேசாய நமஸ்தே விஸ்வ ரூபிணே
நிர்விக்னம் குருமே காமம் நமாமி த்வாம் கஜானன
அகஜானன பத்மார்க்கம் கஜானனம் அஹர்னிசம்
அநேக தந்தம் பக்தாநாம் ஏகதந்தம் உபாஸ்மஹே
விநாயக வரம் தேஹி மகாத்மான் மோதகப்ரிய
அவிக்னம் குருமே தேவ சர்வ கார்யேஷு சர்வதா
வக்ரதுண்ட மஹாகாய சூர்யகோடி சமப்ரபா
நிர்விக்னம் குருமே தேவா சர்வகார்யேஷு சர்வதா
ப்ரதக்ஷிண நமஸ்காரான் சமர்பயாமி
பிரார்த்தனை
பின், எல்லாக் காரியங்களிலும் எப்போதும் இடையூறுகள் இல்லாமல் செய்தருள வேண்டும் என்று
விக்னேஸ்வரரை பிரார்த்திக்க வேண்டும்.
வக்ர துண்ட மஹாகாய சூர்ய கோடி ஸமப்ரப
நிர்விக்னம் குரு மே தேவ ஸர்வ கார்யேஷு ஸர்வதா

என்று சொல்லி பிரார்த்தித்து நமஸ்காரம் செய்துவிட்டு

கணபதி ப்ரஸாதம் சிரஸா க்ருஹ்ணாமி (கணபதி ப்ரஸாதத்தை சிரசில் தரித்துக் கொள்ளவும்)
ப்ராணாயாமம்
ஓம் பூ: ஓம் புவ: ஓம் ஸுவ: ஓம் மஹ: ஓம் ஜன: ஓம் தப: ஓம் - ஸத்யம்-ஓம்-தத்ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி-தியோ யோ-ந: ப்ரசோதயாத்-ஓமாப: ஜ்யோதீரஸ: அம்ருதம் ப்ரஹ்ம-பூர்ப்புவஸ் ஸுவரோம்.
ஸங்கல்பம்
மமோபாத்த சமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் சுபே சோபனே முகூர்த்தே(அ)த்ய ப்ரம்மன த்விதீய பரார்த்தே ஸ்வேத வராஹ கல்பே, வைவஸ்வத மன்வந்தரே, அஷ்டாவிம்சதிதமே கலியுகே, பரதமே பாதே, ஜம்பூத்வீபே, பாரத வர்ஷே, பாரத கண்டே மேரோ: தக்ஷிணே பார்ஸ்வே, சகாப்தே, அஸ்மின் வர்தமானே வ்யாவஹாரிகே பிரபவாதி ஷஷ்டி சம்வத்சரானாம், மத்யே கர (2011) (வருஷம் பெயர்) நாம சம்வத்சரே, தக்ஷிணாயனே, வர்ஷ ரிதௌ (மாசம்) பாத்ரபத (ஆவணி) மாசே சுக்ல பக்ஷே சதுர்த்யாம் சுபதிதௌ குரு வாசர யுக்தாயாம் ஹஸ்த நக்ஷத்திர யுக்தாயாம் சுபயோக சுபகரண ஏவங்குண ஸகல விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் சுப திதௌ, (உங்கள் கோத்ரம்) கோத்ர: ஸ்ரீமான் (உங்கள் பெயர்), நாமதேயஸ்ய, தர்மபத்னீ சமேதஸ்ய அஸ்மாகம் ஸஹகுடும்பானாம், க்ஷேம ஸ்தைர்ய வீர்ய விஜய ஆயுராரோக்ய ஐஸ்வர்ய அபிவ்ருத்யர்த்தம், ஸமஸ்த துரிதோப சாந்த்யர்த்தம், தர்மாத்மா காம மோக்ஷ சதுர்வித ஃபல புருஷார்த்த சித்த்யர்தம், உசிதகாலே ஆயுஷ்மத்ஸுரூப சுகுணபுத்ர அவாப்த்யர்த்தம், சமஸ்த மங்களாவாப்த்யர்த்தம், அரோக திடகாத்ரதா ஸித்யர்த்தம், சிந்தித மனோரத அப்த்யர்தம், மனோ வாஞ்சிதசகல அபீஷ்ட ஃபல சித்த்யார்தம், வர்ஷே ப்ரயுக்த வரசித்தி விநாயக சதுர்தீ முத்திஷ்ய ஸ்ரீ வரசித்தி விநாயக தேவதா ப்ரீத்யர்த்தம், ப்ரஸாத ஸித்த்யர்த்தம், கல்பக்தப்ரகாரேன யாவச்சக்தி த்யான-ஆவாஹனாதி சமஸ்த ஷோடச உபசாரை: ஸ்ரீ சித்திவிநாயக பூஜாம் கரிஷ்யே.
விக்னேஸ்வர உத்யாபனம்
அப உபஸ்ப்ருச்ய (உத்தரணியில் தண்ணீரை எடுத்துக் கொண்டு கைகளைத் துடைத்துக் கொள்ளவும்)
விக்னேஸ்வரம் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி (என்று கூறி மஞ்சள் பிள்ளையாரை அக்ஷதை புஷ்பம் சமர்ப்பித்து வடக்குப்பக்கமாக நகர்த்தவும்)
கலச பூஜை
கலசத்தில் தண்ணீர், ஒரு கிராம்பு, இரு துளசி தளங்கள், ஒரு சிட்டிகை பச்சைக்கற்பூரம், ஒரு உத்திரணி அளவு பன்னீர், வெட்டிவேர் ஆகியவற்றைச் சேர்த்து புஷ்பங்களால் அலங்காரம் செய்து வலது கையால் மூடிக்கொள்ளவும்.

கலஸ்ய முகே விஷ்ணு கண்டே ருத்ர சமாஸ்ரிதா:
மூலே தாத்ரா ஸ்திதோ பிரம்மா மத்யே மாத்ருகனாஸ்ம்ருத
குக்ஷௌ து சாகரா: சர்வே சப்தத்வீபா வசுந்தரா
ருக்வேதோ(அ)தா யஜுர்வேத: சாமவேதோ(அ)யதார்வன:
கங்கே ச யமுனே சைவ கோதாவரி சரஸ்வதி
நர்மதே சிந்து காவேரி ஜலே(அ)ஸ்மின் சந்நிதிம் குரு
(என்று தீர்த்தத்தை ப்ரோக்ஷிக்கவும்)
பூஜாத்ரவ்யங்களுக்கும் பூஜை செய்கின்றவரும் ப்ரோக்ஷித்துக் கொள்ளவும்.

அங்கைச்ச சஹிதா: சர்வே கலசாம்பு சமாஸ்ரிதா:
ஆயாந்து தேவ பூஜார்தம் துரிதக்ஷய காரகா:

என்று, புஷ்பார்ச்சனை செய்யவும்.

கங்காயை நம:
யமுனாயை நம:
கோதாவர்யை நம:
ஸரஸ்வத்யை நம:
நர்மதாயை நம:
ஸிந்தவே நம:
காவேர்யை நம:
தாம்ரவர்ண்யை நம:
- என்று பூஜித்து, தீர்த்தத்தை, பூஜைப் பொருள்கள், கும்பம் மற்றும் தங்கள் மீது தெளிக்கவும்.
சங்க பூஜை
கலச தீர்த்தத்தால் சங்கத்தை நிரப்பிக் கொண்டு,

த்வம் புரா ஸாகரோத்பந்நோ விஷ்ணுநா வித்ருத: கரே
தேவைச்ச பூஜித: ஸர்வை: பாஞ்சஜந்ய நமோஸ்து தே

(சங்கு இல்லாத பட்சத்தில் ஸ்லோகம் மட்டும் சொன்னால் போதுமானது)

பின் அந்த தீர்த்தத்தால் தன்னையும், பூஜைப் பொருட்களையும் மூன்று முறை ப்ரோக்ஷணம் செய்து , மீண்டும் சங்கத்தில் தீர்த்தம் நிரப்பி வைக்கவேண்டும்.
ஆத்ம பூஜை
தேஹோ தேவாலய: ப்ரோக்த: ஜீவோ தேவ: ஸனாதன:
த்யஜேத் அஞ்ஞான நிர்மால்யம் ஸோஹம்பாவேந பூஜயேத்
பீட பூஜை
ஓம் ஸகலகுணாத்ம சக்தி யுக்தாய யோக பீடாத்மநே நம: ஆதாரசக்த்யை நம: மூலப்ரக்ருத்யை நம: ஆதிவராஹாய நம: ஆதி கூர்மாய நம: அனந்தாய நம: ப்ருதிவ்யை நம: ஆதித்யாதி நவக்ரஹதேவதாப்யோ நம: தச திக்பாலேப்யோ நம:
கண்டா பூஜை
(மணி அடிக்கவும்)
ஆகமார்த்தம்து தேவானாம்கமனார்த்தம் துரக்ஷ ஸாம்
குருகண்டாரவம் தத்ரதேவதாஹ்வான லாஞ்சனம்
குரு த்யானம்
குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணுர் குருர் தேவோ மஹேச்வர:
குருஸ் ஸாக்ஷாத் பரம்ப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீகுரவே நம:

ப்ரதான பூஜை
தியான ஆவாஹனம்
கரிஷ்யே கணநாதஸ்ய வ்ரதம் ஸம்பத்கரம் சுபம்
பக்தானாமிஷ்ட வரதம் ஸர்வமங்கள காரணம்
ஏகதந்தம் சூர்ப்பகர்ணம் கஜவக்த்ரம் சதுர்புஜம்
பாசாங்குசதரம் தேவம் த்யாயேத் ஸித்திவிநாயகம்
த்யாயேத் கஜானனம் தேவம் தப்த –காஞ்சன- ஸந்நிபம்
சதுர்ப்புஜம் மஹாகாயம் ஸர்வாபரண பூஷிதம்
ஸித்திவிநாயகம் த்யாயாமி
அத்ராகச்ச ஜகத்வந்த்ய ஸுரராஜார்ச்சிதேச்வர
அநாதநாத ஸர்வஜ்ஞ கீர்வாண ஸுரபூஜித
கணாநாம் த்வா கணபதிகும் ஹவாமஹே
கவிம்கவீநாம் உபமச்ரவஸ்தமம்
ஜ்யேஷ்டராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பதே
ஆந: ச்ருண்வந்நூதிபிஸ் ஸீத ஸாதநம்
(மண் பிள்ளையாரை வைத்து பூஜித்தால்) அஸ்மின் ம்ருத்திகா பிம்பே
(ஸ்வாமி படம் வைத்து பூஜித்தால்) ஸித்தி விநாயகம் ஆவாஹயாமி
ப்ராணப்ரதிஷ்டை
(அந்தந்த பூஜைக்குரிய தேவதையை விக்ரஹ மூர்த்தியிலோ, கலசத்திலோ, படம் முதலியவைகளிலோ கீழ்கண்ட வகையில் ப்ராண ப்ரதிஷ்டை செய்யவேண்டும். தேவதா ப்ரதிமை இருந்தால், பஞ்சகவ்யத்தால் அந்தப் ப்ரதிமையை சுத்தம் செய்து, ப்ராண ப்ரதிஷ்டை செய்ய வேண்டும், படமாக இருந்தால் ப்ராணப்ரதிஷ்டை மட்டும் செய்யலாம்)

ஓம் அஸ்ய ஸ்ரீ ப்ராணப்ரதிஷ்டா மஹாமந்த்ரஸ்ய, ப்ரஹ்ம விஷ்ணு மஹேச்வரா: ரிஷய: ருக் யஜுஸ் ஸாம அதர்வாணி ச்சந்தாம்ஸி
ஸகல ஜகத் ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹார காரிணீ ப்ராண சக்தி: பரா தேவதா
ஆம் பீஜம் ஹ்ரீம் சக்தி: க்ரோம் கீலகம், ப்ராண ப்ரதிஷ்டாபநே விநியோக:
ஆம் அங்குஷ்ட்டாப்யாம் நம: ஹ்ரீம் கனிஷ்ட்டிகாப்யாம் நம: க்ரோம் கரதல கரப்ருஷ்ட்டாப்யாம் நம:
ஆம் ஹ்ருதயாய நம: ஹ்ரீம் சிரஸே ஸ்வாஹா, க்ரோம் சிகாயை வஷட், ஆம் கவசாய ஹும், ஹ்ரீம் நேத்ர த்ரயாய சௌஷட், க்ரோம் அஸ்தாராய பட், பூர்ப்புவஸ்ஸுரோமிதி திக்பந்த:
ஆஸுநீதே புநரஸ்மாஸு சக்ஷு: புந: ப்ராணமிஹ நோ தேஹி போகம், ஜ்யோக் பச்யேம ஸூர்ய முச்சரந்த மநுமதே ம்ருளா ந: ஸ்வஸ்தி

ஆவாஹிதோ பவ ஸ்த்தாபிதோ பவ ஸந்நிஹிதோ பவ ஸந்நிருத்தோ பவ அவகுண்டிதோ பவ ஸுப்ரீதோ பவ ஸுப்ரஸந்நோ பவ ஸுமுகோ பவ வரதோ பவ ப்ரஸீத ப்ரஸீத

ஸ்வாமின் ஸர்வஜகந்நாத யாவத் பூஜாவஸாநகம்
தாவத் த்வம் ப்ரீதி பாவேந பிம்பேஸ்மிந் ஸந்நிதிம் குரு

என்று பிரார்த்தித்து இரண்டு பழங்களை நிவேதனம் செய்யவும்.
த்யானம்
ரக்தாம்போதிஸ்த்த போதோல்லஸ தருண ஸரோஜாதிரூடா கராப்ஜை: பாசம் கோதண்ட மிக்ஷூத்பவ மளிகுண மப்யங்குசம் பஞ்சபாணாந், பிப்ராணாஸ்ருக் கபாலம் த்ரிநயன லஸிதா பீந வக்ஷோருஹாட்யா தேவீ பாலார்க்கவர்ணா பவது ஸுககரீ ப்ராணசக்தி: பரா ந:

ஓம் ஆம் ஹ்ரீம் க்ரோம், க்ரோம் ஹ்ரீம் ஆம், அம் யம் ரம் லம் வம் சம் ஷம் ஸம் ஹம் ளம் க்ஷம் அ: ஹம்ஸ: ஸோஹம், ஸோஹம் ஹம்ஸ:

அஸ்யாம் மூர்த்தௌ ஜீவஸ்திஷ்ட்டது, அஸ்யாம் மூர்த்தௌ ஸர்வேந்த்ரியாணி வாங் மனஸ் த்வக் சக்ஷுச் ச்ரோத்ர ஜிஹ்வா க்ராண வாக் பாணி பாத பாயூபஸ்த்தானி இஹாகத்ய ஸ்வஸ்தி ஸுகம் சிரம் திஷ்ட்டந்து ஸ்வாஹா

(புஷ்பம் அக்ஷதை இவைகளைத் தீர்த்தத்துடன் பிம்பத்தின் மீது விடவும்)
ஆஸுநீதே புநரஸ்மாஸு சக்ஷு: புன: ப்ராணமிஹ நோ தேஹி போகம் ஜ்யோக் பச்யேம ஸூர்ய முச்சரந்த மனுமதே ம்ருளயா ந ஸ்வஸ்தி
ஆவாஹிதோ பவ ஸ்த்தாபிதோ பவ ஸந்நிஹிதோ பவ ஸந்நிருத்தோ பவ அவகுண்டிதோ பவ ஸுப்ரீதோ பவ ஸுப்ரஸந்நோ பவ ஸுமுகோ பவ வரதோ பவ ப்ரஸீத ப்ரஸீத
ஸ்வாமின் ஜகன்நாத யாவத் பூஜாவஸானகம்
தாவத் த்வம் ப்ரீதி பாவேன பிம்பேஸ்மின் ஸன்னிதிம் குரு

என்று பிரார்த்தித்து இரண்டு பழங்களை நிவேதனம் செய்யவும்.
ஷோடசோபசாரங்கள்
அனேகரத்ன – கசிதம் முக்தாமணி விபூஷிதம்
ரத்ன ஸிம்ஹாஸனம் சாரு கணேச ப்ரதிக்ருஹ்யதாம்
ஸித்திவிநாயகாய நம: ஆஸனம் ஸமர்ப்பயாமி
கௌரீபுத்ர நமஸ்தேளஸ்து தூர்வா பத்மாதி ஸம்யுதம்
பக்த்யா பாத்யம் மயா தத்தம் க்ருஹாண த்விரதாநந
ஸித்தி விநாயகாய நம: பாத்யம் ஸமர்ப்பயாமி
ஸித்தார்த்த-யவ-தூர்வாபிர்-கந்த-புஷ்பாக்ஷதைர்-யுதம்
தில-புஷ்ப-ஸமாயுக்தம் க்ருஹாணார்க்யம் கஜாநந
ஸித்தி விநாயகாய நம: அர்க்யம் ஸமர்ப்பயாமி
கற்பூராகரு புஷ்பைச்ச வாஸிதம் நிர்மலம் ஜலம்
பக்த்யா தத்தம் மயா தேவ குருஷ்வாசமநம் ப்ரபோ
ஸித்தி விநாயகாய நம: மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி
மத்த்வாஜ்ய-சர்க்கராயுக்தம் ததிக்ஷீர-ஸமந்விதம்
பஞ்சாம்ருதம் க்ருஹாணேதம் பக்தாநாமினாமிஷ்டதாயக
கங்காதி-புண்ய-பாநீயைர் கந்த புஷ்பாக்ஷதைர் யுதை:
ஸ்நானம் குருஷ்வபகவந் உமாபுத்ர நமோஸ்து தே
ஸித்தி விநாயகாய நம: ஸ்நான தீர்த்தம் ஸமர்ப்பயாமி

ஸ்நானாநந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி
ரக்தவஸ்த்ர த்வயம் தேவ ராஜராஜாதி பூஜித
பக்த்யா தத்தம் க்ருஹாணேதம் பகவந் ஹரநந்தன
ஸித்தி விநாயகாய நம: வஸ்த்ரயுக்மம் ஸமர்ப்பயாமி
ராஜதம் ப்ரஹ்மஸூத்ரஞ்ச காஞ்சநஞ் சோத்தரீயகம்
க்ருஹாண சாரு ஸர்வஜ்ஞ பக்தாநாமிஷ்டதாயக
ஸித்தி விநாயகாய நம: உபவீதம் ஸமர்ப்பயாமி
சந்தநாகரு கற்பூர கஸ்தூரீ குங்குமான்விதம்
விலேபநம் ஸுரச்ரேஷ்ட்ட ப்ரீத்யர்த்தம் ப்ரதிக்ருஹ்யதாம்
ஸித்திவிநாயகாய நம: கந்தம் ஸமர்ப்பயாமி
அக்ஷதான் தவளான் திவ்யான் சாலீயாநக்ஷதான் கபான்
ஹரித்ராசூர்ண ஸம்யுக்தான் ஸங்க்ருஹாண கணாதிப
ஸித்தி விநாயகாய நம: அக்ஷதான் ஸமர்ப்பயாமி
ஸுகந்தீனி ச புஷ்பாணி ஜாஜீ குந்த முகாநி ச
ஏகவிம்சதி ஸங்க்யானி க்ருஹாண கணநாயக
ஸித்தி விநாயகாய நம: புஷ்பை: பூஜயாமி
கீழ்கண்ட மந்திரத்தை பத்து தரம் ஜபித்து ப்ரோக்ஷணம் செய்யவும்.
தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி
தந்நோ தந்தி: ப்ரசோதயாத்
அங்க பூஜை
ஓம் ஸ்ரீ பார்வதி நந்தநாய நம: பாதௌ பூஜயாமி
ஓம் ஸ்ரீ கணேசாய நம: குல்பௌ பூஜயாமி
ஓம் ஸ்ரீ ஏகதந்தாய நம: ஜங்கே பூஜயாமி
ஓம் ஸ்ரீ ஜகத்வல்லபாயை நம: ஜானூனி பூஜயாமி
ஓம் ஸ்ரீ விக்னராஜாய நம: ஊரூ பூஜயாமி
ஓம் ஸ்ரீ அகுவாஹனாய நம: கடிம் பூஜயாமி
ஓம் ஸ்ரீ குஹாக்ரஜாய நம: குஹ்யம் பூஜயாமி
ஓம் ஸ்ரீ மஹத்தமாய நம: மேட்ரம் பூஜயாமி
ஓம் ஸ்ரீ ஹேரம்பாய நம: நாபிம் பூஜயாமி
ஓம் ஸ்ரீ லம்போதராய நம: உதரம் பூஜயாமி
ஓம் ஸ்ரீ ஸ்தூலகண்டாய நம: வக்ஷஸ்தலம் பூஜயாமி
ஓம் ஸ்ரீ பாசஹஸ்தாய நம: பார்ச்வே பூஜயாமி
ஓம் ஸ்ரீ ஸ்கந்த ராஜாய நம: ஸ்கந்தௌ பூஜயாமி
ஓம் ஸ்ரீ ஹரஸுதாய நம: ஹஸ்தான் பூஜயாமி
ஓம் ஸ்ரீ ப்ரஹ்மசாரிணே நம: பாஹூன் பூஜயாமி
ஓம் ஸ்ரீ ஸுமுகாய நம: முகம் பூஜயாமி
ஓம் ஸ்ரீ ஏகதந்தாய நம: தந்தௌ பூஜயாமி
ஓம் ஸ்ரீ விக்னஹன்த்தரே நம: நேத்ரே பூஜயாமி
ஓம் ஸ்ரீ சூர்ப்பகர்ணாய நம: கர்ணௌ பூஜயாமி
ஓம் ஸ்ரீ பாலச்சந்த்ராய நம: பாலம் பூஜயாமி
ஓம் ஸ்ரீ நாகாபரணாய நம: நாஸிகாம் பூஜயாமி
ஓம் ஸ்ரீ சிரந்தனாய நம: சுபுகம் பூஜயாமி
ஓம் ஸ்ரீ கஜவக்த்ராய நம: வக்த்ரம் பூஜயாமி
ஓம் ஸ்ரீ ஸ்தூலோஷ்டாய நம: ஒஷ்டௌ பூஜயாமி
ஓம் ஸ்ரீ களந்மதாய நம: கண்டௌ பூஜயாமி
ஓம் ஸ்ரீ சிவப்ரியாய நம: சிர: பூஜயாமி
ஓம் ஸர்வ மங்கள சுதாய நம: சர்வாங்காணி பூஜயாமி
ஏகவிம்சதி பத்ர பூஜை
ஓம் உமாபுத்ராய நம: மாசீ பத்ரம் ஸமர்ப்பயாமி (மாசிப்பச்சை)
ஓம் ஹேரம்பாய நம: ப்ருஹதீ பத்ரம் ஸமர்ப்பயாமி (கண்டங்கத்திரி)
ஓம் லம்போதராய நம: பில்வ பத்ரம் ஸமர்ப்பயாமி (வில்வம்)
ஓம் த்விரதாநநாய நம: தூர்வாம் பத்ரம் ஸமர்ப்பயாமி (அருகம்புல்)
ஓம் தூமகேதவே நம: துர்த்தூர பத்ரம் ஸமர்ப்பயாமி (ஊமத்தை)
ஓம் ப்ருஹதே நம: பத்ரீ பத்ரம் ஸமர்ப்பயாமி (இலந்தை)
ஓம் அபவர்கதாய நம: அபாமார்க் பத்ரம் ஸமர்ப்பயாமி (நாயுருவி)
ஓம் த்வைமாதுராய நம: துளஸீ பத்ரம் ஸமர்ப்பயாமி (துளசி)
ஓம் சிரந்தநாய நம: சூத பத்ரம் ஸமர்ப்பயாமி (மாவிலை)
ஓம் கபிலாய நம: கரவீர பத்ரம் ஸமர்ப்பயாமி (அரளி)
ஓம் விஷ்ணுஸ்துதாய நம: விஷ்ணுக்ராந்த பத்ரம் ஸமர்ப்பயாமி (விஷ்ணுக்ராந்தி)
ஓம் அமலாய நம: ஆமலகீ பத்ரம் ஸமர்ப்பயாமி (நெல்லி)
ஓம் மஹதே நம: மருவக பத்ரம் ஸமர்ப்பயாமி (மருக்கொழுந்து)
ஓம் ஸிந்தூராய நம: ஸிந்தூர பத்ரம் ஸமர்ப்பயாமி (நொச்சி)
ஓம் கஜாநநாய நம: ஜாதீ பத்ரம் ஸமர்ப்பயாமி (ஜாதி மல்லி)
ஓம் கண்ட களந்மதாய நம: கண்டலீ பத்ரம் ஸமர்ப்பயாமி (வெள்ளெருக்கு)
ஓம் சங்கரீப்ரியாய நம: சமீ பத்ரம் ஸமர்ப்பயாமி (வன்னி)
ஓம் ப்ருங்கராஜத்கடாய ப்ருங்கராஜ பத்ரம் ஸமர்ப்பயாமி (கரிசிலாங்கண்ணி)
ஓம் அர்ஜுன தந்தாய நம: அர்ஜுன பத்ரம் ஸமர்ப்பயாமி (வெண்மருதை)

ஏகவிம்சதி புஷ்ப பூஜை
ஓம் பஞ்சாஸ்ய கணபதயே நம: புந்நாக புஷ்பம் ஸமர்ப்பயாமி (புன்னை)
ஓம் அர்க்கப்ரபாய கணபதயே நம: அர்க்க புஷ்பம் ஸமர்ப்பயாமி (எருக்கு)
ஓம் ஏகதந்தாய கணபதயே நம: தாடிமீ புஷ்பம் ஸமர்ப்பயாமி (மாதுளை)
ஓம் மஹா கணபதயே கணபதயே நம: மந்தார புஷ்பம் ஸமர்ப்பயாமி (மந்தாரை)
ஓம் விஷ்வக்ஸேநகணபதயே கணபதயே நம: வகுள புஷ்பம் ஸமர்ப்பயாமி (மகிழம்)
ஓம் ஆமோத கணபதயே நம: அம்ருணாளம் புஷ்பம் ஸமர்ப்பயாமி (வெட்டிவேர்)
ஓம் ப்ரமத கணபதயே கணபதயே நம: பாடலீ புஷ்பம் ஸமர்ப்பயாமி (பாதிரி)
ஓம் ருத்ர கணபதயே நம: த்ரோண புஷ்பம் ஸமர்ப்பயாமி (தும்பை)
ஓம் வித்யா கணபதயே நம: தர்த்தூர புஷ்பம் ஸமர்ப்பயாமி (ஊமத்தை)
ஓம் விக்ன கணபதயே நம: சம்பக புஷ்பம் ஸமர்ப்பயாமி (சண்பகம்)
ஓம் துரித கணபதயே நம: ரஸால புஷ்பம் ஸமர்ப்பயாமி (மாம்பூ)
ஓம் காமிதார்த்தப்ரத கணபதயே நம: கேதகீ புஷ்பம் ஸமர்ப்பயாமி (தாழம்பூ)
ஓம் ஸம்மோஹ கணபதயே நம: மாதவீ புஷ்பம் ஸமர்ப்பயாமி (முல்லை)
ஓம் விஷ்ணு கணபதயே நம: சம்யாக புஷ்பம் ஸமர்ப்பயாமி (கொன்றை)
ஓம் ஈச கணபதயே நம: அர்க்க புஷ்பம் ஸமர்ப்பயாமி (எருக்கு)
ஓம் கஜாஸ்ய கணபதயே நம: கல்ஹார புஷ்பம் ஸமர்ப்பயாமி (செங்கழுநீர்)
ஓம் ஸர்வஸித்தி கணபதயே நம: ஸேவந்திகா புஷ்பம் ஸமர்ப்பயாமி (செவ்வந்தி)
ஓம் வீர கணபதயே நம: பில்வ புஷ்பம் ஸமர்ப்பயாமி (வில்வம்)
ஓம் கந்தர்ப்ப கணபதயே நம: கரவீர புஷ்பம் ஸமர்ப்பயாமி (அரளி)
ஓம் உச்சிஷ்ட கணபதயே நம: குந்த புஷ்பம் ஸமர்ப்பயாமி (முல்லை)
ஓம் ப்ரஹ்ம கணபதயே நம: பாரிஜாத புஷ்பம் ஸமர்ப்பயாமி (பவழமல்லி)
ஓம் ஞான கணபதயே நம: ஜாதீ புஷ்பம் ஸமர்ப்பயாமி (ஜாதிமல்லி)
ஏகவிம்சதி தூர்வாயுக்ம பூஜை
தூர்வா என்றால் அருகம்புல். யுக்மம் என்றால் இரட்டை, ஆகவே இரண்டிரண்டு அருகம்புல்லாக கொண்டு பூஜிக்க வேண்டும்.
ஓம் கணாதிபாய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி
ஓம் பாசாங்குசதராய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி
ஓம் ஆகுவாஹநாய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி
ஓம் விநாயகாய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி
ஓம் ஈசபுத்ராய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி
ஓம் ஸர்வஸித்திப்ரதாய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி
ஓம் ஏகதந்தாய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி
ஓம் இபவக்த்ராய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி
ஓம் மூஷிகவாஹநாய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி
ஓம் குமாரகுரவே நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி
ஓம் கபிலவர்ணாய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி
ஓம் ப்ரஹ்மசாரிணே நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி
ஓம் மோதகஹஸ்தாய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி
ஓம் ஸுரச்ஷ்ரேஷ்ட்டாய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி
ஓம் கஜநாஸிகாய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி
ஓம் கபித்தபலப்ரியாய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி
ஓம் கஜமுகாய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி
ஓம் ஸுப்ரஸந்நாய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி
ஓம் ஸுராக்ரஜாய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி
ஓம் உமாபுத்ராய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி
ஓம் ஸ்கந்தப்ரியாய நம: தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி


ஸ்ரீ விநாயக அஷ்டோத்தர சத நாமாவளி
ஓம் விநாயகாய நம:
ஓம் விக்னராஜாய நம:
ஓம் கௌரீபுத்ராய நம:
ஓம் கணேச்வராய நம:
ஓம் ஸ்கந்தாக்ரஜாய நம:
ஓம் அவ்யயாய நம:
ஓம் பூதாய நம:
ஓம் தக்ஷாய நம:
ஓம் அத்யக்ஷாய நம:
ஓம் த்விஜப்ரியாய நம: 10
ஓம் அக்நிகர்பச்சிதே நம:
ஓம் இந்த்ரஸ்ரீப்ரதாய நம:
ஓம் வாணீப்ரதாய நம:
ஓம் அவ்யயாய நம:
ஓம் ஸர்வஸித்திப்ரதாய நம:
ஓம் சர்வதநயாய நம:
ஓம் சர்வரீப்ரீயாய நம:
ஓம் ஸர்வாத்மகாய நம:
ஓம் ஸ்ருஷ்டிகர்த்ரே நம:
ஓம் தேவாய நம: 20
ஓம் அநேகார்ச்சிதாய நம:
ஓம் சிவாய நம:
ஓம் சுத்தாய நம:
ஓம் புத்திப்ரியாய நம:
ஓம் சாந்தாய நம:
ஓம் ப்ரம்மசாரிணே நம:
ஓம் கஜாநநாய நம:
ஓம் த்வைமாத்ரேயாய நம:
ஓம் முனிஸ்துதாய நம:
ஓம் பக்தவிக்னவிநாசநாய நம: 30
ஓம் ஏகதந்தாய நம:
ஓம் சதுர்பாஹவே நம:
ஓம் சதுராய நம:
ஓம் சக்திஸம்யுதாய நம:
ஓம் லம்போதராய நம:
ஓம் சூர்ப்பகர்ணாய நம:
ஓம் ஹரயே நம:
ஓம் ப்ரஹ்மவிதுத்தமாய நம:
ஓம் காலாய நம:
ஓம் க்ரஹபதயே நம: 40
ஓம் காமினே நம:
ஓம் ஸோமஸூர்யாக்நி லோசநாய நம:
ஓம் பாசாங்குசதராய நம:
ஓம் சண்டாய நம:
ஓம் குணாதீதாய நம:
ஓம் நிரஞ்ஜநாய நம:
ஓம் அகல்மஷாய நம:
ஓம் ஸ்வயம்ஸித்தாய நம:
ஓம் ஸித்தார்ச்சித பதாம்புஜாய நம:
ஓம் பீஜபூரபலாஸக்தாய நம: 50
ஓம் வரதாய நம:
ஓம் சாச்வதாய நம:
ஓம் க்ருதினே நம:
ஓம் த்விஜப்ரியாய நம:
ஓம் வீதபயாய நம:
ஓம் கதினே நம:
ஓம் சக்ரிணே நம:
ஓம் இக்ஷூசாபத்ருதே நம:
ஓம் ஸ்ரீதாய நம:
ஓம் அஜாய நம:
ஓம் உத்பலகராய நம: 60
ஓம் ஸ்ரீபதயே நம:
ஓம் ஸ்துதிஹர்ஷிதாய நம:
ஓம் குலாத்ரீபேத்த்ரே நம:
ஓம் ஜடிலாய நம:
ஓம் கலிகல்மஷநாசநாய நம:
ஓம் சந்த்ரசூடாமணயே நம:
ஓம் காந்தாய நம:
ஓம் பரஸ்மை நம:
ஓம் ஸ்தூலதுண்டாய நம:
ஓம் அக்ரண்யே நம: 70
ஓம் தீராய நம:
ஓம் வாகீசாய நம:
ஓம் ஸித்திதாயகாய நம:
ஓம் தூர்வாபில்வப்ரியாய நம:
ஓம் அவ்யக்தமூர்த்தயே நம:
ஓம் அத்புதமூர்த்திமதே நம:
ஓம் பாபஹாரிணே நம:
ஓம் ஸமாஹிதாய நம:
ஓம் ஆச்ரிதாய நம:
ஓம் ஸ்ரீகராய நம: 80
ஓம் ஸௌம்யாய நம:
ஓம் பக்தவாஞ்சித தாயகாய நம:
ஓம் சாந்தாய நம:
ஓம் கைவல்யஸுகதாய நம:
ஓம் ஸச்சிதானந்த விக்ரஹாய நம:
ஓம் ஜ்ஞானிநே நம:
ஓம் தயாயுதாய நம:
ஓம் தாந்தாய நம:
ஓம் ப்ரஹ்மத்வேஷ விவர்ஜிதாய நம:
ஓம் ப்ரமத்த தைத்ய பயதாய நம: 90
ஓம் ஸ்ரீகண்ட்டாய நம:
ஓம் விபுதேச்வராய நம:
ஓம் ரமார்ச்சிதாய நம:
ஓம் விதயே நம:
ஓம் நாகராஜயஜ்ஞோபவீதவதே நம:
ஓம் ஸ்த்தூலகண்ட்டாய நம:
ஓம் ஸ்வயம்கர்த்ரே நம:
ஓம் ஸாமகோஷப்ரியாய நம:
ஓம் சைலேந்த்ர தநுஜோத் ஸங்க கேலநோத்ஸுக மானஸாய நம: 100
ஓம் ஸ்வலாவண்யஸுதாஸார ஜிதமன்மத விக்ரஹாய நம:
ஓம் ஸமஸ்த ஜகதாதாராய நம:
ஓம் மாயினே நம:
ஓம் மூஷிகவாஹநாய நம:
ஓம் ஹ்ருஷ்டாய நம:
ஓம் த்வஷ்டாய நம:
ஓம் ப்ரஸன்னாத்மநே நம:
ஓம் ஸர்வஸித்தி ப்ரதாயகாய நம: 108

ஓம் ஸித்திவிநாயகாய நம:
நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி

விநாயக அஷ்டோத்திரம் ஸம்பூர்ணம்


உத்தராங்க பூஜை

தசாங்கம் குக்குலோபேதம் ஸுகந்தம் ச மனோஹரம்
தூபம் தாஸ்யாமி தேவேச க்ருஹாண த்வம் கஜாநந
ஸித்தி விநாயகாய நம: தூபமாக்ராபயாமி

ஸாஜ்யம் த்ரிவர்த்தி ஸம்யுக்தம் வஹ்நிநா யோஜிதம் மயா
க்ருஹாண மங்களம் தீபம் ஈச புத்ர நமோஸ்து தே
ஸித்தி விநாயகாய நம: தீபம் தர்சயாமி

(தரையில் சிறிது தண்ணீர் தெளித்து சுத்தம் பண்ணிக் கொண்டு நைவேத்தியங்களை நிவேதனம் செய்யவும்)
ஓம் பூர்புவஸ்ஸுவ: பர்கோ தேவஸ்ய தீமஹி, தியோ யோந: ப்ரசோதயாத் - தேவஸவித: ப்ரஸுவ, ஸத்யம் த்வர்த்தேன பரிஷிஞ்சாமி.

அம்ருதமஸ்து, அம்ருதோபஸ்தரணமஸி ஓம் ப்ராணாய ஸ்வாஹா ஓம் அபானாய ஸ்வாஹா ஓம் வ்யாநாய ஸ்வாஹா ஓம் உதானாய ஸ்வாஹா ஓம் ஸமாநாய ஸ்வாஹா ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா

ஸ்ரீ ஸித்தி விநாயகாய நம: சால்யான்னம், க்ருதகுட பாயஸம், மாஷாபூபம், குடாபூபம், லட்டுகம், மோதகம், நாரிகேளகண்டம், கதளீஃபலம், பத்ரீஃபலம், ஜம்பூஃபலம், பீஜபூரஃபலம், ஏதத் ஸர்வம், அம்ருதம், மஹா நைவேத்யம் நிவேதயாமி – மத்யே மத்யே பானீயம் ஸமர்ப்பயாமி

ஐநவேத்யாநந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி
அம்ருதாபிதாநமஸி – உத்தராபோசநம் ஸமர்ப்பயாமி

பூகீபல ஸமாயுக்தம் நாகவல்வீ தளைர்யுதம்
கற்பூர சூர்ண ஸம்யுக்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம்
ஸித்தி விநாயகாய நம: தாம்பூலம் ஸமர்ப்பயாமி

நீராஜநம் நீரஜஸ்கம் கற்பூரேண க்ருதம் மயா
க்ருஹாண கருணாராசே கணேச்வர நமேஸ்துதே

ஸித்தி விநாயகாய நம: கற்பூர நீராஜநம் தர்சயாமி
நீராஜநாநந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி

ஜாதீ சம்பக புன்னாக மல்லிகா வகுளாதிபி:
புஷ்பாஞ்ஜலிமி ப்ரதாஸ்யாமி க்ருஹாண த்விரதாநந
ஸித்தி விநாயகாய நம: மந்த்ர புஷ்பம் ஸமர்ப்பயாமி

யோபாம் புஷ்பம் வேத, புஷ்பவான் ப்ரஜாhன் பசுமாந் பவதி
சந்த்ரமா வா அபாம் புஷ்பம், புஷ்பவாந் ப்ரஜாவாந் பசுமாந் பவதி
ஸித்தி விநாயகாய நம: மந்த்ர புஷ்பம் ஸமர்ப்பயாமி

யானி கானி ச பாபானி ஜந்மாந்த்ர க்ருதானி ச
தானி தானி விநச்யந்தி ப்ரதக்ஷிண பதே பதே (பிரதக்ஷிணம் செய்யவும்)

நமோ நமோ கணேசாய நமஸ்தே விச்வரூபிணே
நிர்விக்னம் குரமே கார்யம் நமாமி த்வாம் கஜாநந
அகஜாநந பத்மார்க்கம் கஜாநந மஹர்நிசம்
அநேகதந்தம் பக்தாநாம் ஏகதந்தம் உபாஸ்மஹே (நமஸ்காரம் செய்யவும்)

விநாயக வரம் தேஹி மஹாத்மன் மோதகப்ரிய
அவிக்னம் குரு மே தேவ ஸர்வகார்யேஷு ஸர்வதா (வரம் வேண்டுதல்)

சத்ரம் ஸமர்ப்பயாமி (குடை அளித்தல்)
சாமரம் ஸமர்ப்பயாமி (சாமரத்தால் வீசுதல்)
வ்யஜநம் ஸமர்ப்பயாமி (விசிறியால் வீசுதல்)
கீதம் ஸ்வராவயாமி (பாட்டுப் பாடுதல்)
ந்ருத்யம் தர்சயாமி (நடனம் புரிதல்)
வாத்யம் கோஷயாமி (வாத்யம் வாசித்தல்)
ஆந்தோளிகாம் ஸமர்ப்பயாமி (ஊஞ்சலில் ஆட்டுதல்)
ஸமஸ்த ராஜோபசாராந் ஸமர்ப்பயாமி
அர்க்யம்
அத்ய பூர்வோக்த ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் சதுர்த்யாம் சுபதிதௌ பரமேச்வர ப்ரீத்யர்த்தம் ஸித்தி விநாயக பூஜாபல ஸம்பூர்ணதா ஸித்யர்த்தம் க்ஷீரார்க்ய ப்ரதானம் உபாயன தானஞ்ச கரிஷ்யே

பாலில் ஜலம் கலந்து கொண்டு கீழ்கண்டபடி அர்க்யம் விடவும்.

(1) கௌர்யங்கமல ஸம்பூத ஜ்யேஷ்டஸ்வாமிந் கணேச்வர க்ருஹாணார்க்யம் மயா தத்தம் கஜவக்த்ர நமோஸ்துதே, ஸித்தி விநாயகாய நம: இதமர்க்யம் இதமர்க்யம் இதமர்க்யம் (3 தடவை நீர் விடவும்)
(2) அர்க்யம் க்ருஹாண ஹேரம்ப ஸர்வ ஸித்தி ப்ரதாயக: விநாயக மயா தத்தம் புஷ்பாக்ஷத ஸமந்விதம் ஸித்தி விநாயகாய நம: இதமர்க்யம் இதமர்க்யம் இதமர்க்யம் (3 தடவை நீர் விடவும்)
(3) விநாயக நமஸ்தேஸ்து கந்த புஷ்பாக்ஷதைர் யுதம் க்ருஹாணார்க்யம் மயா தத்தம் ஸர்வாபீஷ்ட ப்ரதோ பவ ஸித்தி விநாயகாய நம: இதமர்க்யம் இதமர்க்யம் இதமர்க்யம் (3 தடவை நீர் விடவும்)
ஆனேன அர்க்ய ப்ரதானேன பகவான் ஸர்வாத்மக: தத் ஸர்வம் ஸித்தி விநாயக: ப்ரீயதாம்

தத்ஸத் ப்ரஹ்மார்ப்பணமஸ்து
க்ஷமா பிரார்த்தனை
புஷ்பம் அக்ஷதை எடுத்துக் கொண்டு:

காயேன வாசா மனஸேந்திரியைர்வா
புத்யாத்மனா வா ப்ரக்ருதே: ஸ்வபாவாத்
கரோமியத் யத்ஸகலம் பரஸ்மை
ஸ்ரீமன் நாராயணாயேதி ஸமர்ப்பயாமி

மந்த்ர ஹீனம் க்ரியாஹீனம் பக்திஹீநம் ஸீரேச்வர
யத்பூஜிதம் மயாதேவ பரிபூர்ணம் தத் அஸ்துதே
த்வமேவ மாதாச த்வமேவ த்வமேவ பந்துஸ்ச ஸகா த்வமேவ
த்வமேவ வித்யா த்ரவிணம் த்வமேவ த்வமேவ ஸர்வம் மம தேவதேவ
ஆவாஹனம் ந ஜானாமி நஜானாமி விஸர்ஜனம்
பூஜாம் சைவ ந ஜானாமி க்ஷம்யதாம் ஸ்ரீ ஸுதர்சனம்
அனையா பூஜயா ஸ்ரீ ஸித்தி விநாயக: ப்ரீயதாம்
ஓம் தத் சத் ஸ்ரீ ப்ரம்மார்ப்பணமஸ்து


உபாயன தானம்

மஹாகணபதி ஸ்வரூபஸ்ய ப்ராஹ்மணஸ்ய இதமாசனம், அமீதே கந்தா: ஸகலாராதன: ஸ்வர்ச்சிதம்.
(தாம்பூலம் தக்ஷிணை, வாயனம், ஆகியவற்றை கீழ்க்கண்ட சுலோகத்தை சொல்லித் தரவேண்டும்.)

கணேச: ப்ரதிக்ருஹ்ணாதி கணேசோ வை ததாதி ச
கணேசஸ் தாரகோ த்வாப்யாம் கணேசாய நமோ நம:

இதம் உபாயனம் ஸதக்ஷிணகம் ஸதாம்பூலம்
மஹாகணபதி ஸ்வரூபாய ப்ரம்மணாய
துப்யம் அஹம் ஸம்ப்ரததே நமம.

நமஸ்காரம் செய்யவும்.

புனர் பூஜை
மண் பிள்ளையாரை கிணற்றிலோ ஆற்றிலோ கடலிலோ சேர்க்கும் வரை, முக்காலமும்

ஓம் கணானாம் த்வா கணபதிகும் ஹவாமஹே
கவிம் கவீனாம் உபமஸ்ர வஸ்தமம்
ஜ்யேஷ்ட்ட ராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பதி ஆன:
ஸ்ருண்வன் ஊதிபி: ஸீதஸாதனம்.
ஓம் பூர் புவஸ்ஸுவரோம்.
அஸ்மாத் பிம்பாத் ஸுமுகம் ஸ்ரீ மஹாகணபதிம் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி.
சோபனார்த்தே க்ஷேமாய புனராகமனாய ச.

(என்று சொல்லி தீப தூப ஆராதனை காட்டி, ஆரத்தி எடுத்து விநாயகரை நீர்நிலையில் சேர்த்து விடவேண்டும்).



விநாயகர் சதுர்த்தி சுபமாக பிளையார் சுழி போட்டு ஆரம்பித்தது.