ஞாயிறு, 10 மே, 2015

அம்மாவை வணங்காது உயர்வில்லையே..!


 Image result for indian mother

பெற்றவள் நீ எனக்கென்றும்
நேரில் கிடைத்திட்ட தெய்வ தரிசனம்

நினைவு தெரிந்த நாளாய்
என்னுள் உறைந்து உணர்த்தும் பரப்பிரம்மம்

கோபுரத்துக் கலசம் போலுயர்ந்த 
உந்தன் நிலை எனக்கெட்டாத அதிசயம் 
ஆயிரம் ஜென்மங்கள் தொடர்ந்து 
செய்திட்ட மாதவமே உன்னோடு எந்தன் சம்பந்தம்
பெற்ற குழந்தைகள் அத்தனைக்கும்
சூரியகிரணமாய் பகிர்ந்தளிக்கும் உந்தன் பக்குவம்
அன்பையும் கண்டிப்பையும் ஒருங்கெனவே 
காட்டி அம்மையப்பனாகத் மாறும் சாத்தியம்..
பசியையும் துன்பத்தையும் காணவிடாது
உனக்குள் அழுத்திக் கொண்ட தியாகச்சின்னம்

கஷ்டத்திலும் சிரித்த முகம் மாறாமல்
நல்லதையே போதித்த இன்னொரு போதிமரம்

நாங்கள்  வண்ண ஆடையில் வலம்வர 
உந்தன் எண்ணம்  எங்களோடு  உலாவரும்
ஆனந்தமோ ஆர்ப்பரிப்போ ஏதுமின்றி
கிடைத்ததை ஏற்று வாழும் நீயே வெற்றியின் வடிவம்
பருவகாலங்கள் கடந்து செல்ல எங்களின்
நிகழ்கால மாற்றங்களைத் தாங்கும் நீ அன்புமேகம்
பார்த்திருந்தபோதே தலையுயர்ந்து நின்றபோதிலும்
குழந்தையாய் எண்ணி நேசிப்பது நீ மாத்திரம்

கூட்டைவிட்டு  நாங்கள் ஆனந்தமாய் பறந்திட
தனிமையில் அழுமே ஏக்கத்தில் உன்னிதயம் 

அன்போடு சோறூட்டியே  பழக்கப்பட்ட நீ 
ஊட்டிவிட எவருமின்றி சோர்வாய் பாவம் 

இன்றாவது  இவள்  வருவாள்  என்று வழிமேல்
வைத்த விழியாய் காலம் நோக்கும் கர்மயோகம்

கைபேசி என்றொரு மந்திரப்பாவை
இல்லையேல் நான்  வெறும்  நடமாடும் எந்திரம்

வாழைபோல் உந்தன்  இயல்பு இனி
யார் பெறுவார் இதுபோல் அருமருந்து
தாயெனும் சொல்லுக்குள் இத்தரணியே
அடங்கிடும் அதிசய ஆகர்ஷண மந்திரம்
வளர்ந்த பின்னே பிரிந்திட்டாலும்
எண்ணத்தில் எந்நாளும் வாழவாழ்த்தும் இருதயம்

என்பெயர் அழைத்தே மறந்து போனதுன்  
பெயரை நீயறியாது அழைக்கும்  எனதுள் மண்டபம்

மூப்பும் திரையும் உன்னை மென்று விழுங்கினாலும்
உந்தன் குரல் சொல்வதெல்லாம் அனுபவ வேதாந்தம்

கற்க வேண்டும் நான் கூடு விட்டுக் கூடு பாய
ககன மார்க்கத் தந்திரங்கள் உனக்காக மாத்திரம்

அம்மா அம்மா எனவே காகமெனக் கரையும்
மனமிங்கு தேடுது வாழ்வின் ஜீவாதாரம்

இமைக்கும் விழிக்குமான தூரம் நமது
இருந்தும் காணத் தடுக்குது இகபரம்

காலத்தால் நானும் ஓர் தாய் ஆயினும்
உள்ளத்தில் உன் காலடியில் உருகும் மனம்
உருளும் பூமியில் மாறிவரும் பிறவிகளில்
மறுபடி உனக்குள்ளே எடுப்பேன் தேகம்
தோன்றியதை எழுதியதில் ஆணித்தரம்
சரியென்றால் நீ தருவாய் தலையசைப்பில் சம்மதம்.

1 கருத்து:

  1. படமும் ஆக்கமும் அருமை.

    ஒவ்வொரு வரியிலும் தங்களின் தாய்மை உணர்வுடன் கூடிய தாய்ப்பாசம் மிளிர்கிறது.

    பாசம் மிகுந்தத் தங்களைப் பெற்றதால் தங்கள் தாய் மிகவும் பெருமை கொள்ளலாம்.

    எத்தனை வயதானாலும் தாய் தாய்தான். நாம் அவர்களுக்கு என்றும் குழந்தை மட்டுமே.

    பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு