ஞாயிறு, 31 மார்ச், 2013

கலியுகத் தாயின் கீதா உபதேசம்..!



காலேஜுக்குள் நுழைந்ததும்  காலேஜ் பிரின்சிபால்  வேதவல்லிக்கு கிலி பிடித்துக் கொண்டது. அதற்கேற்றார்போல அவளது அலுவலக அறை வாசலில் மாணவர்கள்  'கச முச ' வென்று பேசிக் கொண்டிருந்தார்கள்.. போச்சுடா ...!இன்னைக்கு என்ன பிரச்சனையை சந்திக்க வேண்டி வருமோ? என்று நினைத்த போதே லேசாகத் தலை வலிக்க ஆரம்பித்தது  வேதாவுக்கு. 

இவள் வருவதைக் கண்ட மாணவர்கள், நிசப்தமாகி அப்படியே லேசான தயக்கத்துடன்..."மேடம்.. ஒரு பெட்டிஷன்" என்று நீட்டவும்.

என்ன விஷயம்...? சொல்லுங்க என்று கேட்டுக் கொண்டே மாணவர்களைப் பார்க்கிறாள்.
 
இந்த இலங்கைத் தமிழ் பிரச்சனையை முன்னிட்டு நாங்க இன்று உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப் போகிறோம்...மேடம்...நம்ம காலேஜ் வாசல்ல...அதான்.

ம்ம்ம்...நீங்கள்ளாம்  "ஆசிரியர் பயிற்சி பெறும் மாணவர்கள்..  நீங்கள் அடுத்த வருஷம் பல மாணவரை மேய்க்கப் போகிறவர்.." இதிலெல்லாம் நீங்கள் தலையிடுவது சரியில்லை. நான் பிறப்பதற்கும் முன்னாடி ஆரம்பித்த இந்த இலங்கைப் போராட்டம் உங்கள் ஒருநாள் உண்ணாவிரதத்தால் தீர்ந்து விடாது.மேலும்....என் பேச்சை மீறி ஏதாவது போராட்டத்தில் ஈடுபட்டால்...அடுத்த மாதம் பரீட்சை வருது நினைவு இருக்குல்ல.. உண்ணா விரதத்தில் யாரெல்லாம் போராட்டம் செய்வாரோ அவர்களுக்கு

நான்  ஹால் டிக்கெட் தர மாட்டேன்...பி கேர்ஃ புல் ..என்று லேசாக சிரித்தபடியே .எல்லாரும் அவங்கவங்க கிளாஸ் ரூமுக்குப் போங்க...! ஸ்ட்ரைக் எல்லாம் ஒண்ணும் கிடையாது....இதைச்   சொல்லிவிட்டு தன்  வேலையில் மும்முரமாவதைக் கண்ட மாணவர்கள் தயங்கித் தயங்கி  கலைந்து செல்கிறார்கள்.வேதாவுக்கு மூச்சு வந்தது.

அப்போது அவள் மனம் வேறு கல்லூரியில் படிக்கும் அவளது  மகன் ஆனந்தை நினைத்தது. அவனும் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கிறான். அடிக்கடி ஏதாவது ஒரு காரணத்திற்காக கல்லூரி மூடப்படும். பத்து நாள் கல்லூரிப் பாடங்கள் நடக்கும்,  பிறகு ஒரு வாரம் மூடிக் கிடக்கும்.  ஏதாவது போராட்டம் நடந்து  கொண்டே கல்லூரி முடங்கும்.. நிலத்தின் மேல் கடன் வாங்கி, இவனுக்கு 40,000 ரூபாய் கப்பம் கட்டி கல்லூரியில் சேர்த்திருக்கு. .இன்று என்னாச்சோ..? நினைத்துக் கொண்டே கைபேசியை எடுத்து அவனைத் தொடர்பு கொள்ள முயன்றாள் .

"நீங்கள் தொடர்பு கொள்ளும் நபர் தற்சமயம் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளதால் சிறிது நேரம் கழித்து மீண்டும் தொடர்பு கொள்ளவும்.."

பழையபடி அதே வசனம்.....கேட்டுக் கேட்டு அலுத்துப் போயாச்சு....ஆனந்த்..எப்போடா தொடர்பு எல்லைக்கு உள்ளே வருவே...?.என்று மனம் தவியாய்த் தவித்தது. மகனை.அவள் நினைத்துக் கொண்டிருக்கும் போதே ஆனந்திடம் இருந்து அழைப்பு "அதில் காலேஜ் காலவரையறையின்றி மூடியாச்சு..ஏதோ இலங்கைப் பிரச்சனையாம்.!.அம்மா நான் வீட்டுக்கு வர லேட்டாகும்.!


அட கடவுளே !.....நீ ஏண்டா இதிலெல்லாம் தலையிடறே.? இதுக்கா உன்னை காலேஜுக்கு சேர்ந்திருக்கு?...நீ பத்திரமா  வீடு வந்து சேரு...வேதவல்லி பேசிக் கொண்டிருக்கும் போதே அழைப்பு துண்டிக்கப் படுகிறது. ஆனந்த் காலேஜை விட்டு நல்லபடியா வீடு வந்து சேரணுமே என்று கடவுளை வேண்டிக் கொண்டே கைபேசியை அணைக்கிறாள்.

வேதவல்லிக்கு அன்று காலேஜில் இருப்புக் கொள்ளாத நிலை..தானும் காலேஜுக்கு விடுப்பு அறிவித்துவிட்டு வீடு வந்து சேருகிறாள். ஆனந்த் இன்னும் வரவில்லையே என்ற கவலை மனம் முழுதும் பரவ...நாமே ஒரு தடவை அவனது காலேஜுக்குச் சென்று பார்த்துவிட்டு அப்படியே அவனையும் கையோட  அழைத்து வந்து விடலாம் என்று ஒரு துணிச்சல் தோன்றவும் தனது காரைக் கிளப்பிக் கொண்டு மகனின் காலேஜை நோக்கிப் புறப்படுகிறாள்.

வழியெல்லாம் பெட்டிக்கடை முன்பு அன்றைய செய்தித் தாளின் தலையங்கச் செய்தியாக  "மாணவர் உண்ணாவிரதப் போராட்டம்" முழுக் கடையடைப்பு" அனைத்துக் கல்லூரியும் காலவரையறையின்றி மூடல் " என்று கொட்டை கொட்டையாக எழுதி காற்றில் ஆடிக் கொண்டிருந்தது...கூடவே.... வழக்கம் போல "மாணவர்கள் பலி"  "சிறுமி பலாத்காரம்" "மூதாட்டியின் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு  அரை பவுன் திருட்டு" என்றெல்லாம் தமிழ் நாட்டின் மானத்தை தொங்க விட்டு அது காற்றில்  பறந்து கொண்டிருந்தது.
ஆனாலும் இந்த  அரசியல் விஷயத்துல கல்லூரி மாணவர்களைத் தூண்டி விடுவது சமூகக் குற்றம். இதை நாம சும்மா விடக் கூடாது என்று நினைத்துக் கொண்டே காலேஜ் வரை வந்து சேர்ந்தாள் வேதவல்லி. வாசலில் பெரிய பானர் கட்டி....அதன் கீழே கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் என்று அமர்ந்து கொண்டிருந்ததைப் பார்த்ததும்....இதுகளுக்கெல்லாம் என்ன தெரியும்? யாரோ சொன்னதும் அப்படியே செய்யத் தான் தெரியும் ..ஏன் எதற்கு என்ற கேள்வி கூட கேட்க தோன்றாதோ? அந்தக் கூட்டத்தின் நடுவே ஆனந்தும்  அமர்ந்திருந்த காட்சியைக் கண்டதும்..."தானாடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பது போல உள்ளுக்குள் துடித்துப் போனாள் வேதவல்லி.

இத்தனை வருஷத்தில் ஒரு நாளாவது அவனை நாம் பட்டினி போட்டிருப்போமா? ...இப்போப் பாரேன்..நிலைமையை. என்று  நம்ப முடியாதவளாக...திகைத்தாள் .

கூட்டத்தில் மைக்கில் யாரோ பேச ஆரம்பிக்கிறார்கள்.அதில் ஏதோ அரசியல் கட்சி முன்னோடியாக இருப்பது மட்டும் புரிகிறது. "போராடுவோம்...நீதி கிடைக்கும் வரை போராடுவோம்...இல்லையேல் ஆயுதத்தைக் கையிலடுப்போம் ...மாணவர்களின் சக்தி சுனாமியைப் போன்றது....நீதி கேட்கப் புறப்பட்டு விட்டோம் இனி தயங்க மாட்டோம்... இறுதிவரை உண்ணாவிரதமிருந்து போராடி ஜெயிப்போம்......"இலங்கையில் நீதி கிடைக்கத் தனிப்பட்ட சர்வதேச விசாரணை அவசியம்"  குரல் கொடுக்க இங்கிருந்தே எங்கள் படை..அதிரும்...மாணவர்களின் கடல் போன்ற அணி திரட்டு.." என்று பேசிக் கொண்டே போகிறார் அவர்.

இன்னோரு மாணவனின் முதிராத குரல்  "கைது செய்..கைது செய்....ராஜபாச்சை கைது செய்.." என்று கத்த முயற்சி செய்து கொண்டிருந்தது.

இதைக் கேட்ட வேதவல்லிக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.....'ஒரு பெயரைக் கூடச் சரியாக உச்சரிக்கத் தெரியவில்லை...பாச்சை...பல்லி ...பெருச்சாளின்னு '...சின்னப் பசங்களை வைத்துக் கொண்டு பெரிய விளையாட்டு விளையாடுறாங்க....!
சும்மா இருக்குற சங்கை எப்படி ஊதி ஊதி ஊரைக் கூட்டறான் பாரேன்..இந்த மாதிரிப் பேச்சாலத் தான் நாடே கெட்டு நாசமாப் போச்சு. இப்போ படிச்சிட்டிருக்கிற பசங்களைத் தூண்டி விட்டு மாணவர்கள் என்றாலே என்னவோ அராஜகம் செய்ய அத்தனைத் தகுதியும் ரெடிமேடா இருக்கிறாப்பல அல்லவா  இருக்கு இவங்க  சொல்றது. பெத்த வயிறு பத்திண்டு எரியறது.எத்தனை மாணவர்கள்...!

அவா அவா  வாயைக் கட்டி வயித்தைக் கட்டி., வீட்டை, நகைகளை அடமானம் வைத்து , கடனை வாங்கி ..லட்ச லட்சமா பணத்தைக் கொட்டி காலேஜ் காலேஜா பார்த்து அலைஞ்சு திரிஞ்சு கொண்டு வந்து சேர்த்தா....படிச்சு முடிச்சுட்டு குழந்தைகள் வெளில நல்ல படியா வந்து ஒரு வேலையில்  உட்காரும்...நாம, பெத்தவா கொஞ்சம் மூச்சு விடலாம்னு நினைச்சா...இதென்னடா வம்பாப் போச்சு.? அரசியல்ல இவங்களைக் கோத்து விட்டு குளிர் காயும்  கையாலாகாத் தனம்..

வேதவல்லியால்  இதை எல்லாம் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியவில்லை. அவளுக்குள் எழுந்த நெருப்புப் பொறி இந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்க தன்னாலும் முடியும் என்ற முடிவோடு...அங்கு பேசிக் கொண்டிருந்தவரிடம் சென்று...."ஐயா....கொஞ்சம் அந்த மைக்கைத் தரீங்களா.....இத்தனை நேரம் நீங்க பேசினீங்க.....நாங்க கேட்டோம்...இப்போ நாங்க....சமுதாயம்...தாய்க்குலம்  பேசப் போகுது....கொஞ்சம் நீங்களும்..இங்க கூடியிருக்கும் மாணவர்களும் கேட்க வேண்டும்...என்று கணீரென்று சொல்லியபடியே மைக்கை கைப் பற்றுகிறாள்...

என்ன தான் பேசப் போறாங்க.என்ற ஆவலில் மைக் கைமாறுகிறது. கூட்டத்திலும் அமைதி நிலவுகிறது...அருகில் போலீஸ் இருக்கும் பாதுகாப்பும்  , இந்தக்  கூட்டத்தில் ஆனந்த் இருக்கிறான் என்ற தைரியமும் ஒன்று சேர..தொண்டையைக் கனைத்துக் கொண்டு பேச ஆரம்பிக்கிறாள் வேதவல்லி..அவளது குரல் கணீரென்று ஆலயமணி போல அங்கங்கு வைத்திருக்கும் அத்தனை குழல் பெருக்கி வழியாக சென்று கொண்டே ஒவ்வொருவரின் இதயத்தையும் தொடத் தயாராகிறது.



"அன்பான மாணவர்களே...! "

நான் ஒரு தாயாக உங்கள் முன் பேசுகிறேன்.  உங்கள் மீதுள்ள பேரன்பால் பேசுகிறேன்.  

உங்கள் சக்தி  மாபெரும் சக்தி எண்ணிக்கை அளவில்.  அதை அரசியவாதிகள் நன்கு அறிவர் !  ஆனால் படிக்கிற காலத்தில் அதை ஆக்க சக்தியாக உங்களின் சுய முன்னேற்றத்திற்கு நீங்கள் உபயோகப் படுத்துங்கள்.  அரசியல்வாதிகள் அதை அழிவு சக்தியாக திருப்பப் பார்க்கிறார்

ஒரு சிறிய பிரச்சனையை ஒன்றுமில்லாமல் செய்ய அதைவிடப் பெரிய பிரச்சனையால் தான் முடியும். அது போலத் தான் இப்போது உங்களைத் யாரோ தூண்டி விட்டு பரீட்சைகள் நெருங்கும் இந்த நேரத்தில் படிப்பதை நிறுத்திவிட்டு இப்படி சமுதாயச் சிக்கலில் உங்களை மாட்டி வைத்து வேடிக்கை பார்க்கிறார்கள்.

இதில் கலந்து கொண்டால் தற்காலிகமாக நீங்கள் உங்கள் ப்ராஜெக்ட் வொர்க், லேப்,டெஸ்ட்,,ரெகார்ட் வொர்க்,இதிலிருந்து விடுதலை கிடைக்கும் என்ற  எண்ணம் மட்டும் உங்களுக்கு இருக்கும். அதையும் தாண்டி கல்லூரி  விடுமுறை.....காலவரையற்ற விடுமுறை...! இதில் யாருக்கு என்ன லாபம்.?.விடுமுறை உங்களுக்கு என்ன சுகம் தந்தது..? வேகாத வெயிலில் பசி என்றால் என்ன என்று தெரியாத நீங்கள் எல்லாரும் இப்போது உண்ணாவிரதம் என்ற பேரில் பசியோடு உலர்ந்து கொண்டிருக்கிறீர்கள். இதனால் அரசியலில் அல்லது நாட்டில் எந்தப் பிரச்சனையும் தீர்ந்து விடப் போவதில்லை.

நீங்கள் பிறப்பதற்கு முன்பிருந்தே எரிந்து கொண்டிருக்கும் எந்தப் பிரச்சனையும் இது வரையில் அப்படியேதான் இருக்கிறது அதை ஒரு முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றால் அது அரசியல் சட்டத்தால் மட்டும் தான் முடியுமே தவிர....உங்களின் கொந்தளிப்பால் இயலாது...என்று மனசுக்குள் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் எல்லோரும் இப்போது  வாழ்க்கையில் பொறுப்பேற்கும்  தருணத்தில் நின்று கொண்டிருக்கிறீர்கள். ஒரு அரசியல் வில்லுக்கு அம்பாகி அழிந்து போக வேண்டிய நிர்பந்தம் உங்களுக்குத் திணிக்கப் படுவது அநியாயம்.

யார் கல்லூரி மாணவர்களைப் பகடைக் காயாக்கி குளிர் காய்கிறார்களோ அதே மாணவர்களைக் காக்கும் பொறுப்பு உங்களைப் பெற்ற தாய்மார்கள் எங்களுக்கும் உண்டு. நம்  பிள்ளைகளுக்கு ஒன்று என்றால்..ஒரு இழப்பு வந்து விட்டால் அந்த இழப்பும் வலியும் நமக்குத் தானே? ..அது நேராமல் நம் பிள்ளைகளைக் காப்பாற்றுவது எங்களது கடமை.அதற்கு ஒரே தீர்வு....பெற்ற பிள்ளைகளைக் காக்கும்

பொருட்டு தாய்மார்களாகிய நாமும்  அவர்களுக்கு எதிராக உண்ணாவிரதம் இருப்போம்...வாருங்கள்...திரளுங்கள்...ஒன்று கூடுங்கள்...சமூகம் என்பது நாம் தானே..?

மாணவர்களே...! நீங்கள் வருங்காலத்தில் குடும்பத்தைத்  தாங்கும் தூண்கள்...! உங்களை  ஓட்டுக்கும், நாட்டுக்கும் ஏவுகணைகளாக ஆக்க விடாதீர்கள் ! உங்களை ஏவி விட்டு ஆதாயம் தேடும் அனுபவசாலிகளை நீங்கள் உணர்ந்து கொள்ளுங்கள்.

மாணவர்களே..! அரசியல் தலைவர்கள் சிரித்தபடி போஸ் கொடுத்துக் கொண்டு கட் அவுட்டில் நிற்க, படித்து வேலைக்குப் போய் உங்கள் வாழ்கையை நிர்ணயிக்க வேண்டிய நிலையில் இருக்கும் நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள பொறுப்பை மறந்து தேவையில்லாத போராட்டத்தில் ஈடுபட்டு போலீஸ் காரர்களின் கையிலிருக்கும் லத்திக்கு இரையாகாதீர்கள் .

ஏற்கனவே உங்களை சினிமா மோகமும்...ஹீரோக்களின் ஆதிக்கமும் கட்டிப் போட்டு வைத்திருக்கிறது. இப்போது அரசியல் தூண்டிலுகுள்ளும் புழுவாக உங்களையே மாட்டி வேடிக்கை பார்க்கும் போது உங்களை  பெற்ற எங்களால் இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க  முடியவில்லை..!

கல்லூரிக்குச் செல்லும் ஒவ்வொரு மாணவ மாணவியின்  உயிரும் உத்தரவாதமின்றி அராஜகத்துக்கு அடமானம் வைக்கப்பட்ட அவலநிலை உருவாகிக் கொண்டு வரும் வேளை இது..! இதிலிருந்து பொறுப்பையோ பாதுகாப்பையோ அந்த நிறுவனங்கள் ஏற்காத போது  நாமாவது கவனிக்க வேண்டாமா?  தயவுசெய்து  அரசியலுள் கல்லூரி மாணவர்களை நுழைக்காதீர்கள். வேரிலே விஷத்தைக் கலந்தது போதும் இப்போது வித்திலும் விஷத்தை ஏற்றாதீர்கள். நாளைய இந்தியா இவர்கள் கையில்...கலப்படமில்லாமல் காக்கப் படட்டும்.. இவர்கள் காணும் உலகம் புதிது. ஆதலால் மாணவர்களே...முதலில் படித்துப் பட்டம் பெற்று வெற்றியோடு....

வேதவல்லி பேசிக் கொண்டிருக்கும் போதே,.உண்மை சூடேறி ஆவி பறக்க ஆரம்பித்தது...!  

என்னய்யா...இது நீ பாட்டுக்கு அந்தம்மா கையில் மைக்கை கொடுத்துட்டு வாயைப் பார்த்துட்டு நிக்கிறீங்க ..அந்தம்மா நமக்கு எதிரால்ல பேசிட்டு இருக்கு...போயி மைக்கைப் பிடுங்குங்கப்பு....! கூட்டத்தில் இருந்து ஒரு குரல்.

அட...இருல்ல ...எம்மாந்தூரம் போகுதுன்னு பார்ப்பம். அங்கிட்டு காலேஜு பசங்க வேற.. பப்ளிக் கூட்டத்தைப் பார்தீல்ல...இப்ப எங்கிட்டிருந்து மைக்கைப் புடுங்குறது....அத்த நீ செய்யலாமுல்ல ...பெரீசா சொல்ல வந்துட்டியா.? மைக்கைக் கொடுத்தவன் தவிக்கிறான்.

இவரு என்ன இப்படிப் பேசுறாரு...இத்த நம்ம தலைவரு கேட்டா உனக்கு சங்கு தாண்டி...! என்று சொல்லிக் கொண்டே நகரந்தான் அவன்.

தலைவா....பார்த்துப் போ...கோளாறா .....எதுனா செஞ்சு வெச்சுப்புடாதே...மொதலுக்கே மோசம் போயிருவோம்....என்று மைக்கை வாங்கப் பரபரத்தவர்....திரும்பிப் பார்க்கும் தருணத்தில்..!


சர மாரியாக கருங்கற்கள்  பேசிக் கொண்டிருக்கும் வேதவல்லியின்  தலையைப் குறி பார்த்து வந்து விழுகிறது.

எதிர்பாராத தாக்குதலால் அப்படியே ரத்தம் வழிந்தோட  மயங்கிச் சரிந்தவளை பார்த்து ஓடோடி வருகிறான் ஆனந்த்.

ஐயோ....அம்மா...! என் அம்மா மேலே எவண்டா கல்லெறிஞ்சது ? ஆக்ரோஷத்தோடு கேட்டுக் கொண்டே ரத்தம் பீறிட்டு  வழிந்து கொண்டு மயங்கிக் கிடக்கும் அன்னையைத் தாங்கிய ஆனந்தை தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் கூட்டம்....திரண்டு.....என்னது  ஆனந்தோட அம்மாவா? என்று பரபரப்போடு செயல் படுகிறார்கள்.

கூட்டத்தில்   "மாணவன் கல்லெறிந்து மகளிர் காயம்.." என்று யாரோ பத்திரிகைக்குச் தலைப்புச் செய்தி தந்து கொண்டிருந்தார்கள்.

என்னாது? மாணவன் கல்லெறிந்தானா ..? நல்லாருக்கு நியாயம்....நாம எங்கடா இத்தச் செஞ்சோம்...?

நியாயம் சொன்ன ஆனந்தோட அம்மாவைத் தூக்கப் பார்த்தாங்கடா..... இந்த விஷயம் காட்டுத் தீ போல பரவ ஆரம்பித்தது.

அதற்குள் ஆம்புலன்ஸ் வரவும் , அதில் வேதவல்லியை ஏற்றிக் கொண்டு ,ஆனந்தும் தோழர்களும் மருத்துவமனை நோக்கிப் பறக்கிறார்கள்.

"ஆனந்தின் அம்மாவை" அவசர பிரிவில் சேர்க்கப்பட்ட விஷயம் அறிந்து அப்பல்லோ மருத்துவமனையின் முன்பு மாணவர்களின் கூட்டம் அலைமோதியது.

ஒரு நிமிஷம் யோசித்துப் பாருங்கடா...நம்ம அம்மாவும் இப்படித் தானே?  நம்மளுக்கு இது மாதிரி ஏதாச்சும் ஒண்ணு ஆகி போச்சுனா இப்ப நாம துடிக்கிறாப்பல தானே துடிப்பாங்க.! அவங்க பேசினது  தான் நிஜம். மாணவர்களின் மனங்கள் மருத்துவமனை நோக்கித் திரும்பியது.

அதற்குள் பி.எட்.கல்லூரி முதல்வர் வேதவல்லியை கல்லால் அடித்துத் தாக்கிய கல்லூரி  மாணவர்களை  கைது செய்யும்படி வந்த அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்க வந்திருக்கிறோம் என்று மருத்துவமனைக்குள் நுழைந்தனர் போலீஸ் அதிகாரிகள்.

 வேதவல்லி கண்விழிக்கக் காத்திருந்த அவர்கள் அவசர பிரிவின் கதவருகில் பொறுமையின்றி காத்துக் கொண்டு நின்றிருந்தார்கள்.

அதிர்விலிருந்து விழித்த வேதவல்லி....அருகில் ஆனந்தனைப் பார்த்ததும் மெல்ல நினைவு வந்தவளாக   அவனையே பார்க்கிறாள்.

தலையில் கட்டுகளோடு தன்  அம்மாவைப் பார்க்க அவன் கண்கள் கலங்குகிறது. தண்ணீர் தண்ணீர் என்று சைகை செய்ததைப் புரிந்து கொண்டு ஆனந்த் மெல்ல மெல்ல தண்ணீரை தனது தாயின் வாயில் ஊற்றுகிறான் அருகில் நின்று கொண்டிருந்த அவனது தோழர்களும் தலை குனிகிறார்கள்.

நியாயம் தராசில் கனமாக நிற்கத் தொடங்கியது.


வேதவல்லி விழித்துக் கொண்ட செய்தி கேட்டதும், போலீஸ் அதிகாரி ஒருவர் நேரில் வந்து...."ரொம்ப சாரி மேடம்....நீங்க ரெஸ்ட் எடுங்கள். பிறகு ஒரு புகார்க் கடிதம் கொடுங்கள். ...நாங்க அந்த மாணவர்களை கைது செய்வோம்....அவங்களை முட்டிக்கி முட்டி தட்டினாத் தான் உருப்படுவாங்க...." என்று ஒரு தோரணையில் சொல்ல ஆரம்பிக்கிறார்.

ஐயா...பழிக்குப் பழி...கண்ணுக்குக் கண் என்ற நிலை நீடித்தால் இந்த உலகத்தில் பார்க்க யாருக்கும் கண்களே இருக்காது. இறைவன் கொடுத்த எந்த நல்லதும் இறுதி வரைக்கும் மனிதனால் உணர  போவதற்கு இந்தப் பாழாய்ப் போன பழி வாங்கும் உணர்வு தான்.

அதானால் ப்ளீஸ்...என்னை யார் அடித்தார்கள் என்று தேடி உங்கள் நேரத்தை வீணாக்காமல் என் சார்பில் அவர்களை மன்னித்து  விட்டு விடுங்கள்.இது எனது வேண்டுகோள்  அவர்கள் அப்பாவி மாணவர்கள்,  பரீtசை எழுதும் நேரத்தில் சிறைக் கம்பிகள் எண்ணக் கூடாது ! என்று சொல்லியபடியே.கண்களை மூடிக் கொண்டாள் வேதவல்லி.

அங்கிருந்த அனைவரும் வேதவல்லியின் வாக்கை வேதவாக்காக ஏற்று அதற்குக் கட்டுப்பட்டது போல மௌனமாக நின்றார்கள். அந்த மௌனத்திலிருந்து 'நீதி' பிறந்ததை சொல்லு ம் விதமாக பக்கத்திலிருந்த பிரசவ வார்டில் இருந்து புதிதாகப் பிறந்த சிசுவின் இனிய அழுகுரல் முதன்மையாய்க் கேட்க ஆரம்பித்தது.

பாரதக் குருச்சேத்திரக் களத்தில் கிருஷ்ண பராமாத்மா "போருக்குப் போக வேண்டும் அர்ஜுனா" என்று கீதை  ஓதினார்.   கலியுகத் தாய் வேதா கல்லூரி மாணவர் படிக்கும் போது, அரசியல்  போராட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என்று புதிய கீதா உபதேசம் செய்தாள் !  அதற்கு வெகுமதி  தலையில் பலத்த கல்லடி !




 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக