திங்கள், 7 மே, 2012

சரணாகதி...!


உறங்கும் உயிரை 
அசைத்து விட்டாயே..
சிப்பியின் வாயைத் 
திறந்து விட்டாயே..
இதய ஓட்டிற்குள் 
ஒளிந்து கொண்டாயே
உன்னையே உலகமாய் 
எனக்குள் தந்தாயே.....!

வாசற்கதவில் கீதமாய் 
வெள்ளி மணி...அசைய 
இருட்டுச் சுரங்கத்தில் 
வைரமணி...ஒளிர 
உள்ளங்கைகளில் நீளும் 
ஆயுள் ரேகை..
ஆயுசு பூரா....இசைக்குமோ..
ஆனந்த கீதை...!

பாறை மனதுள் படரும் 
பசுங்கொடியே...
பள்ளிகொண்ட மனதுள் 
ஒலிக்கும் பான்ஜசன்யமே...
சிரிக்க வைத்து  ரசிக்கும் 
சிந்தாமணியே...
உனக்குள் வசிக்கும்
அட்சய  தருவே...!

ஓங்கி உலகளந்த ...
பாத மணிச்சிலம்பே.....
ஓயாமல்  பேசும் 
மௌன குருவே..ரமணனே...
ஓடும் ஆறும்  பெயர் பாடுமே..
ஓரங்க நாடகத்தின் ஒய்யாரமே
அண்ணாமலைக்கே....
அற்புத வாரிசே...!

பாடாத தேனீ  என்னுள்ளும்
பாட்டுத் தரும் கலையரசே....
சிற்பி கை நழுவி இதயம்
தொட்ட  மாய உளியே...மந்திரமே
உன்னோடு நான் வாழ்வதும்..
இந்த  ஜென்மத்தின் சத்தியமே...

கடல் கண்டெடுத்த 
வலம்புரி சங்கே..
கடல்சிப்பி கண்டெடுத்த 
சிற்ப உளியே..
பவளப்பாறையின் 
மரகத வீணையே..
மந்திர மலைக்குள் 
மகத்தான புன்னகையே...!
குறுநகையில் ஏழுலகை 
கட்டியாளும் கண்ணனே...!

ஓய்ந்து கிடந்த நெஞ்சத்தில் 
ஓயாது பன்னீர் தெளித்து
பட்டாடை கட்டிப் பார்த்த 
பரம புனிதன் நீ...
எழுந்துவிட்ட இதயத்தில் 
இன்ப ஊற்றைத் தேடி
நித்தம் நீராடும் நிர்மலன்  நீ...!
கவி தந்து கவி பாடிக் 
கொண்டாடும் சித்தன் நீ..!

மதுரையம்பதிகே 
மகத்துவம் ஈந்த  மாணிக்கமே..
மரகதமே... பத்தியில்  தவழ்ந்த எனை..
பரத்தில் சிக்க வைத்து 
பொன்னம்பலத்தானின்..
வெள்ளியம்பல தரிசனம் காண
நாடகம் பார்க்கும் ரமணா..
என் குருவே....!
நிந்தன் சேவடி சரணாகதி.
===============================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக