வியாழன், 26 ஏப்ரல், 2012

கடலுக்கும் ....எனக்கும்..!




கடற்கரையோரம்...
பாறை மனம்...
பளுவோடு..
அடுக்கு சோக 
சிந்தனையில்
அக்கறை வரை 
அடித்து செல்ல 
ஆறாத ரணங்களை 
இழுத்து..ஆற்றுவாயோ 
அலை அன்னையே..!

தனிக்கடல் தான் 
நானும்...
யாருமில்லை 
எனக்கும்....!
சோகங்களை 
கேட்டு செல்லு..
என் மனதை 
தேற்றி சொல்லு..!

அவரைப் போல் 
கால் நனைத்து..
மணல் வீடு 
கட்டியாடி...
காதலை 
கொட்டி விட்டு..
காற்று மட்டும் 
வாங்கி கொண்டு..
தவிக்க விட்டு 
சென்றிடாதே..

என் மனதும் 
கொஞ்சம் கேளு..
இங்கும்  இதயம் 
கொஞ்சம் பாரு..
ஏக்கம் 
கொஞ்சம் தீரு..!
கண்ணீர் விட்டழுதே...
உப்புக்கடலான 
கதை கேளு..!

எல்லை தாண்டாமல்
எனக்குள் 
அமிழுகின்றேன்....
தவிப்பதும்..துடிப்பதும்....
கண்களில் 
கொண்டு செல்..!
பாம்பறியும் 
பாம்பின் கால்....
நீயறியாயோ...
என் மகளே..!

அடித்துச் 
சொல்லிச் சென்றது
சிற்றலைகள்...
காலடியில்...
சீறி பாய்ந்து 
சென்றது பேரலைகள்....
முகத்தடியில்...
பாசத்தோடு தடவி 
சொன்னது
மெல்லியலைகள் ..!
கதறி சொன்னது 
காதோடு...
சோக அலைகள்...!

பாறை மனம்...
அலையோசையில் 
மோதி சிதற..
பாரம் குறைந்து
பாரம் குறைத்து..
பாரம் ஏற்றி..
போராட்ட வாழ்வின்
அலைகள் மிக சிறிதாய்..
தன் பங்காய் 
இருசொட்டு
உப்புக்கடலுக்கு...
தானமாய்..!

திரும்பி நடந்த
சுவடுகளை தூரத்து 
அலையொன்று..
பாசத்தோடு அழிக்க..
எங்கிருந்தோ 
ஒரு அலைகை 
விழிநீரைத் 
துடைத்த திருப்தி...
கடலுக்கும் எனக்கும்..!
------------------------------
--------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக