புதன், 11 ஏப்ரல், 2012

ஒரு குளத்தில் இரு மலர்கள்.....!


ஆதவன் கடல் குளித்து.. விளக்கேற்ற...
காதலனைக் கண்டதும் மகிழும் கன்னியாய்..
பங்கயம் இதழ் விரித்து மலர்ந்து சிரிக்க..
அருகிருக்கும் அல்லிக்கென்ன....சோகம்..?
இதழ் இறுகி....முகம் கவிழ்ந்து துவண்ட
விழிதனில் தளும்பும்... கண்ணீர் குளம்..!


காதலன் வரவால்..கண் மலரும் கமலம்..
அல்லிக்கண்..துடைத்துத் தேற்ற...
தேம்பாதே....விசும்பாதே தங்காய்...
மாலையில் வருவார் மதிவாணன்...
உறவாய்...எந்தன் அருகிருக்க ..என்னே..
மாதவம் செய்தாயடி மதுரவல்லி....!


கமலமும்...அல்லியும் பூக்குளத்தில்..
தட்டுக்கள்... நிறைந்த வைரம் ஏந்தி...
காத்திருக்கும்..கால்கடுக்க .ஏக்கங்கொண்டு..
அன்பர்கள் வந்துதித்து....முகம் நிமிர்த்த..
காலையில் கதிரவன் கமலத்திற்கு...!
அந்தியில் மதியவன் மதுரத்திற்கு..!


நித்தம் நடக்கும் இந்த வெள்ளோட்டம்...
அல்லியும்... கமலமும்..பூக்குளத்தில்
அவரவர்தம் அன்பர் வரவு வேண்டி...
மற்றவர் வரவில் மலர்ந்து நில்லாத
பண்பினை உணர்த்துதோ...தன்குணத்தில்..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக