சனி, 7 ஏப்ரல், 2012

சந்தனப் பூ..




சந்தனப் பூ..

கவிதை: ஜெயஸ்ரீ ஷங்கர்.
நன்றி:திண்ணை.


பஞ்சு மனம் கொண்டவர்…
வானத்தைச் சுருக்கி
இதயத்துள் அடக்கி .
ரணமனங்கள் கண்டெடுத்து
மருந்திடும் மகத்துவம்..!

புனிதம் குணத்திலும்
புண்ணியம் மனதுள்ளும்
ஒற்றைத் திரியாய் …நின்று..
ஏற்றும் ஒளிச்சங்கிலிகள்..!
புவியெங்கும் ஒளி சேர்த்து..
இருளை துரத்திய தாயே..!

கோடிக்கண்கள் தேடிடும்…
யாவர் கால்களும் நாடிடும்..
வெள்ளை ரோஜா உம்மைப்
போற்றித் துதிகள் பேசிடும்…
என்றோ அரும்பிய இயக்கம்
இன்றும் வாழும் அதிசயம்..!

அன்புக் கரங்கள் ஏந்தி…
கருணையால் துயர்துடைத்து…
கனிவாய் தெம்பளித்து..
தொட.. விலக்கியவரைத்.
தொட்டணைத்தீர்..!
தேசியக் கொடியையே
நிமிர வைத்தீர்..!

கருணைக்கும்..கடமைக்கும்
உலக வரைபடத்தில்
நிரந்தர முகவரி .
உண்டென எழுதிவைத்தீர்…!
அன்னையுன்… முகத்திலும்
ஏற்றி வைத்தீர்..!

வெள்ளைப் புடவையில்
எளிமை மனதில்..சமாதானத்தை
சுமந்து..பிரம்மாண்ட இயக்கத்தின்
ஒரே தூணாய்..நின்று .இப்புவியைக்
கடந்திட்டாலும்..விழுதுகள் தாங்கும்
ஆலமாய்..இறைவன் ஈந்த சந்தனப் பூ ..!

அன்னைத் தெரசா…!
உங்கள் கனவனைத்தும்.
இயங்கும் இதயமாய்..
இன்னும்.. உயிரோடு
உலவிக் கொண்டுதான்
இருக்கிறது…சந்தனமாய்…!
==============================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக