வியாழன், 10 மே, 2012

ஆத்ம விமோச்சனம்..!

 
மடிசுரந்து நுரைததும்பி
இனித்திடும் ஆவின்பால்..
வெறும் பாலாய் சுவைத்திடில்
ஆகுமோ ஏதும்..?

பாலினுள்ளே 
துளியாய்
ஞானமெனும் 
உரையூற்றினால்....
கெடும்முன்னே தன்னை மாற்றி
ஆகிடுமே பசுந்தயிராய்..!

ஞானம் தந்த தயிரை
அறிவு கொண்டு கடைந்தால்..
திரளுமே..தானென்ற பந்தம்
துறந்த வெண்ணையாய்..!
விடாது...

வெண்ணையைப் பேரின்ப
நெருப்பால் உருக்கினால்..
மணக்குமே...ருசிக்குமே...
நெய்யாய்..
நாள் கடந்தும்....!

அதையும் விடாது..
ஆணவத் திரியிட்டு
சுடரொளியாக்கினால்....!
தன்னைத்  தந்த பாலுக்குப்
பசுநெய் தருமே மோட்சம்...!

அனைத்தும் இருக்கும் இவ்விடம்....!
அனைத்தும் இறக்கும் இவ்விடம்..!
பாலுக்கே நெய்
மோட்சம் தரும் சூட்சமம்..!

மனிதமனம் கண்டால்...!
விடுமா.. சும்மா?
தேடாதோ..? நாடாதோ..?
இறுதிவரை தானும்...
போராடாதோ?

ஒன்பது ஓட்டை தாண்டி...

மும்மலமும்..ஒழித்து..
பேரின்பநிலை அடைந்து..
தன்னைத் தாண்டி..தன்னுள்ளே தாண்டி..


அதற்குள்ளும் ஒடுங்கி..
நெய்போல் வாழ்வோரைக் கடந்தும்..
தீபம்போல் ஒளிர்வோரைத்  தொழுதும்..
ஒளியை விட்டு காற்றோடு
சுகந்தமாய்க் கலக்கும்..

இன்னும் ஏந்தித் தவிக்குமோ...
உயர்  நிலைக்காய்
உன்னத உள்ளம்..
ஆத்ம விமோச்சனத்திற்காக..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக